சனி, 30 நவம்பர், 2019

குறள் பூட்டு

எந்தச் சாவிபோட்டாலும்

உன் குறள் பூட்டு

திறந்துவிடுகிறது

உன் குறளைத் திறந்த

சாவிகளுக்குள்

எது சிறந்ததென்று போட்டி

 

எல்லா சாவிக்கும்

மனம் கோணாமல்

திறந்துவிடுகிற

உன் குறளைவிடவா

அவை பெரியது

 

பூட்டைத் திறந்துவிட்டதாலேயே

உன் பொக்கிஷத்தை மொத்தமாய்

அள்ளிச்செல்ல ஆசைப்படுகிறார்கள்

ஆனால் அனுபவ வாதிகளுக்கல்லவா

அந்த அற்புதப் புதையல்

அள்ளஅள்ளக் கிடைக்கும்

 

கோயிலுக்குள் வந்தவர்க்கெல்லாம்

கடவுள் காட்சிதந்துவிடுவதில்லை

சிலையைப் பார்த்தவர்களெல்லாம்

கடவுளைக் கண்டதாய்

தம்பட்டம் அடிக்கிறார்கள்

உன் குறளை தரிசிக்க

வந்தவர்களும் அப்படித்தான்.

 

சீராக இருந்ததைத்

திருத்திவிட்டு

இந்தச் சமூகத்தைச்

சீர்திருத்த வேண்டும்

என்கிறார்கள்

உன் குறட்பாக்களின்

எழுசீர் சொல்லாததை

எந்தச் சீர்திருத்தவாதி

புதிதாய்ச்

சொல்லிவிடப் போகிறான்

 

என் கவலை எல்லாம்

எல்லா சாவிகளையும் போட்டு

பூட்டைப் பழுதாக்கிவிடுவார்களோ

என்பதுதான்.

ச. நீலமேகன்.

கருத்துகள் இல்லை: