செவ்வாய், 24 செப்டம்பர், 2019

பாரதி பாட்டு

ஒரு பக்கக் கதை

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் மார்க்ஸிய, பெரியாரியக் கருத்துக்களை நண்பர்களோடு சேர்ந்து ஆர்வத்தோடு வாசிப்போம் அதன் தாக்கத்தால், எங்களுக்குப் பாடமாக இருந்த படைப்பிலக்கியப் பாடத்திற்காக எழுதிய ஒரு குட்டிக்கதை….

பாரதி பாட்டு

“எனக்கு பொழுதுபோற நேரத்துல இந்த ராமுவ தேடுறதே வேலையா போச்சு… பொழுதோட அவன புடிச்சு சங்கிலில கட்டிப்போடுங்கன்னு சொன்னா அத யாராவது கேட்டாத்தானே….. இப்ப நாந்தான் தெருத்தெருவாக அலையவேண்டி இருக்கு…

எப்பவும் இந்தத் தெருக்கோடியிலதான் சுத்திக்கிட்டு இருப்பான் இன்னைக்கு இவ்வளவு நேரம் தேடியும் அவன காணலயே!.

யாராவது புதுசா கேர்ள் ஃப்ரெண்ட் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கானா!?

ஏன் அவன் சுத்தக்கூடாதா!? சுத்தனாத்தான் என்ன தப்பு?! நாங்கபோட்ட சோத்த தின்னுட்டு எங்க வீட்டு வாசலையே சுத்திசுத்தி வந்தாலும் அவனுக்குன்னு உணர்ச்சிகளே இருக்காதா என்ன?!....... இவன் என்ன ஊர் ஒலகத்துக்காக வேஷம் போட்டு திரியற மனிஷ ஜென்மமா என்ன?

அட இந்த ராமுவ பாத்தியா!…. தனியா இருக்கற அந்த  ஒத்த வீட்டுக் கந்தசாமி வாத்தியார் வீட்டுத் திண்ணையில காலதூக்கி ஒன்னுக்கு அடிச்சிட்டு, அங்க என்ன சுத்திசுத்தி வந்து மோந்து பாத்துக்கிட்டு இருக்கான்.

டேய் ராமு இங்க என்ன பண்ணிகிட்டு…. தெனமும் உன்னைத் தேடுறதே வேலையா போச்சு” என மனசுக்குள் புலம்பிக்கொண்டே, சுற்றி அலைந்ததில் கால் வலியெடுக்கவே கந்தசாமி நாயுடு வீட்டுத் திண்ணையில்  போய் உட்கார்ந்தேன். ராமு வாலை பலமாக ஆட்டிக்கொண்டு முன்னங்காலை தூக்கிக்கொண்டு மேலே உரசிக்கொண்டு வந்தது.

வீட்டுக்குள் பெண்ணின் அலரல் சத்தம்….

“என்ன தைரியம் இருந்தா எங்கிட்டயே பயமில்லாமல் சொல்லுவ….”.

“அவளை விட்டுடுங்க அடிக்காதீங்க……”

“எல்லாம் நீ கொடுத்த செல்லந்தான்டி… எவ்வளவு திமிர் இருந்தா அந்த முதலியார் பையனைக் காதலிக்கிறேன்னு எங்கிட்டயே சொல்லுவா! மொளச்சு மூனு எல விடல, இதுக்கெல்லாம் காதல் கேக்குது!...”

“முடிய விடுங்க அவள அடிக்காதீங்க..”

“இவ சொல்ற மாதிரி இவ இஷ்டத்துக்குக் கல்யாணம் பண்ணி வெச்சா என்னால ஊர்ல தலைகாட்ட முடியாது. ஜாதி விட்டு ஜாதி இவளுக்குக் காதல் கேக்குது…. அந்த முதலியார் வீட்டுப் பையன் ரொம்ப நல்லவனாம் அன்பா பாத்துக்குவானாம். வெக்கங்கெட்ட கழுத… படிச்ச பையனா வேலைக்கு போறவனா மட்டும் இருந்துட்டா போதுமா?! குலம் கோத்திரம் ஒன்னும் பாக்க வேணாம்?!. இந்த ஊர் என்ன சொல்லும்?! என்ன எவனாவது மதிப்பானா? இங்க பாரு இன்னொருதடவ அவனைப் பத்தி பேசினையோ உன்ன வெட்டி பொதச்சிடுவேன் ஞாபகம் இருக்கட்டும்”

இந்த கந்தசாமிநாயுடு வாத்தியார் பொண்ணு முருகேச முதலியார் பையன லவ் பண்றா போல இருக்கு!

சரி நாம வீட்டுக்கு கிளம்புவோம் அப்புறம் என்னத் தேடி யாராவது சுத்த ஆரம்பிச்சிடப் போறாங்க….

“ஏய் ராமு…. வா!”

காலையில பத்து மணி இருக்கும் அந்தப் பள்ளிக்கூடம் பக்கமா போறேன்……

“சாதிகள் இல்லையடி பாப்பா

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” எங்க எல்லாரும் திருப்பி சொல்லுங்க..

 

மரத்தடியில் பாடங்கேட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள் திருப்பிச் சொல்லின..

“சாதிகள் இல்லையடி பாப்பா

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று.

 

பாடம் நடத்திக்கொண்டிருப்பது யார் என்று கவனித்தேன்….அட  கந்தசாமி நாயுடு!

பாரதியார் பாட்டு பாடம்நடத்துறதுக்கு மட்டும்தான் போல இருக்கு. இந்த பாரதியார் பாட்டு இந்த வாத்தியாருக்கே விளங்கல…அந்த குழந்தைகளுக்கு எங்க விளங்கிட போவுது என மனசுக்குள் நினைத்துக்கொண்டே திரும்பிப் பார்க்கிறேன்..

இந்த ராமு… மேரி விட்டு ரோஸி நாயோடு விளையாடிக்கொண்டிருந்தது.

 

-          ச. நீலமேகன்.


கருத்துகள் இல்லை: