திங்கள், 16 ஜனவரி, 2017

நிரபராதி

தூக்கு தண்டனைக்கு
நேரம் குறிக்கப்பட்ட
கைதியைப்போல
வகுப்பறைக்குள்
நுழைகிறேன்

தூக்கிலிடப்படுவதற்கு
முந்தைய கடைசி
நேர உன்னதப் பொழுதாய்
ஒவ்வொரு நொடியும்
மதிப்புமிக்கதாய்
வகுப்பறையில்
பாடம் நடந்துகொண்டிருக்கிறது

ஆசை இருந்தும்
வாழ  வயதிருந்தும்
வாய்ப்பு மறுக்கப்பட்டவனின்
மிச்சமிருக்கிற
வாழ்க்கையைப் போல
பாடம்
பாதியில் நிற்கிறது.

நான் சாவை
மறந்திருந்த நேரத்தில்
என் கழுத்தில் மாட்டப்படும்
தூக்குக் கயிறாய்
மணி ஒலிக்கிறது

என் அனுமதியைப்பற்றி
கவலைப்படாமல்
மாணவர்கள்
புத்தகங்களை மூடிப்
பைக்குள் செருகும்போது
நான்
துடிதுடித்துச் சாகிறேன்.

கவிதை

வழியில் கிடக்கிறது
தாயின் அன்பு
ஒருமுழம் பூ

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

தனிமை

எல்லோரும் சொல்கிறார்கள்
நான் தனியாகக் கிடக்கிறேன்
என்று.

கொத்திப் பிடுங்கும்
கொசுக்கள்

ஈ என்று இரக்காமல்
தானாக உண்ணும் ஈக்கள்

சுற்றித் திரிந்தாலும்
வரிசையாய் செல்லும்
சிற்றெறும்புகள்

புத்தகம் சுவைக்கும்
பூச்சிகள்

எல்லா மூலையிலும்
எட்டுக்கால் பூச்சிகள்

படுக்கையில் உலவும்
பாசிகள்

சுவற்றில்
ஊரும் பல்லிகள்

கூடுகட்டும்
குளவிகள்

எப்போதாவது வந்துபோகும்
தேன்சிட்டு

இன்னும்
எனக்கே தெரியாமல்
என்னோடு வாழ்வது
எத்தனையோ?

ஒன்று தெரியுமா
உங்களுக்கு?

தலைமுறை பல
கண்டவன் நான்!

குட்டிபல்லியாய் இருந்ததெல்லாம்
இப்போது குட்டி போட்டுவிட்டன

எட்டுக்கால் பூச்சிக்குப்
பிள்ளைகள் ஏராளம்

கொசுக்களுக்கு ஏது?
குழந்தைக்கு பஞ்சம்

எறும்புகள் மட்டும் என்ன
ஏமாந்ததா?
எங்கு பார்த்தாலும்
அவர்கள் பிள்ளைகள்தான்

குளவிகள் பிரசவித்துப்போனதை
கூடுகள் காட்டும்

யாராவது சொல்லுங்கள்
தனியாக வாழ முடியுமா?

என்வீட்டில் எல்லா நாளும்
பொங்கல்தான்
பொங்கித்தானே ஆகவேண்டும்
கூட்டாஞ்சோற்றை.

கவிதை

குப்பைகள் குவிந்தால்
குழிதோண்டி புதையுங்கள்
மண்ணுக்கு உரமாகும்
கொள்ளிவைத்து கொளுத்தாதீர்கள்
இயற்கை அன்னை
இறவாமல் வாழட்டும்