வள்ளுவ!
உன் குறளின்
தொடை நயத்தைவிடச் சிறப்பு
மனித வாழ்வின் சிக்கலுக்கு
நீ சொல்லும்
விடைநயத்தில் இருக்கிறது.
ஆனால்
உன் குறளின் ஆழத்தை
அறியாதவர்கள்
உன் குறளுக்கு அழகு
எதுகையிலா?
மோனையிலா?
எனப் பட்டிமன்றம்
நடத்திக்கொண்டிருக்கிறார்கள்
ஆம் வள்ளுவ!
உன்னை
ஒழுங்காய்ப் படித்திருந்தால்
மனம் பண்பட்டிருக்கும்
மானுடம் மேம்பட்டிருக்கும்
ஆனால் இவர்கள்
உன்னைப் படிப்பதைப் போல்
நடிப்பவர்கள்.
இந்த செவிடர்களுக்காக
மானுட விடுதலையை
நீ பாடிக்களைத்தது
போதும் வள்ளுவ!
உன் எழுத்தாணியை
அணுவணுவாய்
ஒடித்து
புது எழுத்தாணிகளுக்கு
கூர் முனையாக்கி
பூவுலகப் பெண்களின்
கைகளில் கொடுத்துவிடு
அவர்கள்
அந்த எழுத்தாணியால்
தன் விடுதலையைத் தாங்களே
எழுதிக்கொள்ளட்டும்
அப்படியும் ஒடுக்கவந்தால்
குத்திக் கொல்லட்டும்
அவள்
நெருப்பில் வெந்தபின்பு
வேந்து வந்து என்ப பயன்
உன் குறட்பாவைக் கொஞ்சம்
திருத்திக்கொள்வோம் வள்ளுவ!
கொலையிற் கொடியாரை பெண்ணொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
தளை தட்டாது வள்ளுவ!
யாப்புக்கு மட்டுமல்ல
யாதுமாகி நின்ற
பெண்ணுக்கும்
அடிமைத் தளை தட்டாது
மார்தட்டிக்கொள் வள்ளுவ!
மார்தட்டிக்கொள்….
-. ச. நீலமேகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக