புதன், 15 ஜனவரி, 2020

குறியிடம் கூறல் - உதாரணம்

அலர் அறிவுறுத்தல் - உதாரணம்

குறியிடம் கூறலுக்கு உதாரணம்

திருக்குறள்- நட்பாராய்தல்

திருக்குறள், அலர் அறிவுறுத்தல்

சீதைகள்

கல்லறைப் பூக்கள் - சிறுகதை, ச. நீலமேகன்

பெண்

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

அற இலக்கிய வரலாறு

அற இலக்கிய வரலாறு
மனித சமூகத்தில் நாகரிகம் என்று முகிழ்த்ததோ அன்றே அறம் குறித்த சிந்தனையும் தோற்றம் பெற்றுவிட்டது. அதுமுதற்கொண்டு சமூகத்தில் எண்ணற்ற அறங்கள் சான்றோர்களால் உரைக்கப்பெற்று நடைமுறை வாழ்க்கையில் மக்களால் பின்பற்றப்பட்டு வரலாயின. இந்தகைய அறக்கருத்துக்கள் புலவர்களாலும் அறவாணர்களாலும் தாங்கள் இயற்றிய இலக்கியங்களிலும் அறநூல்களிலும் காலந்தோறும் எடுத்துரைக்கப்பெற்று வந்துள்ளன. அந்தவகையில் தமிழ் இலக்கியத்தின் மிகத்தொன்மையான இலக்கியமான பாட்டும் தொகையும் எனக் குறிப்பிடப்படும் சங்க இலக்கியத் தொகை நூல்களிலேயே ஏராளமான அறக்கருத்துக்கள் புலவர்களால் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன எனினும் கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் அறம் வலியுறுத்துவதை மட்டுமே நோக்கமாகக்கொண்ட நீதி நூல்கள் பல்கிப் பெருகின. இத்தகைய காலத்தையே நீதிநூற்காலம் எனக் குறிப்பிடுகின்றனர். இக்கால கட்டத்தில் தோற்றம் பெற்ற 18 நூல்களை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் சங்கம் மருவியகால நூல்கள் என்றும் குறிப்பிடுவர்.
காதலையும் வீரத்தையுமே அடிப்படையாகக் கொண்ட திணை இலக்கிய மரபில் சமூகத்தில் நேர்ந்த மாற்றத்தால் பாடுபொருளிலும் யாப்பு அடிப்படையிலும் ஒரு பொரும் மாற்றம் ஏற்படக் காரணமாக அமைந்தது. ஆனால் இலக்கிய மரபு திடுமென மாறிவிடுவதில்லை அதன் நீட்சி இருக்கவே செய்யும் அந்த அடிப்படையில் சங்க இலக்கியங்களுக்குப்பிறகு நீதி இலக்கியங்கள் பெருமளவிற்கு தோற்றம் பெற்றாலும் பழைய திணை மரபை முற்றிலும் புறக்கணிக்காத இலக்கியப் போக்கு காணப்பட்டதை பதினெண் கீழ்க்கணக்கில் ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது, கார் நாற்பது, களவழிநாற்பது போன்ற அக, புற இலக்கியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
இக்காலத்தில் தமிழரல்லாத களப்பிரர் எனப்பட்ட வேற்று மரபைச் சார்ந்தவர்கள் தமிழ் நிலப்பரப்பை ஆண்டுவந்தனர். இவர்கள் வேற்று மொழியினர், வேற்றுச் சமயத்தவர்  என்றும், இவர்கள் காலத்தில் பாலியும், பிராகிருத மொழியும் செல்வாக்குப் பெற்று புத்த, சமணக் கொள்கைகள் தழைக்கத் தொடங்கின.
வரலாற்றாசிரியர்கள் சிலர் அக்கால வரலாற்றை அறிந்துகொள்வதற்குரிய போதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காததால் இக்காலத்தை இருண்டகாலம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இங்கு குறிப்பிடப்பட்டும் இருண்ட காலத்தை வரலாற்றின் இருண்டகாலம் எனக் கொள்ளலாமேயன்றி தமிழ்ச் சமூகத்தின் இருண்டகாலம் எனக் கொள்ளலாகாது. ஏனெனில் இக்காலத்தில் ஏராளமான சமண இலக்கிய இலக்கண நூல்கள் தோன்றி தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளதை நாம் மனங்கொள்ள வேண்டும்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
இரண்டடி முதல் எட்டு அடி வரையிலும் உள்ள குறைந்த அடிகளையுடைய வெண்பா யாப்பில் அமைந்த நூல்களாதலின் இவை கீழ்க்கணக்கு நூல்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் திணைமொழி ஐம்பதுஐந்திணை ஐம்பது, கைந்நிலை (ஐந்திணை அறுபது) ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கார்நாற்பது என்னும் ஆறு நூல்கள் அகப்பொருள் பற்றியவை. இவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து நிலங்களின் இயல்புகளையும், அந்நிலத்திலே நடைபெறும் காதலர்களின் ஒழுக்க நடவடிக்கைகளைப் பற்றி உரைப்பன. இவற்றில் சங்க இலக்கிய அகமரபின் தொடர்ச்சியை நாம் காணலாம்.
களவழி நாற்பது என்ற ஒரு நூல் மட்டும் புறநூலாகத் திகழ்கின்றது. மீதமுள்ள திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, ஆசாரக் கோவை, முதுமொழிக் காஞ்சி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நான்மணிக்கடிகை, திரிகடுகம் சிறுபஞ்சமூலம், ஏலாதி என்ற பதினொரு நூல்களும் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன. கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்னவை என்பதைப் பின்வரும் பழம்பாடல் வரிசைப்படுத்தி உரைக்கின்றது.
நாலடி, நான்மணி, நால்நாற்பது, ஐந்திணைமுப்
                         பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்,
                         இன்னிலைய காஞ்சியோடு, ஏலாதி என்பவே
                         கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு

I.அகநூல்கள்
திணைமொழி ஐம்பது
திணைக்குப் பத்து வெண்பாக்களாக ஐம்பது வெண்பாக்களால் சங்கத் திணைப்பாடல் மரபைப் பின்பற்றி கண்ணன் சேந்தனார் என்ற புலவரால் பாடப்பட்டது திணைமொழி ஐம்பது.
ஐந்திணை ஐம்பது
முல்லைத் திணை, குறிஞ்சித் திணை, மருதத் திணை, பாலைத் திணை, நெய்தல் திணை என்ற வரிசையில் திணைக்குப் பத்துப் பாடல்களாக 50 பாடல்களால் மாறன்பொறையன் என்பவரால் பாடப்பட்டது இந்நூல்.
கைந்நிலை
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் ஐந்து திணை ஒழுக்கங்களைப் பற்றிக் கூறும் அறுபது பாடல்கள் அடங்கியது. இந்நூலை ஐந்திணை அறுபது என்றும் கூறுவர். இந்நூலில் இப்பொழுது முழு உருவில் 43 வெண்பாக்களே உள்ளன. இந்நூலினை புல்லங்காடனார் என்பவர் இயற்றியுள்ளார்.
ஐந்திணை எழுபது
மூவாதியார் என்பவரால் இயற்றப்பட்டு திணைக்குப் பதினான்கு பாடல்கள் வீதம் ஐந்திணைக்குமாக மொத்தம் எழுபது வெண்பாக்கள் பாடப்பட்டது இந்நூல்
திணைமாலை நூற்றைம்பது
திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் ஐந்திணைக்கும் 150 வெண்பாக்களால் பாடப்பட்டது இந்நூல். ஆனால் இன்று 153 பாடல்கள் உள்ளன. மிகுதியான  3 பாடல்கள் இடைச்செருகல் எனக் கொள்ளலாம். ஏலாதி என்ற அறநூலை எழுதிய கணிமேதாவியாரே இதன் ஆசிரியருமாவார்.
கார் நாற்பது
முல்லைத் திணைக்குரிய இருந்தல் என்னும் உரிப்பொருள் அமைய போர்கருதிப் பிரிந்த     தலைமகன் திரும்பி வருவதை எதிர்நோக்கியிருக்கும் தலைவி, அவளை ஆற்றுவிக்கும் தோழி, கூறியபடி திரும்பி வரும் தலைமகன், அவனுக்கு உதவும் பாகன் போன்றோர் கூற்றில் கார்காலப் பின்னணியில் அமைந்த 40 வெண்பாக்களால் மதுரைக் கண்ணங்கூத்தனார் என்பவரால் இயற்றப்பட்டது இந்நூல்.
II. புறநூல்
களவழி நாற்பது
சேரமான் கணைக்காலிரும்பொறையைச் சிறைமீட்கப் பொய்கையார் என்ற புலவரால்  புறப்பொருளில் பாடப்பட்ட 40 வெண்பாக்களால் ஆனது இந்நூல். களவழி ஏர்க்களம் பாடுதல், போர்க்களம் பாடுதல் என இரண்டாகும். இவற்றுள் இரண்டாவது வகையைச் சார்ந்த இந்நூலில் யானைப்போர் பற்றி சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது. இந்நூலே பரணி போன்ற பிற்கால இலக்கியங்கள் தோன்ற துணை நின்றன.
III. அறநூல்கள்
திருக்குறள்
தமிழில் தோன்றிய நீதி நூல்களுக்கெல்லாம் மகுடமாகத் திகழ்வதும் உலக இலக்கியமாக விளங்குவதும் திருக்குறளாகும். 2000 ஆண்டுகாலப் பழமையுடை இந்நூலைத் திருவள்ளுவர் இயற்றினார். அனைத்து சமயத்தவர்களாலும் போற்றப்படும் இந்நூல் உலகமொழிகள்     பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
குறள் வெண்பாக்களால் இயற்றப்பட்டுள்ளமையின் இந்நூல் யாப்பு அடிப்படையில் திரு என்னும் அடைமொழியைச் சேர்த்து திருக்குறள் என்ற பெயர்பெற்றுள்ளது. இந்நூல் அறத்துப்பால் 38 அதிகாரங்கள், பொருட்பால் 70 அதிகாரங்கள், இன்பத்துப்பால் 25 அதிகாரங்கள் என்னும் முப்பெரும் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 133 அதிகாரங்களுக்கு 1330 குறட்பாக்களைக் கொண்டு விளங்குகிறது. இந்நூலைச் சிறப்பித்து பல புலவர்கள் பாடியுள்ளனர் அந்நூல் திருவள்ளுவமாலை என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றது. இந்நூலுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றுள் பரிமேலழகர் உரை சிறந்ததாகப் போற்றப்படுகிறது.
நாலடியார்
     பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்ததாகப் போற்றப்படுவது நாலடியார். நான்கடி கொண்ட வெண்பாக்களால் ஆன நூலாதலின் இந்நூல் நாலடியார் எனப் பெயர்பெற்றது. ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’, “பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்” என்ற பழமொழிகள் இதன் பெருமையை உணர்த்தும். சமண முனிவர்கள் பலரால் பாடப்பட்ட இந்நூலைப் பதுமனார் என்பவர் தொகுத்ததாக அறியமுடிகிறது. திருக்குறளைப் போன்றே இதுவும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பெரும் பிரிவுகளை உடையது. ஜி.யூ.போப் இந்நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
பழமொழி நானூறு
ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழியை வைத்து, அதனோடு தொடர்புடைய நிகழ்ச்சியைச் சுட்டி அறத்தை வற்புறுத்தும் தன்மையில் அமைந்துள்ள இந்நூல் 400 வெண்பாக்களையுடையது. இந்நூலை இயற்றியவர் முன்றுறையரையனார். இந்நூலில் நுணலும் தன் வாயாற் கெடும்’, ‘நிறைகுடம் நீர் தளும்பல் இல்’, ‘முதலிலார்க்கு ஊதியம் இல்’ என்பன போன்ற மக்கள் வழக்கிலுள்ள பழமொழிகள் இலக்கியப் போக்கிற்கு ஏற்ப பயின்று வருகின்றன. இந்நூல்வழி பழந்தமிழ் மக்களின் புராணக் கதைகள், அரிய நிகழ்ச்சிகள் பலவற்றை அறிந்துகொள்ள முடிகிறது.
முதுமொழிக் காஞ்சி
நிலையாமை பற்றிய காஞ்சித்திணையில் முதுமொழிக்காஞ்சி என்பது ஒரு துறையாகும். இது உலக நிலையாமையை எடுத்துக்காட்டும் சான்றோரின் அனுபவ மொழியாதலின் முதுமொழிக்காஞ்சி என்ற பெயர்பெற்றது. மதுரைக் கூடலூர்கிழார் எழுதிய இந்நூல், பத்து அதிகாரங்களையும் அதிகாரத்திற்குப் பத்துக் குறட்டாழிசைகளாக 100 செய்யுட்களையும் உடையது.
ஆசாரக்கோவை
     ஆசாரம் என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்பது பொருள். ஆசாரங்களின் தொகுப்பாக அமைந்த நூலாதலின் இந்நூல் ஆசாரக்கோவை என்பெயர் பெற்றது. பெருவாயின் முள்ளியார் என்பவரால் பல்வேறு வகையான வெண்பா வகையால் இயற்றப்பட்ட இந்நூல் 101 பாடல்களைக் கொண்டது. இந்நூலின் அறங்கூறும் முறை வடநூல் மரபைத் தழுவியது என்பர். இந்நூல் செய்யவேண்டியவை இவை விலக்கவேண்டியவை இவை என்று எடுத்துரைக்கின்றது. மேலும் இந்நூல் நீராடல், உண்ணல், வழிபடல், துயிலுதல் போன்ற தனிமனித ஆசாரங்களையும் எடுத்துரைக்கின்றது. வடமொழி ரிஷிகள் கூறியுள்ள ஆசாரங்களைத் தொகுத்து தமிழில் இயற்றப்பட்டிருப்பதாக இதன் சிறப்புப்பாயிரச் செய்யுள் கூறுகிறது.
நான்மணிக்கடிகை
நான்கு மணிகள் பதித்த ஆபரணத்திற்கு நான்மணிக்கடிகை என்று பெயர். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு அணிகலன், அவ்வணிகலன்களிலே பதிக்கப்பட்ட நான்கு நான்கு இரத்தினங்களாக நான்குநான்கு கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. என்ற அடிப்படையில் இந்நூலுக்கு நான்மணிக்கடிகை என்ற பெயர் வழங்குவதாயிற்று.104 வெண்பாக்களாலான இந்நூலை விளம்பிநாகனார் இயற்றினார்.
