சுவடியியல்
அறிமுகம்
சுவடிகளைப் பற்றிய அறிவுப்புலம் சுவடியியல் எனப்படுகிறது. சுவடிகளைப்பற்றி அறிவது, சேகரிப்பது, பாதுகாப்பது, ஆராய்வது, படிப்பது பதிப்பிப்பது என்பன இதனுள் அடங்கும்.
சுவடிகளின் அமைப்பு, சுவடிகள் எதனால் அழிவுக்கு உள்ளாகிறது, அழிவிலிருந்து சுவடிகளை எவ்வாறு அழியாவண்ணம் பாதுகாக்கலாம், நாடெங்கும் உள்ள சுவடிகளை எவ்வாறு திரட்டலாம், திரட்டிய சுவடிகளை எவ்வாறு முறையாக வகைப்படுத்தலாம், அவற்றை எவ்வாறு பதிப்பிக்கலாம் என்பனபோன்ற வழிமுறைகளை சுவடியியல் மூலம் அறியலாம்.
உலகெங்கும் உள்ள சுவடிகளில் அச்சான சுவடிகள் எவை அச்சாகாத சுவடிகள் எவை என்பனவற்றையும், சுவடிகளை ஆய்வு செய்யும் முறை மற்றும் பதிப்பு நெறிமுறைகள் ஆகியவற்றையும் சுவடியியல் வாயிலாக தெரிந்துகொள்ள முடிகிறது.
‘சுவடி’ என்னும் சொல் கையால் ஓலையில் சுவடை உருவாக்கி எழுதப்படும் நூலை குறிப்பது. அதாவது எழுத்துக்கள் பதியுமாறு எழுதப்பட்ட ஏடுகளின் தொகுப்பு சுவடி என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு எழுதப்பட்ட சுவடிகள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், திருமுகம் என்னும் பெயர்களால் இலக்கியங்களில் சுட்டப்படுகின்றன.
சுவடிகளின்
தோற்றம்
o
நம் தமிழ்ச் சமூகத்தில் கற்பித்தல் என்பது தொடக்க காலத்தில்
வாய்மொழிப் பாடமாக இருந்தது. எழுத்து
பயிற்சி மணலிலும் நெல்லிலும் எழுதிப் பயிற்றுவிப்பதாக இருந்தது. பிறகே ஓலையில்
எழுதும் பயிற்சி தொடங்கப்பட்டது.
o
பழங்காலத்தில் திண்ணைப்பள்ளி ஆசிரியர்களிடம் பாடம்கேட்ட
நூல்களை மாணவர்கள் பிற்காலத் தேவைக்காக சுவடிகளில் எழுதி வைத்தார்கள்.
o தொடக்கக் கல்வியை முடித்தவர்கள் மேலும் கற்க விரும்பிய போது
சுவடிகளை ஆசிரியரிடமிருந்தோ அல்லது பிறரிடமிருந்தோ வாங்கி சுவடிகளில் எழுதி
வைத்தார்கள்.
o
மனப்பாடம் செய்யப்பட்ட பாடல்கள் எழுத்து வடிவம் பெற்றதால்
சுவடிகள் எண்ணிக்கையில் பெருகின.
o எழுதப்பெற்ற சுவடிகள் படிஎடுக்கப் பெற்றதால் மேலும் வளர்ச்சிபெற்றது.
o ஏற்கனவே எழுதப்பட்ட சுவடிகள் பழுதடைந்ததால் அவற்றைப் புதிய
சுவடிகளில் படியெடுத்தனர்.
o
பல்வேறு இலக்கிய இலக்கண நூலுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களால்
சுவடிகள் பெருகின. இறையுணர்வு காரணமாக சமயச் சுவடிகள் பெருகின.
o குறுநிலமன்னர்கள், வள்ளல்கள் காலத்தில் அவர்கள் அளித்த ஆதரவால்
சிற்றிலக்கியங்கள் பெருகின.
o மக்களின் தேவைக்காகவும் பல சுவடிகள்(இதிகாசக் கதைகள், மருத்துவச் சுவடி, ஜோதிட சுவடி, கணிதம், இசை, நாடகம் ) படியெடுக்கப் பெற்று வளர்ச்சியுற்றுள்ளன.
ஓலைகளில் ஏன் எழுதப்பட்டது?
இலை, மரப்பட்டை, களிமண்பலகை போல்வன விரைவில் அழியக் கூடியவையாக இருந்தன. மரப்பலகை, மூங்கில்பத்தை போன்றவற்றில் அளவில் பெரிய நூல்களை எழுதிக் கையாள்வது மிகவும் கடினமானதாக இருந்தது. தோல், துணி, உலோகத் தகடு போல்வன மிகுந்த பொருட் செலவினை உண்டாக்கும். பிற உயிர்களைக் கொன்று அவற்றின் தோலில் நூல்களை எழுதுவது மனிதத்தன்மைக்கு முரண்பட்டதாகவும், அருவருக்கத் தக்கதாகவும் அமைகிறது. மேலும் அவற்றில் விரைவாக எழுதவும் முடியாது. கருங்கல் போன்ற பிறபொருள்கள் பிற இடங்களுக்கு எடுத்துச்செல்ல இயலாதவை. ஆனால் ஓலையோ ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் வரை அழியாத்தன்மை வாய்ந்ததாகவும் செலவு இல்லாததாகவும் இருப்பது. தமிழகத்தில் கிராமப்புறங்கள் முதல் எல்லா இடங்களிலும் மிகுதியாகவும் எளிமையாகவும் கிடைக்கக் கூடியது; மிகப் பெரிய அளவுடைய நூல்களையும் ஒருசுவடிக்கட்டில் அடக்கக்கூடிய தன்மை வாய்ந்தது; பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் அளவு உடையது; பாதுகாக்க ஏற்றது. இக்காரணங்களால் ஓலைகளையே தமிழர் தேர்ந்தெடுத்து மிகுதியாகப் பயன்படுத்தினர்.
எழுது கருவிகள்
உலகின் பல பகுதிகளில் எழுதுவதற்கு பைப்ரஸ் என்னும் ஒரு வகைக் கோரைப் புல்லையும் விலங்குகளின் தோலையும் பயன்படுத்தினர். அவற்றில் நாணல் குச்சியைக் கொண்டு இலைச்சாறு, மிருகங்களின் ரத்தம் ஆகிவற்றைப் பயன்படுத்தி எழுதினார்கள். கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்கள் இவ்வழக்கத்தைக் கொண்டிருந்தனர். கிரேக்கம், ரோம், எபிரேயம் போன்ற நாடுகளில் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை இத்தகைய பைப்ரஸ் புல்லையே எழுதுவதற்குப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவை விரைந்து அழிந்துவிடும் தன்மையுடையனவாக இருந்ததால் விலங்குகளின் தோலையும் எழுதுவதற்குப் பயன்படுத்தினர். இலைச்சாறு, பூச்சாறு, மிருகங்களின் ரத்தம் ஆகியவற்றையும் எழுதுவதற்கு பயன்படுத்தினார்கள்.
நம் நாட்டில் களிமண்பலகை, கல், தோல், உலோகத்தகடு(பொன்தகடு, செப்பேடு, வெள்ளித்தகடு), இலை, மரப்பலகை, துணி, மூங்கில்பத்தை முதலான பொருட்களை எழுதப் பயன்படுத்தியிருந்தனர் என்றாலும் செய்திகளை எழுதி தூதுவர் மூலம் அனுப்பவும் இலக்கியங்களை எழுதிவைக்கவும் பனை ஓலைகளையே மிகுதியான அளவு பயன்படுத்தினர்.
சுவடி தயாரிப்பு
சுவடிகளைப் பூச்சி அரிப்பிலிருந்து பாதுகாக்க மஞ்சள் பூசினார்கள். ஓலைகளில் கீறி எழுதப்பட்ட எழுத்துக்கள் தெளிவாக தெரிவதற்காக விளக்கு மையினை பூசினார்கள். எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பனை ஓலை ‘கூந்தல்பனை’, ‘நொங்கு பனை’ என்ற இருவகையான பனை மரங்களிலிருந்து கிடைக்கக்கூடியதாக இருந்தது.
பனை ஓலைகளை நிழலில் உலர்த்தி பதப்படுத்தி ஒழுங்குபட நறுக்கி சுவடி தயாரித்தார்கள் அத்தகைய சுவடி நறுக்குகள் ‘ஏடு’ எனப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட எழுதப்படாத ஏடுகள் வெள்ளோலை எனப்பட்டது. இவ்வாறு ஓலை தயாரிக்கும் செயலுக்கு ஓலைவாருதல் என்று பெயர்.
பதப்படுத்தி நன்கு நறுக்கி உருவாக்கப்பட்ட ஓலைகளின் நடுவே துளையிட்டு சிறு நூல் கயிற்றில் அச்சுவடிகளைக் கோர்த்து சுவடிகள் ஒடியாமல் இருப்பதற்காக இரு பகுதியிலும் சிறு கட்டையினை(சட்டங்கள்) வைத்து பாதுகாத்து வந்தனர்
ஓலை எழுதுவதற்குப் பதமாக உள்ளதா என்பதை சுழித்துப்(கீறி) பார்த்து பயன்படுத்தினர். இதுவே பிற்காலத்தில் பிள்ளையார்சுழி என அழைக்கப்பெறலாயிற்று.
எழுத்தாணி
ஆணி, கூரியகல், தண்டு, நாணல், பறவைஇறகு, பன்றிமுள், விலங்குகளின் எலும்பு, மெல்லிய தூரிகை போன்ற பல பொருள்களை மக்கள் எழுதும் கருவிகளாகப் பயன்படுத்தினர். என்றாலும் ஓலைகளில் எழுதுவதற்கு எழுத்தாணிகளையே பயன்படுத்தினர்.
குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி என்பன எழுதுவதற்குரிய எழுத்தாணி வகைகள். தந்தமும் பொன்ஊசியும் கூட எழுதுவதற்குரிய எழுத்தாணிகளாகப் பயன்படுத்தப்பட்டன என்பதை இலக்கியச் சான்றுகளின் வாயிலாக அறியமுடிகிறது. பழங்காலத்தில் அரசர்களிடம் “ஓலை எழுதுவோர்” என்னும் பணியாளர் இருந்தனர்.
சுவடிகளைத் திரட்டுதல்
சுவடிகளைத் திரட்டும் பணி சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டது. மன்னர் பலர் புலவர்களை ஒருங்கிணைத்து இப்பணியை மேற்கொண்டார்கள். இதற்கு சங்கம் என்கிற அமைப்பும் அதில் தொகை செய்யப்பட்ட சங்க இலக்கியங்களும் சான்றாக அமைகின்றன. இடைக்காலத்தில் மடாலயங்கள் சுவடிகளைத் திரட்டி பாதுகாத்து வைத்தன. பிற்காலத்தில் காலின் மெக்கன்சி, லெய்டன், பிரௌன், எல்லிஸ், ஏரியல் போன்ற அயல்நாட்டவர்களாலும் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர், பாண்டித்துரைத்தேவர், கனகசபைப்பிள்ளை, ரா. இராகவையங்கார் எனப் பலரும் ஓலைச் சுவடிகளைத் திரட்டித் தொகுத்தனர்.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, உ.வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஔவை சு. துரைசாமிப்பிள்ளை போன்றவர்கள் கற்பதற்காகவும் பதிப்பிப்பதற்காகவும் ஓலைச்சுவடிகளைத் திரட்டினர்.
சுவடிகளின் வகைப்பாடு
அரசினர் கீர்த்திசைச் சுவடி நூலகம், உ.வே. சாமிநாதையர் நூலகம், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவற்றில் பின்பற்றப்பட்டுள்ள வகைப்பாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டு பொருள் அடிப்படையில் சுவடிகளை அகராதி, அரிச்சுவடி, ரசவாதம் இலக்கணம், இலக்கியம், கணிதம், சமயம், ஜாலம், ஜோதிடம், தோத்திரம், நாடகம், புவியியல், மருத்துவம், மாந்திரீகம், வரலாறு, வானவியல் எனப் பலவாறு வகைப்பாடு செய்யலாம்.
சுவடிகளின் அழிவு
இயற்கையாகவும் செயற்கையாகவும் பல்வேறு காரணங்களால் சுவடிகள் காலந்தோறும் அழிந்துபோயின. அந்த வகையில் மறைந்துபோன தமிழ்நூல்கள் ஏராளம். கிடைத்த சுவடிகளில் பல சிதிலமடைந்தே கிடைத்தன.
