வியாழன், 20 பிப்ரவரி, 2020

கடவுளைப் புதைத்தல்

பல்லாயிரம் முறை
ஸ்ரீ ராமஜெயம் எழுதியிருப்பாள்
திருப்பதியில் வரிசையில்
காத்திருந்து
முடி காணிக்கை தந்தாள்

தெருமுனையைக் கடக்கும்போதெல்லாம்
சிவசிவா எனக்
கன்னத்தில் போட்டுக்கொண்டு
இறைஞ்சி வேண்டினாள்

போதாக்குறைக்கு
அவன் பிள்ளை
முருகனிடமும்
கோரிக்கை வைத்தாள்

மாரியம்மனுக்கு
வேப்பஞ்சாலை சுற்றி
அபயமளிப்பாள்
அவளெனக் காத்திருந்தாள்

தெய்வ குத்தமாயிருக்குமோ
எனப் பயந்து
குலதெய்வத்திற்குப்
பொங்கல் வைத்தாள்

தேவாலயத்தைக் கடக்கும்போது
ஏசப்பா என மனம் உருகி
அழைத்தாள்

மசூதியைக் கடக்கும்போதுகூட
கன்னத்தில் போட்டுக்கொண்டாள்

காத்திருந்து காத்திருந்து
கடைசியில்
அவளே கடவுளானாள்

ஆதியில் கடவுளர்கள் புதைக்கப்பட்ட
அதே இடத்தில்
அவளையும் புதைத்தேன்
அவள் கருப்பையில்
வளர்ந்த புற்றுக்குப் பாலூற்றினேன்.

-     ச. நீலமேகன்

 

வியாழன், 13 பிப்ரவரி, 2020

புதன், 12 பிப்ரவரி, 2020

திங்கள், 10 பிப்ரவரி, 2020

ஆதலால்……

ஆதலால்……

கொஞ்சநேரம்
உன் குழந்தையை
நான் தூக்கிவைத்து
கொஞ்சி விளையாடிக்கொள்கிறேன்

நிச்சயம்
என்னால் உன் குழந்தையோ
உன் குழந்தையால் நானோ
மகிழக்கூடும்

எதிர்பாராமல் சிலபேர்
உன் குழந்தையை
என் குழந்தையா
என
உசாவக்கூடும்

அப்போதெல்லாம்
உன் பெயரை
உற்சாகமாய் சொல்லுவேன்

ஓடி விளையாடி
ஓய்ந்தபின்
சொந்தக் குழந்தையை
சிருஷ்டிப்பதைக் குறித்து
நானும் எண்ணுவேன்

நிச்சயம்
நீயும் ஒருநாள்
என் குழந்தையைத் தூக்கிக்
கொஞ்சக்கூடும்

விளையாடத் துணையின்றி
ஏங்கி நிற்காமல்
அவைகள்
அப்போது
எக்காளமிட்டோடும்
பூமிப்பந்தைப் புரட்டி 
விளையாடும்

ஆதலால்…

கொஞ்சநேரம்
படிக்கத்தாயேன்...!
உன் கவிதைப் புத்தகத்தை…!

-          ச. நீலமேகன்.