இன்னா நாற்பது
வெண்பா யாப்பில் 40 பாடல்களில் அமைந்த இந்நூல் மக்களுக்குத் துன்பந்தருவன இவை இவை என்று என்று எடுத்துரைக்கின்றது. இதனாலேயே இந்நூல் இன்னா நாற்பது என்று பெயர் பெற்றது. இந்நூலின் ஆசிரியர் கபிலர்.
இனியவை நாற்பது
வெண்பா யாப்பில் அமைந்த 40 பாடல்களைக் கொண்ட இந்நூல், ‘ஒப்பமுடிந்தால் மணவாழ்க்கை முன்னினிது’, ‘மானமழிந்தபின்     வாழாமை முன்னினிது’,‘வருவாயறிந்து வழங்கல் முன்னினிது’, ‘குழவி தளர்நடை காண்டலினிது’ என நல்லவை இவையிவை  என்று எடுத்துரைக்கின்றன. ஆகையால் இந்நூலுக்கு இனியவை நாற்பது என்று பெயர். இந்நூலை இயற்றியவர் பூதஞ்சேந்தனார்.
சிறுபஞ்சமூலம்
கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், நெருஞ்சி வேர் என்ற மூலிகைகளால் அமைந்த மருந்து போல ஒவ்வொரு பாட்டிலும் ஐந்து ஐந்து கருத்துகள் சொல்லப்பட்டுள்ளதால் இந்நூல் சிறுபஞ்ச மூலம் என்ற பெயர்பெற்றது. இந்நூலின் ஆசிரியர் காரியாசான். இந்நூலிலே 100வெண்பாக்கள் உள்ளன.
ஏலாதி
ஏலம், இலவங்கம், சிறுநாவல்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு என்ற ஆறு பொருட்களைச் சேர்த்துச் செய்த மருந்துக்கு ஏலாதி என்றுபெயர். இது உடல் நோயைத் தீர்க்கவல்லது இம்மருந்தைப் போலவே இந்நூலின் ஒவ்வொரு பாட்டிலும் சொல்லப்பட்ட ஆறு கருத்துக்கள் உளநோயைத் தீர்க்க வழிகாட்ட வல்லது என்பர்.எனவே மருத்தின் பெயரே இந்நூலுக்கும் பெயராயிற்று. திணைமாலை நூற்றைம்பது எழுதிய கணிமேதாவியாரே இந்நூலையும் எழுதியுள்ளார். இந்நூலில் 80 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
திரிகடுகம்
சுக்கு, மிளகு, திப்பிலி என்ற இம்மூன்றும் சேர்ந்த மருந்திற்குத் திரிகடுகம் என்று பெயர். அது உடல்நலனைக் காக்க உதவுவதுபோல, ஒவ்வொரு பாடலிலும் சொல்லப்பட்ட கருத்துக்கள் மக்களுக்கு நலம் பயக்கும் மூன்று உறுதிப்பொருள்களைக் கூறுகின்றமையால் இந்நூல் திரிகடுகம் என்ற பெயர் பெற்றது. 100 வெண்பாக்களால் ஆன இந்நூலை நல்லாதனார் என்னும் புலவர் இயற்றியுள்ளார்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
அக நூல்கள்
வ. எண்
நூல்
இயற்றிய புலவர்
பாடல் எண்ணிக்கை
1
ஐந்திணை ஐம்பது
மாறன் பொறையனார்
5X10=50
2
ஐந்திணை எழுபது
மூவாதியார்
5X14=70
3
திணைமொழி ஐம்பது
கண்ணன் சேந்தனார்
5X10=50
4
திணைமாலை நூற்றைம்பது
கணிமேதாவியார்
5X30=150
5
கார் நாற்பது
மதுரைக் கண்ணன் கூத்தனார்
40
6
கைந்நிலை
(ஐந்திணை அறுபது என்றும் கூறுவர்)
புல்லங்காடனார்
5X12=60
புற நூல்
7
களவழி நாற்பது
பொய்கையார்
40
அற நூல்கள்
8
திருக்குறள்
திருவள்ளுவர்
1330
9
நாலடியார்
சமண முனிவர்கள்
400
10
இன்னா நாற்பது
கபிலர்
40
11
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார்
40
12
திரிகடுகம்
நல்லாதனார்
100
13
ஏலாதி
கணிமேதாவியார்
80
14
சிறுபஞ்சமூலம்
காரியாசான்
100
15
ஆசாரக் கோவை
பெருவாயின் முள்ளியார்
100
16
நான்மணிக் கடிகை
விளம்பிநாகனார்
104
17
முதுமொழிக் காஞ்சி
கூடலூர் கிழார்
100
18
பழமொழி நானூறு
முன்றுறை அரையனார்
400