கரையான்களாலும், ராமபாணம் எனப்படுகின்ற ஒரு வகைப் பூச்சிகளாலும் பூஞ்சைகளாலும் சுவடிகள் இயற்கையாகவே அழிந்தன. மேலும் போர், அரசியல் மாற்றம், வெளிநாடுகளுக்குச் சுவடிகளை விற்பது, தீயிலிட்டு எரிப்பது. ஆற்றிலும் குளத்திலும் கிணற்றிலும் போடுவது, கவனக்குறைவு ஆகியவற்றால் ஏடுகள் செயற்கையாக அழிக்கப்பட்டன. ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்டால் பலன் கிடைக்கும் என்கிற மூடப்பழக்கத்தால் ஏராளமான சுவடிகள் ஆற்றில் விடப்பட்டு அழிக்கப்பட்டன .
சுவடிப் பாதுகாப்பு
பழங்காலத்தில் ஓலையில் எழுதிய எழுத்து தெளிவாக தெரிவதற்காக சுவடிகளுக்கு மஞ்சள் பூசினர் கீறி எழுதிய இடங்களில் ஒரு வகை இலைச்சாறு அல்லது விளக்கின் மை என ஏதேனும் ஒன்றைப் பூசினர். இவைகளே ஒரு வகையில் சுவடிகளைப் பாதுகாக்கும் பூச்சிக்கொல்லிகளாக இருந்தது. வேப்பிலை, வசம்பு போன்ற பொருட்களைக்கொண்டும் சுவடிகளைப் பூச்சி அரிப்பிலிருந்து பாதுகாத்தனர்.
அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள தற்காலத்தில் சுவடிகளை ஸ்கேனர்(வருடி) மூலம் படமாக எடுத்து எண்ணிம(டிஜிட்டல்) முறையில் சேமித்து பாதுகாக்கின்றனர். மூலச்சுவடிகளைப் பூச்சிகள் அரிக்கா வண்ணம் பாதுகாக்க அவற்றை முறையாகத் துடைத்து அவற்றின் மீது Lemon Grass Oil, Java Citranella Oil போன்றவற்றைப் பூசி பாதுகாக்கின்றனர்.
சுவடிப்பதிப்பு
கி.பி. 1812 இல் திருக்குறள் அறத்துப்பாலை F.W. எல்லீஸ் என்பார் பதிப்பித்தார் என்ற செய்தியை அடிப்படையாகக்கொண்டு சுவடிகளைப் பதிப்பிக்கும் பணி தொடங்கிய காலமாக கி.பி. 19 ஆம் நூற்றாண்டைக் குறிப்பிடலாம்.
தமிழ்ச்சுவடிகள் உள்ள இடங்கள்
1. அரசினர் சுவடி நூலகம், சென்னை.
2. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
3. கல்கத்தா தேசிய நூலகம், கல்கத்தா.
4. சரசுவதி மகால் நூல் நிலையம், தஞ்சாவூர்.
5. சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர்.
6. சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், சென்னை.
7. டாக்டர் உ வே. சாமிநாதையர் நூலகம், திருவான்மியூர்.
8. தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
9. திருவனந்தபுரம் பல்கலைக்கழகச் சுவடி
நூலகம், திருவனந்தபுரம்.
10. பிரமஞானசபை நூல் நிலையம், அடையாறு.
11. புதுவை பிரஞ்சு நிறுவனம், பாண்டிச்சேரி.
12. வெங்கடேசுவரா கீழ்த்திசைமொழி ஆராய்ச்சி
நிறுவன நூலகம், திருப்பதி
13. ஆந்திரப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்.
14. உஸ்மானியா பல்கலைக்கழகம், ஐதராபாத்
15. கலைமகள் கல்வி நிலையம், ஈரோடு.
16. கள்ளிக்கோட்டைப் பல்கலைக்கழகம், கள்ளிக்கோட்டை.
17. காசிமடம், திருப்பனந்தாள்.
18. சங்கராச்சாரியார் சுவாமிகள் மடம், காஞ்சிபுரம்.
19. தருமபுர ஆதீனமடம், மாயவரம்.
20. திருவாவடுதுறை ஆதீனமடம், திருவாவடுதுறை.
21. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
22.
மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை.
23.
British
Museum, London.
24.
The
Library of the Royal Asiatic Society. London.
25. The Library of Cambridge University.
மேலும் அறிய
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்