எந்தச் சாவிபோட்டாலும்
உன் குறள் பூட்டு
திறந்துவிடுகிறது
உன் குறளைத் திறந்த
சாவிகளுக்குள்
எது சிறந்ததென்று போட்டி
எல்லா சாவிக்கும்
மனம் கோணாமல்
திறந்துவிடுகிற
உன் குறளைவிடவா
அவை பெரியது
பூட்டைத் திறந்துவிட்டதாலேயே
உன் பொக்கிஷத்தை மொத்தமாய்
அள்ளிச்செல்ல ஆசைப்படுகிறார்கள்
ஆனால் அனுபவ வாதிகளுக்கல்லவா
அந்த அற்புதப் புதையல்
அள்ளஅள்ளக் கிடைக்கும்
கோயிலுக்குள் வந்தவர்க்கெல்லாம்
கடவுள் காட்சிதந்துவிடுவதில்லை
சிலையைப் பார்த்தவர்களெல்லாம்
கடவுளைக் கண்டதாய்
தம்பட்டம் அடிக்கிறார்கள்
உன் குறளை தரிசிக்க
வந்தவர்களும் அப்படித்தான்.
சீராக இருந்ததைத்
திருத்திவிட்டு
இந்தச் சமூகத்தைச்
சீர்திருத்த வேண்டும்
என்கிறார்கள்
உன் குறட்பாக்களின்
எழுசீர் சொல்லாததை
எந்தச் சீர்திருத்தவாதி
புதிதாய்ச்
சொல்லிவிடப் போகிறான்
என் கவலை எல்லாம்
எல்லா சாவிகளையும் போட்டு
பூட்டைப் பழுதாக்கிவிடுவார்களோ
என்பதுதான்.
ச. நீலமேகன்.