சங்க இலக்கிய வரலாறு

சங்க இலக்கிய வரலாறு
உலகில் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றாகத் திகழும் தமிழ் மொழி மிகப் பழமையான இலக்கண இலக்கியங்களைக் கொண்டு விளங்குகிறது. இத்தமிழ் மொழியில் பன்நெடுங்காலமாக வழக்கில் இருந்து கால ஓட்டத்தில் மறைந்துபோன தமிழ் நூல்கள் ஏராளமானவை அவ்வாறு அழிந்தவைபோக கிடைத்தவற்றுள் மிகத் தொன்மையானதாக விளங்குவது இலக்கணத்தில் தொல்காப்பியமும் இலக்கியத்தில் பாட்டும் தொகையும் எனக் குறிப்பிடப்படும் சங்க இலக்கியங்களுமாகும். இவ்விலக்கியங்களே தமிழ் இலக்கியத்தில் கொடுமுடியாக நின்று உலக அரங்கில் தமிழ்மொழியின் பெருமையையும், பண்பாட்டையும் பறைசாற்றுகின்றன.
பாண்டிய மன்னர்கள் தாங்கள் ஆண்ட தலைநகரங்களில் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அவற்றின் வழி திறம் வாய்ந்த தமிழ் அறிஞர்களைக் கொண்டு செய்யுள் இயற்றுதலும், இயற்றப்பட்ட செய்யுட்களின் தரத்தை ஆராய்தலும் என்ற நிலைகளில் தமிழ் வளர்க்கும் பணியை மேற்கொண்டுவந்தனர். அந்த வகையில் தென்மதுரையைத் தலைமை இடமாகக்கொண்டு முதற்சங்கமும், கபாடபுரத்தைத் தலைமை இடமாகக்கொண்டு இடைச் சங்கமும் தற்போதைய மதுரையைத் தலைமை இடமாகக்கொண்டு கடைச் சங்கமும் நடைபெற்று வந்தன. இச்சங்கங்களுள் முதல் மற்றும் இடைச் சங்கங்கள் கடல்கோளின் காரணமாக அழிந்துபோயின. கடைச்சங்கம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுவரை நடைபெற்றுவந்தது. இவ்வாறு சங்கமிருந்த காலத்து தோன்றிய இலக்கியமாதலின் இவை  சங்க இலக்கியங்கள் என அழைக்கப்பட்டன.
இத்தகைய சங்க இலக்கியங்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இப்பாடல்களைப் பாடிய புலவர்களும் அரசர் வணிகர் எனப் பல நிலைப் பட்டவர்களாக இருந்தனர். இவர்களுள் பெண்பாற் புலவர்களும் அடங்குவர்.
நாட்டுப்புற மரபில் உதித்து பாணர்களால் வளர்க்கப்பட்டு கற்றறிந்த புலவர்களால் செய்யுளாக இயற்றப்பட்டு வளர்க்கப்பட்ட இச்சங்கப் பாடல்கள் அரசர்களின் முயற்சியிலும் ஆதரவிலும் தேடித் திரட்டி பாடுபொருள் அடிப்படையில் அகம் புறம் எனப் பகுக்கப்பட்டு  அடிவரையறையின் அடிப்படையில் தனித்தனித் தொகுதிகளாக  தொகுக்கப்பெற்றன. இவற்றை பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும் குறிப்பிடுவர்.
எட்டுத்தொகை
            புலவர் பலரால் பல்வேறு காலகட்டத்தில் பாடப்பட்டு தனித்தனியே உதிரிகளாகக் கிடந்தவற்றைத் தேடித் திரட்டி பாடலின் பொருண்மை அடிப்படையிலும், அடியளவு நோக்கியும் எட்டு தொகைநூல்களாக தொகுக்கப்பட்டன அவற்றை,
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை.

