திங்கள், 28 மார்ச், 2022

வண்டுருட்டலாம் பழம்



வண்டுருட்டலாம் பழம்

-                      சிறுகதை

1.

குழந்தைகள் அர்த்தங்களைப்பற்றி ஆராய்வதில்லை அது கிளிப்பிள்ளையைப்போல சொன்னதைச் சொல்லும்.  போகப்போக மனிதர்களிடமிருந்தே பொய், சூது, வஞ்சம் என மனிதர்களுக்கே உரித்தான தீயபண்புகள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும். அதனால்தான் குழந்தைகளின் முகங்கள் பூத்தமலர்போல பிரகாசிக்கின்றன. ஆனால் காலம் வளர்த்துவிட்ட மனிதர்களைப் பார்க்க வேண்டுமே… அவர்களின் முகங்களில்தான் எத்தனைஎத்தனை முகமூடிகள்! ஆளுக்கு ஏற்றார்போல நொடிக்குநொடி மாற்றிக்கொள்ளும் அரிதாரங்கள்! மாயத்தோற்றங்கள்.

ஆனால் சிறுபிள்ளைப் பருவம் என்பது அப்படியா? எவ்வளவு இன்பகரமான உலகமது ஒவ்வொரு நொடி வாழ்க்கையையும் எத்துணை அடர்த்தியானதாக வைத்திருந்தது. என்ற எண்ணம் பேருந்தில் அமர்ந்திருந்த குழந்தையைப் பார்த்தபோது ராமலிங்கத்திற்குத் தோன்றியது.

பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த அந்த குழந்தையின் கையில் ஒரு பிளாஸ்டிக் காற்றாடி..  அந்த காற்றாடி சுற்றும் அழகை அது ரசிப்பதாகத் தெரியவில்லை. அது ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியே  வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது.

ராமலிங்கம் அந்தக் குழந்தையின் கையில் சுற்றிக்கொண்டிருந்த காற்றாடி தீடிரெனச் சுற்றாமல் நின்றுவிட்டதைப் பேருந்து ஒரு குலுக்கு குலுக்கி தூக்கிப்போட்ட நிலையிலும் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். குழந்தை காற்றுவீசும் நேர்எதிர் திசையில் காட்டினால்தானே காற்றாடி சுற்றும். குழந்தையின் கையிலிருக்கும் கற்றாடியில் போய் ராமலிங்கத்தின் மனம் சிக்கிக்கொண்டது. அந்தக் குழந்தை அந்த பிளாஸ்டிக் காற்றாடியைக் காற்றுவீசும் திசைக்கு நேர் எதிரில் எப்போது பிடிக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தான். ஆனால் அது நடந்தபாடில்லை. ஒருவன் நினைப்பதை மற்றொருவன் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டால் மனித வாழ்வில் சிக்கல் ஏது!. ராமலிங்கம் நினைப்பது குழந்தைக்கு எப்படித்தெரியும்?.

கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தை தன் அம்மாவின் மடியில் உறங்கிவிட்டது. குழந்தையின் அம்மா தன் மடியிலிருந்து சரிந்துவிழுந்த குழந்தையை தூக்கி அணைத்துப் பிடித்தபோது காற்றாடி விழித்துக்கொண்டு சுற்றத்தொடங்கியது. ராமலிங்கத்தின் நினைவுகளும்தான்.

ராமலிங்கத்தின் மனம் அவனது இருபத்தைந்து வருஷத்துக்கு முந்தைய வாழ்க்கையைப் பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டு பயணத்தினூடே அமைதியாக அசைபோட்டது.

2.

கடைசிவீட்டு சிலோன்காரப்பாட்டியின் வீட்டுக் கூரையிலிருந்து காற்றாடி செய்வதற்காக ஊட்டாங்குச்சிகளை பையன்கள் ஆளுக்கொன்றாக உருவிக்கொண்டு ஓடினார்கள். கிழவி பார்த்துவிட்டால் சத்தம் போடுவாள்  அதற்குத்தான் அந்த ஓட்டம்.

அவள் சத்தம் போடுவதிலும் நியாயம் இருந்தது. ஆனாலும் அந்த நியாயம் விளையாட்டுக் குழந்தைகளிடம் செல்லுபடியாவதில்லை.

கூரையிலிருந்து பனையோலைக் காற்றாடி செய்வதற்கு ஒருவரோ இருவரோ ஊட்டாங்குச்சியை உருவிக்கொண்டுபோனால் பரவாயில்லை, வீட்டுக்கொரு ஆண்மகன் போருக்குப்போக கிளம்புவதைப்போல தெருவிலுள்ள அத்தனை வீட்டுப்பிள்ளைகளும் சிலோன்காரக் கிழவியின் வீட்டுக் கூரையின் மீது படையெடுத்தால் பிறகு கிழவி கூச்சல் போடாமல் என்னசெய்வாள்.

தெருவில் இன்னும் நான்கைந்து மஞ்சம்புல் வேய்ந்த கூரைவீடுகள் இருந்தும் சிலோன்காரக் கிழவியின் வீட்டுக்கூரையிலிருந்து ஊட்டாங்குச்சிகளைத் தெருப்பிள்ளைகள் உருவிக்கொண்டு ஓடுவதற்கு ஒரே காரணம் மற்ற வீட்டின் கூரைகள் நாள்பட்டதால் மட்கிப்போயிருந்தன சிலோன்காரக் கிழவியின் கூரை சமீபத்தில் புதிதாய் வேயப்பட்டிருந்ததால் ஊட்டாங்குச்சி வலிமையாகவும் புதிதாகவும் ரொம்ப நீளமாகவும் வழுவழுப்பாகவும் இருந்ததுதான்.

மற்ற வீட்டின் பழைய கூரைகளில் மரவட்டைகள் கொத்துக்கொத்தாக மேய்ந்துகொண்டிருக்கும். கூரையிலிருந்து கீழே விழும் மரவட்டைகள் தெருத் திண்ணையில் விழுந்து  அங்கும் இங்குமாக ஊர்ந்துகொண்டிருக்கும்.

கருப்பும்சிவப்பும் கலந்த நிறத்தில் இருக்கும் அவை ஊர்ந்து செல்லும்போது அவற்றின் கால்கள் அலையலையாய் நகர்ந்து ரயில்வண்டி செல்வதைப் போலத் தோன்றும். கலை ரசனையுள்ள கழகத் தொண்டர்கள் யாராவது பார்த்தால் அதைத் தன் கட்சிக்கார மரவட்டை என்று நினைத்தாலும் நினைக்கக்கூடும்.

அவை ஊர்ந்துபோகின்ற பாதைகளில்  சிறுவர்கள் குச்சியை வைத்து வழிமறித்துத் தூக்கி வித்தைகாட்டியும் சிலர் அந்த மரவட்டைகளைக் கைகளால் பிடித்துத் தூக்கி எறிந்தும் விளையாடுவார்கள். அதைத் தொட்டவுடன் தீபாவளிக்கு விடும் சங்குசக்கரத்தைப்போல சுருட்டிக்கொள்ளும். கையில் நாற்றம் வீசும். அந்த நாற்றம் சிலருக்கு குமட்டலையும் ஏற்படுத்தும். ஒரு முறை ஊர்ந்துபோன மரவட்டையை எடுத்து சரசக்காவின் குழந்தை வாயில்போட்டு குதப்பிக்கொண்டிருந்தது. சிலோன்காரப் பாட்டிதான் அதைக் கவனித்து விரல்களால் வெளியே தள்ளி எடுத்துப்போட்டாள். அதிலிருந்து சரசக்காவுக்கு மழைக்காலத்தில் குழந்தையைத் தரையில் விடுவதென்றால் ரொம்பவே தயக்கம். 

3.

சரசு,  கோழித் தாத்தாவின் மூத்த தாரத்து மகள். கோழித்தாத்தாவின் மூத்ததாரம் சரசுவை நான்குவயதுக் குழந்தையாக இருக்கும்போது தவிக்கவிட்டு மஞ்சள் காமாலை வந்து இறந்துவிட்டாள். கோழித்தாத்தா தன் குழந்தையை வளர்க்கவும் பொங்கிப்போடவும் கீழ்ப்பத்துறை மாமாவின் கடைசிப்பெண்ணை இரண்டாவதாக கல்யாணம் பண்ணிக்கொண்டார். ஏற்கனவே குழந்தை ஒன்று இருக்கின்ற காரணத்தினால் இறைவன் சிலோன்காரப்பாட்டியின் வயிற்றில் குழந்தை உருவாக்குவது வீண் வேலை என்று விட்டுவிட்டானோ என்னவோ?. சிலோன்காரப்பாட்டிக்கு சரசுதான் வாரிசு நான்கு வயதிலிருந்து வளர்த்து ஆளாக்கி  பருவத்துக்கு வந்து ரெண்டு வருஷத்தில்  வசதி குறைவுதான் என்றாலும் மேஸ்திரி வேலை செய்யும் உறவுக்காரப் பையன் ரங்கனுக்குப் பெண்கேட்டு வந்தபோது கட்டிக்கொடுத்துவிட்டாள். ஏறாத படிப்பு எதற்கென்று எட்டாவதோடு நின்றுவிட்டவளுக்கு மேஸ்திரி மாப்பிள்ளை பெரிய இடந்தானே!.

ஆண்டுதவறாமல் கூரைவேய எல்லோருக்கும் பொருளாதாரம் கைகொடுத்து உதவுகிறதா என்ன? அடுத்தவனிடம் கடன்கேட்டு கைகட்டியல்லவா நிற்க வைக்கிறது. நிலையற்ற மனிதவாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்ததால்தானோ என்னவோ தலைமுறை தாண்டியும் அவர்களால் நிலையான கூரையை அமைத்துக்கொள்ள முடிவதில்லை. “இது என் பாட்டன் கட்டிய வீடு” என்று பின்வந்த எந்தப் பேரனும் வரலாற்றைச் சிலாகித்துப் பேச இடந்தராத சாதாரண குடும்பங்களும் எல்லாத் தெருக்களிலும் இருக்கத்தான் செய்தன.  

பெய்துமுடித்த மழைக்குக் கூரைக்குக் குடைபிடிக்கும் காளான்கள் கூரையின் ஆயுள் முடிந்துவிட்டதை எடுத்துச் சொன்னபிறகு கூரைபற்றிய சிந்தனை அதன் கீழே படுத்திருப்பவனை உறங்கவிடுமா என்ன?

அப்படி உறங்கவிடாமல் நச்சரித்த காரணத்தால்தான் நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு அரும்பாடுபட்டு புது மஞ்சம்பில்லை வாங்கி புதுக்கூரை போட்டிருக்கிறாள் சிலோன்காரப் பாட்டி..

சிலோன் பாட்டியின் கணவர் கோழி, அம்மன் கோயில் எதிரில் டீக்கடை வைத்திருக்கிறார். அவரை வீட்டில் பார்ப்பது மிக அரிது எந்நேரமும் டீக்கடையே கதி என்று கிடப்பார். டீக்கடையில் மிச்சமாகும் பாலை உறையூற்றித் தயிராக்கி விற்பதும், அதைக்கடைந்து வெண்ணெய் எடுத்து விற்பதும். கடைந்தெடுத்த மோரை விற்பதும்தான் சிலோன் பாட்டிக்கு வாடிக்கையான வேலை.  

அந்தப் பாட்டிக்குச் சிலோன் என்ற பெயரும், அந்தப் பாட்டியின் கணவரான கோழித் தாத்தாவுக்குக் கோழி என்ற பெயரும் எப்படி வந்தது என்று ஆராய்ச்சி செய்து இதுவரை யாரும் டாக்டர் பட்டம் வாங்கவில்லை. ஒரு வேளை யாராவது ஆராய்ச்சிசெய்து சொல்லியிருந்தால் யாருக்காவது தெரிந்திருக்கும். தவிர அவர்கள் வெளியூரிலிருந்து பிழைக்கவந்தவர்கள்.

இப்படிப் பிழைக்கவருபவர்கள் எல்லோருடைய வாழ்க்கையும் முதலில் குடிசையில்தான் ஆரம்பிக்கும் பிறகு மாடிகட்டி கோடிகளுக்கு அதிபதியாக வாழ்வதாகத் திரைப்படத்தில் காட்டுவார்கள். ஆனால் நடைமுறைக்கு அது சாத்தியமாவதில்லை. அவர் அந்த ஊருக்கு வந்து நாற்பத்தைந்து வருடங்களாகின்றன. கறுத்தமுடி வெளுத்துப்போனதைத்தவிர வேறு மாற்றங்கள் ஏதும் அவர்கள் வாழ்வில்  நிகழ்ந்துவிடவில்லை.

அந்தக் கூரையில் இப்படி எப்பவாவது ஊட்டாங்குச்சி பிடுங்கும் தெருப்பிள்ளைகளைவிட வியாழக் கிழமைகளில் சுற்றிபோடுவதற்காக மஞ்சம்பில்லைப் பிடுங்குவது தெருப்பெண்களுக்கு வாடிக்கையாய்ப் போய்விட்டது. பிடுங்காதே என்று அக்கம்பக்கத்து பெண்களிடம் கராராகச் சொல்லமுடியுமா என்ன? அதுவும் பிடுங்குபவள் பணக்காரியாக இருந்துவிட்டால் மவுனம்தான்.

சிலோன்காரப்பாட்டியின் கூரைக்கு இப்படியெல்லாம் தாக்குதல்கள் இருக்கத்தான் செய்தன. அப்புறம் சிலோன்பாட்டி சத்தம்போடாமல் வேறென்ன செய்வாள். அடிபட்டு வலியில் துடிப்பவளைப்போய்க் கத்தக்கூடாதென்றால் எப்படி? ஆனால் ஆதிக்கக்காரன் அப்படிக் கூச்சல் போடுகிறவர்களைப்பார்த்து தன்னை அவமதித்துவிட்டதாக அல்லவா சொல்லிக்கொள்கிறான்!.

அதனால்தான் தெருப்பிள்ளைகள்,  சிலோன்காரப்பாட்டி அசந்த நேரம் பார்த்து கூரையிலிருந்து ஊட்டாங்குச்சியை உருவுவார்கள். தவிர இந்த படையெடுப்பெல்லாம் ஆண்டுமுழுக்க நடப்பதில்லை இது சீசனுக்கு வரும் நோய்போல. காற்றாடி செய்வதை விட்டு எவனாவது பட்டம்விட ஆரம்பித்துவிட்டால் பிறகு எல்லோரும் பட்டம்செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் ஆனால் தெருப்பெண்கள் வியாழனுக்கு வியாழன் சுற்றிப்போட கூரையிலிருந்து மஞ்சம்பில்லைப் பிடுங்குவது அப்படியா? அது வாடிக்கை பெண்கள் செய்யும் வேடிக்கை.

பனையோலையை நறுக்கி ஓலையின் ஓரங்களில் கிழித்து அதன் குறுக்கே மற்றொரு ஓலையைச் செருகி அதன் நடுவில் வேலிக்காத்தான் முள்ளையோ சப்பாத்திக்கள்ளி முள்ளையோ குத்தி மறுநுனியில் ஊட்டாங்குச்சியைச் செருக வேண்டும்.  ஆனால் உடனே காற்றாடி ஓடும் என்று சொல்லிவிடமுடியாது. அதன் பக்கங்களைப் பிடித்து திருகி எச்சில்துப்பி மந்திரம்போட்டால் காற்றாடி ஓடும் அதுதான் காற்றாடி செய்வதற்கான தொழில்நுட்பமும் அதற்கான மந்திரமும்.

காற்று நன்றாக வீசினால் காற்றாடியை எடுத்துக்கொண்டு ஓடவேண்டியதில்லை நின்ற இடத்தில் நின்றாலே காற்றாடி சுற்றும். காற்று வீசாத நேரங்களில் கற்றாடியை வேகமாக சுற்றவைக்க வேண்டுமென்றால் சிறுவர்கள் வாயில் கௌவிக்கொண்டோ அல்லது கையில் பிடித்துக்கொண்டோ ஓடவேண்டும். இப்படியான விளையாட்டுக்களில் ராமலிங்கம் ஒவ்வொரு விடுமுறையையும் சிறு வயதில் தன் பாட்டியின் வீட்டில் மகிழ்ச்சியாகக் கழித்திருக்கிறான்.

அன்றைக்குக் காய்ச்சலில் படுத்திருந்த அம்மாவைப் பார்க்க ராமலிங்கத்தைக் கூட்டிக்கொண்டு சரசு தன் பிறந்தவீட்டுக்குக் கிளம்பும்போது குடிபோதையிலிருந்த ரங்கனிடம் வழிச்செலவுக்குப் பணம் கேட்டபோது அவள் மாமியாள்,  “உங்காத்தாவீட்டில இருந்து வருவாதூரம் வண்டிவண்டியா கொண்டாந்தையா? உங்காத்தாளுக்கு ஆத்தோரம் வண்டுருட்டலாம் பழம் கொட்டிகெடக்கும் பொறுக்கினுபோய் குடு” என்று ஏளனமாகப் பேசி அனுப்பினாள். அதற்குமேல் அவளால்  ஒரு நொடிப்பொழுதும் அங்கு நிற்க முடியவில்லை.

சரசுவை அவள் மாமியாள் திட்டுவது வாடிக்கைதான் என்றாலும் அன்று வீட்டுக்கு வந்திருந்த நாத்தனார் முன்பு திட்டியதில் அவள் மனமொடிந்து போய்விட்டாள்.மாற்றுத்துணிகூட எடுத்துக்கொள்ளவில்லை ராமலிங்கத்தை அழைத்துக்கொண்டு பிறந்தவீட்டுக்கு வந்துவிட்டாள். வரும் வழியில்  ராமலிங்கம் “வண்டுருட்டலாம் பழம் என்றால் என்ன?” என்று தம் அம்மாவிடம் கேட்க நினைத்தாலும் புடவை முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கலைந்த கோலமாய் இருந்த  அவளிடம் அதைக் கேட்க மனம் வரவில்லை.

வீட்டினுள் நுழைந்த சரசு மூலையில் கோரைப்பாயில் சோர்ந்து படுத்துக்கிடந்த  அம்மாவின் தலையில் கைவைத்துப் பார்த்தபோது அனல் வீசியது. மகள் வந்திருக்கிறாள் தன்னைத் தொட்டுப்பார்ப்பது அவள்தான் என்ற உணர்வற்றுக்கிடந்தாள் சிலோன்காரப்பாட்டி.

கஞ்சிவைத்துக்கொடுக்கலாம் என்று அடுப்பங்கரைப்பக்கம் சரசு சென்றபோது போட்டது போட்டபடி கிடந்தது. கஞ்சி காய்ச்ச பானையிலிருந்து நொய்யை அள்ளி முறத்தில் கொட்டியதும் அதில் புழுக்கள் நெளிந்தன. புடைத்து சுத்தம் செய்து தண்ணீரில் கொட்டி ஊறவைத்துவிட்டு பாத்திரம் துலக்கி எல்லாவற்றையும் ஏறக்கட்டி வைத்துவிட்டு அடுப்பைப் பற்றவைத்து கஞ்சிக்குப் பானையில் நீர் ஊற்றி உலைவைத்தபோது. அம்மாவின் முனகல் சத்தம் கேட்டு சரசு ஓடிவந்து பார்த்தபோது பாயிலேயே வாந்திஎடுத்துவிட்டிருந்தாள்.

எல்லாவற்றையும் துடைத்துவிட்டு துண்டை குளிர்ந்த நீரில் நனைத்து உடம்பெல்லாம் துடைத்துவிட்டபோது. சிலோன்காரப்பாட்டி லேசாகக் கண்விழித்துப் பார்த்தாள். மகளின் அரவணைப்பில் தாய்மையின் சுகத்தை அனுபவித்தாள். ஒரு கணம் மகளின் கைகளில் குழந்தையாகிப் போயிருந்தாள். உணர்வுவந்து கண்விழித்த அம்மாவுக்கு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்த நொய்க் கஞ்சியைக் கொண்டுவந்து கொடுத்தாள். ரெண்டு மடக்கு உள்ளே இறங்கியதும் சிலோன்காரப்பாட்டிக்கு தெம்பு வந்துவிட்டது. அது குடித்த கஞ்சியினால் வந்த தெம்பல்ல நானிருக்கிறேன் உனக்கு என்ற மகளின் நம்பிக்கை தந்த தெம்பு.

ஆமாம் வாழவேண்டும் என்ற ஆசையையும் அதற்கான ஆற்றலையும் அன்புதான் அள்ளித்தருகிறது. அது கிடைக்காமல் போகிறபோது இந்த உயிரை சுமந்துகொண்டு திரிவதுதான் எத்துணை வேதனை. சிலோன்காரப் பாட்டிகூட ‘பணபலம் இல்லாட்டாலும் ஜனபலம் வேண்டும்’ என்று அடிக்கடி பேச்சுவாக்கில் தன்னிடம் மோர்வாங்க வருபவர்களிடம் சொல்லி அங்கலாய்த்துக்கொள்வதுண்டு.

பாட்டியின் ஊருக்கு வரும்போதெல்லாம் ராமலிங்கம் தெருப் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவதும் சுற்றித் திரிவதும் அவனுக்குப் பழக்கமாகிப்போய்விடவே ஊரின் மூலை முடுக்குகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படி.

அன்றைக்கு அவன் செய்த பனையோலைக் காற்றாடிக்கு சப்பாத்திக்கள்ளி முள் எடுத்துவர உள்ளூர்பிள்ளைகளோடு சேர்ந்துகொண்டு ஆற்றின் மறுகரைக்குச் சென்றுவிட்டான். ஆறு என்றால் ஏதோ வற்றாத ஜீவநதி என்று நினைத்துக்கொள்ளக்கூடாது. அது கனமழை பெய்தால் கொஞ்சகாலத்துக்குத் தண்ணீர் ஓடும் காட்டாறு. ராமலிங்கம் சப்பாத்திக்கள்ளியில் முள் எடுக்கச் சென்ற இடத்தில் கிடந்த மலத்தை இரண்டிரண்டு வண்டுகள் உருட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்தன. அதைப் பார்த்துக்கொண்டே கள்ளிச்செடியில் கைவைத்தபோது முள் குத்திவிட்டது. வெடுக்கென கையை இழுத்துக்கொண்டு, ‘அம்மா’ வெனக் கத்திவிட்டான். முள்குத்திய இடத்தில் ரத்தம் வெளிவந்தது.

அன்று மாலை விளையாடிவிட்டு ராமலிங்கம் வீடு திரும்பியபோது வீட்டின் முற்றத்தில் ஜனக்கூட்டம் தூரத்தில் வரும்போதே சிலோன்காரப்பாட்டியின் ஓலக்குரல். சரசு கூரையின் உத்தரத்தில் தூக்கில் தொங்கிவிட்டாள். வந்து பார்த்தவர்கள் அவள் சாவுக்கு என்ன காரணமாக இருக்கும் என ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். அருகே வந்த ராமலிங்கத்தைக் கட்டியணைத்து சிலோன்காரப்பாட்டி அழுதாள். அவள் இதயத்துடிப்பையும் அதன் தவிப்பையும் ராமலிங்கம் தன் காதுகளில் கேட்டான். அவள் அழுத கண்ணீர் சிலோன்காரப்பாட்டியின் மார்பைச் சுட்டது. 

4.

திடீரென விசில்சத்தம் கேட்டு நினைவு வந்து திரும்பிப்பார்த்தபோது பக்கத்து சீட்டிலிருந்த குழந்தை வைத்திருந்த பிளாஸ்டிக் காற்றாடி கீழே கிடந்தது. குழந்தையும் குழந்தையோடு வந்தவர்களும் முன்பே இறங்கிவிட்டதை ராமலிங்கம் கவனிக்கவில்லை, காலருகே கிடந்த பிளாஸ்டிக் காற்றாடியை எடுத்துப் பார்த்தபோது காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் பேருந்தின் வேகத்திற்கு ஏற்ப வேகமாக சுற்றியது. அதன் லேசான அதிர்வு மீண்டும் பழைய ஞாபகங்களைத் தூண்டிவிட்டது. இன்னும் பயணம்போக ராமலிங்கத்திற்கு தூரமிருந்தது. கொல்லவும் வெல்லவும் சொல்லுக்குத்தான் எத்துணை ஆற்றல்.

- 28.03.2022