எனப் பழம்பாடலொன்று குறிப்பிடுகின்றது. இவற்றுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை என்ற ஐந்து தொகைநூல்களும் அகப்பாடல்களின் தொகுப்பாகவும், பதிற்றுப்பத்து, பரிபாடல் ஆகிய இரண்டும் புறப்பாடல்களின் தொகுப்பாகவும் பரிபாடல் அகமும் புறமும் கலந்த தொகுப்பாகவும் விளங்குகின்றது.
நற்றிணை
எட்டுத்தொகையில் அகத்திணையில் அமைந்த நூல்களுள் ஒன்று நற்றிணை. ‘நல்’ என்ற அடைமொழி பெற்ற இந்நூலை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான். இந்நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயங்கார் ஆவார்.
குறுந்தொகை
4அடி முதல் 8அடி வரை என்ற குறைந்த அடிகள் கொண்ட 400 பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இந்நூல் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பட்ட இக் குறுந்தொகைப் பாடல்களை உரையாசிரியர்கள் பலரும் அதிகமாக மேற்கோள் காட்டியுள்ளனர். இந்நூலில் ஆசிரியர் பெயர் தெரியாத புலவர்களுக்கு அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து 'அனிலாடு முன்றிலார்', 'செம்புலப்பெயல் நீரார்', 'குப்பைக் கோழியார்', 'காக்கைப்பாடினியார்' என உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் குறிப்பிடப்படுகின்றனர். திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன் முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டார்.
ஐங்குறுநூறு
3 அடி முதல் 6 அடி வரை என்ற  அடியளவைக் கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் 500 பாடல்களைக்கொண்டு விளங்குகிறது. இப்பாடல்கள் அனைத்தும் ஆசிரியப்பாவால் ஆனவை.
ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன. இதனை,
மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு

என்ற வெண்பா காட்டும். இதனை டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.

அகநானூறு
எட்டுத்தொகை நூல்களுள் தொகுப்பு முறையில் தனித்து விளங்குவது அகநானூறு. இத்தொகைநூல் அகப்பொருளில் அமைந்த 400 பாடல்களைக்கொண்டு விளங்குவதால் அகநானூறு என்ற பெயர் பெற்றது. மேலும் எட்டுத்தொகையுள் 13-31 என்ற அடியளவுடைய நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை 'நெடுந்தொகை' என்றும் குறிப்பிடுவர்
இத்தொகை நூலிலுள்ள 1 முதல் 120 வரையுள்ள  பாடல்கள் களிற்றியானை நிரை என்றும், 121 முதல் 300 வரையுள்ள பாடல்கள் மணி மிடை பவளம் என்றும், 301 முதல் 400 வரையுள்ள பாடல்கள் நித்திலக் கோவை என்றும் மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல் இந்நூல் தொகுப்பில் 1,3,5,7 … என ஒற்றைப்படை எண்ணாலான பாடல்கள் பாலைத் திணையைச் சேர்ந்தவையாகவும், 2,8 எனும் எண்களைக்கொண்டு வருவன குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், 4, 14 என  4 எனும் எண்ணைப் பெற்று வருவன முல்லைத் திணைப் பாடல்களாகவும்,6,16,26 என 6 னும் எண்ணைப் பெற்று வருவன மருதத்திணைப் பாடல்களாகவும், 10, 20, 30 என வரும் பாடல்கள் நெய்தல் திணைப் பாடல்களாகவும்  தொகுக்கப்பட்டுள்ள முறைமை கவனிக்கத்தக்கது. இந்நூலினைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
கலித்தொகை
அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. அதன்படி கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்களைக் கொண்ட நூலாதலின் கலித்தொகை என பாவகையால் பெயர்பெற்ற நூலாகத் திகழ்கின்றது. கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப்பாடல் தவிர்த்து 149 பாடல்களுள், பாலைக்கலியில் 35 பாடல்களும், குறிஞ்சிக்கலியில் 29 பாடல்களும், மருதக்கலியில் 35 பாடல்களும், முல்லைக்கலியில் 17 பாடல்களும், நெய்தற்கலியில் 33 பாடல்களும், இடம்பெற்றுள்ளன. இதனை முறையே பாலைபாடிய பெருங்கடுங்கோ, கபிலர், மருதன் இளநாகன், சோழன் நல்லுருத்திரன், நல்லந்துவனார் எனக் குறிப்பிடப்படும் ஐந்து புலவர்களும் பாடியுள்ளனர்.
பதிற்றுப்பத்து
எட்டுத்தொகை நூல்களுள் புற நூலாக விளங்கும் இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் தற்போது கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களைப் பற்றியும், அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்களான மூவரைப் பற்றியும் என இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
புறநானூறு
புறத்திணை சார்ந்த 400 பாடல்களைக் கொண்ட தொகை நூலாதலின்  இது புறநானூறு எனப் பெயர்பெற்றது. இத்தொகை நூல் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும், மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் அறிந்துகொள்ள பெரிதும் துணை நிற்கின்றது.
பரிபாடல்
பல்வகைப் பாக்களும், பலவாய அடிகளும் பரிந்துவரும் பாட்டாதலால் பரிபாடல் என்ற பெயரைப் பெற்றது. இது அகமும் புறமும் இணைந்த நூல். தொடக்கத்தில் 70 பாடல்களின் தொகுப்பாக விளங்கிய இந்நூலில் தற்போது திருமால், முருகன், வையை ஆகியன பற்றி முறையே 6,8,8 என்ற அளவில் 22 பாடல்கள் மட்டுமே கிடைந்துள்ளன. இவற்றைப் பாடிய புலவர்கள் மொத்தம் 13 பேர். இதனைத் தொகுத்தவர் குறித்து அறிய இயலவில்லை.

எட்டுத்தொகை
வ.எண்
தொகை நூல்
அடி வரையறை
பாடல் எண்ணிக்கை
திணை
தொகுத்தவர்
தொகுப்பித்தவர்
1
நற்றிணை
9-12
400
அகம்
தெரியவில்லை
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
2
குறுந்தொகை
4-8
400
அகம்

பூரிக்கோ
3
ஐங்குறுநூறு
3-6
500
அகம்
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
4
அகநானூறு
13-31
400
அகம்
மதுரை உப்புரி குடிகிழான் மகன் உருத்திர சன்மன்
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
5
கலித்தொகை

150
அகம்
நல்லந்துவனார்
தெரியவில்லை
6
பரிபாடல்

22
அகம் புறம்
தெரியவில்லை
தெரியவில்லை
7
பதிற்றுப்பத்து

100
புறம்
தெரியவில்லை
தெரியவில்லை
8
புறநானூறு
4-40
400
புறம்
தெரியவில்லை
தெரியவில்லை

பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை தொடங்கி மலைபடுகடாம் முடிய உள்ள பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு எனக் குறிப்பிடப்படுகின்றது.  இதனைப் பின்வரும் பழைய வெண்பா ஒன்று தெளிவுபடுத்துகின்றது.
முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருஇனிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தவை. இதனுடன் மதுரைக் காஞ்சி என்ற நூலைச் சேர்த்து ஆறு புறநூல்கள் பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ளன.

இவைதவிர முல்லைப் பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்ற மூன்றும் அக நூல்களாகும். எஞ்சிய நெடுநல்வாடை அகமா? புறமா? என்ற ஆய்வுக்குரிய நூலாக விளங்குகிறது

திருமுருகாற்றுப் படை
முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த இந்நூலை இயற்றியவர் நக்கீரர். இவரும் நெடுநல்வாடையைப் பாடியவரும் ஒருவரே என்றும் வெவ்வேறானவர் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. ஆற்றுப்படுத்தப் படுவோன் பெயர் நூலுக்கு அமைவது ஏனைய ஆற்றுப்படைகளின் பண்பு. ஆனால்  அதற்கு மாறாக, பாட்டுடைத் தலைவன் பெயரால் அமைந்தது திருமுருகாற்றுப்படை. 317 அடிகளில் அகவற்பாவால் பாடப்பட்ட இந்நூலுக்குப் புலவராற்றுப் படை என்ற பெயரும் உண்டு.
இதில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆறுபடை வீடுகள் பற்றியும், ஆங்காங்கு நடக்கும் வழிபாடுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. இந்நூல் சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையிலும் இடம்பெற்றுள்ளது.

பொருநராற்றுப் படை
போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது. சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு முடத்தாமக் கண்ணியார் இயற்றிய இப்பாட்டு 248 அடிகள் கொண்டது.
சிறுபாணாற்றுப் படை
 ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது இப்பாட்டு. இது 269 அடிகளில் அகவற்பாவால் பாடப்பட்டது. சிறிய யாழை வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்துவதாகப் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.
பெரும்பாணாற்றுப் படை
இது கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர், காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனைப் புகழ்ந்து பாடிய 500 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும். பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று.
மலைபடுகடாம்
வேளிர்குடியைச் சேர்ந்த நன்னன் சேய் நன்னன் என்பானை இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் பாடிய 583 அடிகள் கொண்ட அகவற்பாட்டு இது. பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது. மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.
முல்லைப்பாட்டு
பத்துப்பாட்டுள் அடியளவில்  மிகச் சிறியது முல்லைப்பாட்டு. இந்நூலைப் பாடியவர் நப்பூதனார். கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக வாக்குறுதி தந்து போர்க்கடமை ஆற்றச் சென்ற தலைவன் திரும்பிவரும் வரையில், பிரிவுத் துயரைத் தாங்கி, இல்லறம் காக்கும் மனைவியின் ஒழுக்கம் பற்றிப் பேசுவதே முல்லைத்திணை. முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்தது.
பட்டினப்பாலை
காவிரிப் பூம்பட்டினத்தின்  வளத்தைப் பாராட்டிப் பாடிய பாலைத் திணைப் பாட்டாதலின் இதற்கு பட்டினப்பாலை என்ற பெயராயிற்று. 301 அடிகள் கொண்ட இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்றும் குறிப்பிடுவர். இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான். இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியரும் இவரே.
பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது. அகப்பொருள் இலக்கணம் இதனைச்  ‘செலவழுங்குதல் என்று கூறும்.
குறிஞ்சிப் பாட்டு
261 அடிகள் கொண்ட இவ்வப்பாட்டு களவொழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுவது. குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று. பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு. இது அறத்தொடுநிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. 99 மலர்களைப் பறித்து பெண்கள் பாறையில் குவித்து அருவியில் நீராடி மகிழ்ந்தமை பற்றிய செய்தி குறிப்பிடத்தக்கது. ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழ் அகத்திணைச் சிறப்பைக் கூறும் நோக்கத்தில் கபிலரால் இயற்றப்பட்டது இச்செய்யுள்.
மதுரைக் காஞ்சி
பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது. இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறி, வாழ்நாளை நன்முறையில் வாழுமாறு அறிவுறுத்தும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றப்பட்டது மதுரைக்காஞ்சியாகும்.
இந்நூல் கூறும் நிலையாமை உலக வாழ்க்கையை இகழ்ந்து ஒதுக்குவதை நோக்கமாகக் கொள்ளாமல், உலகம் நிலையானது. இதில் நிலைத்த புகழை நிலைநிறுத்த வேண்டும் என அறிவுறுத்துகிறது.
நெடுநல்வாடை
188 அடிகளில் இந்நூலை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவரும் திருமுருகாற்றுப்படை ஆசிரியரும் வெவ்வேறு புலவர்கள் என்றும், இருவரும் ஒருவரே என்றும் இருவேறு கருத்துக்கள் கூறப்படுகிறது.
காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில் இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவையை வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.
எல்லோருக்கும் பொதுவான வாடைக்காற்று பிரிவுத் துயரால் வருந்தும் காதலிக்கு நெடியதாகத் தோன்றுகிறது. அதாவது, ஒரு பொழுது ஓர் ஊழி போல் தோன்றுகிறது. ஆனால் பாசறையில் தங்கி போர்ச் செயலில் சிந்தையைச் செலுத்தும் தலைவனுக்கு இவ்வாடை நல்வாடையாக விளங்குகிறது. என்பதே இப்பாட்டின் பெயர்ப் பொருத்தம்.
இவ்வகப்பாட்டின் எந்த இடத்திலும் யாருடைய பெயரும் சுட்டிக் கூறப்படவில்லை எனினும், ‘வேம்பு தலை யாத்த நோன்காழ் எஃகம்’ என்ற பாடலடி பாண்டியனுக்குரிய வேப்பம் பூவைச் சுட்டுவதால் இதனைப் புறப்பாட்டு என்றும் குறிப்பிடுவர்.
பத்துப்பாட்டு

வ.எண்
நூல்
அடியளவு
திணை
பாடிய புலவர்
பாடப்பட்டவர்
1
திருமுருகாற்றுப்படை
(புலவராற்றுப்படை)
317
புறம்
நக்கீரர்
முருகன்
2
பொருநராற்றுப்படை
248
புறம்
முடத்தாமக் கண்ணியார்
கரிகால் சோழன்
3
சிறுபாணாற்றுப்படை
269
புறம்
நல்லூர் நத்தத்தனார்
ஓய்மாநாட்டு நல்லியக்கோடன்
4
பெரும்பாணாற்றுப்படை
500
புறம்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
தொண்டைமான் இளந்திரையன்
5
மலைபடுகடாம்
(கூத்தராற்றுப்படை)
583
புறம்
பெருங்கௌசிகனார்
நன்னன் சேய் நன்னன்
6
முல்லைப்பாட்டு
103
அகம்
நப்பூதனார்
-
7
பட்டினப்பாலை
301
அகம்
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
கரிகால் சோழன்
8
குறிஞ்சிப்பாட்டு
261
அகம்
கபிலர்
-
9
மதுரைக்காஞ்சி
782
புறம்
மாங்குடி மருதனார்
பாண்டியன் நெடுஞ்செழியன்
10
நெடுநல்வாடை
188
அகம் புறம்
நக்கீரர்
-