புதன், 28 ஜூலை, 2021

ஒரு கனவு

ஒரு கனவு

வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் சாதிக்காவிட்டாலும் இந்த மூர்த்திக்கு கனவு காண்பதில் மட்டும் எந்த குறையும் இருக்காது. கனவு என்றால் பேய்களோடு பேசுவதோ அல்லது திரைப்படத்தில் காட்டுவதைப்போல காதலியோடு டூயட் பாடுவதாகவோதான் இருக்கும் என்று யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம்.

மூர்த்தி கனவு காண்பதில்கூட ரொம்பச் சிக்கனமான மனிதன்தான். “ஏன் அவருக்கு பிரமாண்ட கனவுகள் தோன்றாதா?” என்று யாரும் கேட்டுவிடக் கூடாது.

 பொதுவாக கனவுகளைப் பற்றி  உளவியல் நிபுணர்கள் “நிறைவேறாத ஆசைகள்தான் கனவுகளாக வெளிப்படுகின்றன” என்று எங்கோ கேட்ட ஞாபகமோ, படித்த ஞாபகமோ  அது எனக்குத் தற்போதைக்கு ஞாபகத்தில் இல்லை. அப்படிப் பார்க்கப்போனால் எதிலும் எளிமையை விரும்புகிற மூர்த்திக்கு பிரமாண்டமான கனவு வந்திருக்க வாய்ப்பில்லை என்று நாமே ஒரு முடிவுகட்டிக்கொள்வதில் தவறில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது; உங்களுக்கு எப்படியோ அது எனக்குத் தெரியாது.

“அது என்ன, சாதித்தவனுக்கு மட்டும்தான் கனவு வருமா?” என்றோ, அல்லது “எது சாதனை” என்றோ,  என்னால் பதில் சொல்லமுடியாத கேள்விகளையும் யாரும் கேட்டுவிடக்கூடாது. நான் என் பார்வையில் அப்படிச் சொல்லவில்லை அவரைப்பற்றி மற்றவர்கள் சொன்ன மதிப்பீட்டின் அடிப்படையில் அப்படிச் சொல்லிவிட்டேன். அதுகூட பெரும் தவறுதான் அதற்காக நீங்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும்.

“கனவில் இப்படிக்கூட நடக்குமா?” என்றும் கேள்விகேட்கக்கூடாது. அப்படி யாராவது கேட்டால் “அதுதான் கனவாயிற்றே அது எப்படியாவது இருந்துவிட்டுப் போகிறது உங்களுக்கென்ன வந்தது” என்றுதான் நான் பதில் சொல்லுவேன் யாரும் கோபித்துக்கொள்ளக்கூடாது.

மூர்த்தி எழுதிய பாட்டைக் கொண்டுபோய் அவன் அம்மா, யாரிடமோ பேசிக்கொண்டிருக்கும் கண்ணதாசனிடம் காண்பிக்கிறார்.

பாடலை வாங்கிப் படித்துப் பார்த்த கண்ணதாசன்  சில நொடிகளில் பாடலைக் கொண்டுவந்த மூர்த்தியின் அம்மாவிடம், “இந்த சரணத்தில் இருக்கிற ஒரு வரியை பல்லவிக்கு  மாற்றினால் நன்றாக இருக்கும்” என்று பேனாவை எடுத்து சரணத்தில் இருந்த ஒரு வரியை அடித்துவிட்டு பல்லவியில் எழுதித்தருகிறார்.

கவிஞர் கண்ணதாசனிடம் காட்டி திருத்தம் செய்த பாட்டை தன் மகன் மூர்த்தியிடம் அவன் அம்மா காட்டியபோது, “சரணத்திலிருந்த வரியை பல்லவிக்கு மாற்றியது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், சந்தம் சரியாக இல்லை  மேலே உள்ள வரியில் ‘காலை’ என்று முடிந்திருக்கிறது. இந்த இடத்தில் ‘உன்னைச் சந்தித்த நேரம்’ என்ற அடுத்த அடியின் வரியை ‘உன்னைப் பார்த்த வேளை என்று மாற்றினால்தான், காலை-வேளை என்று ஓசை ஒழுங்காக வரும் என்று தோன்றுகிறது” என்று மூர்த்தி கூறியதும் அவன் அம்மா அவனது தலையில் செல்லமாக தட்டிவிட்டுப் போய்விட்டாள்.

அன்று தன்னைமீறி அதிகநேரம் தூங்கிவிட்டதால் அவசர அவசரமாக கல்லூரிக்குக் கிளம்பிப்போன பேராசிரியர் மூர்த்தி முதல் பாடவேளையில் ஆங்கில வகுப்பில்  நுழைந்தபோது சலசலவென ஒரே சத்தம். முகுந்தன் பக்கத்தில் இருக்கும் பையனிடம் ஏதோ பேசி அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறான். கொடிமுல்லை குழந்தைத்தனமாய் அங்குமிங்கும் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறாள். மீனாட்சியும் உஷாவும் மட்டும்தான் முதலில் பேராசிரியர் மூர்த்தி வகுப்பினுள் வருவதை உணர்ந்து அமைதியானார்கள்.

மேசையின் மேலிருந்த டஸ்டரை எடுத்து அதில் இரண்டு தட்டுதட்டி “எல்லோரும் அமைதியாக இருங்கள் சத்தம் போடாதீர்கள்” என்று கூறிய பிறகுதான் எல்லோரும் அமைதியானார்கள்.

சாக்பீசை எடுத்து கரும்பலகையில் சங்க இலக்கியம் என மூர்த்தி எழுதியபோது, கரும்பலகை கிரீச்சிடுகிறது. கரும்பலகையில் பெயின்ட் தேய்ந்து கிரானைட் தரைபோல வழுவழுப்பாக இருந்ததால் எழுதிய எழுத்தே தெரியாமல் இருந்தது.

எழுதிவிட்டு திரும்பி நின்று மாணவர்களைப் பார்த்த மூர்த்தி “போன வகுப்பில் சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையைப் பற்றி பார்த்தோமல்லவா? இன்றைக்குப் பத்துப்பாட்டைப்பற்றிப் பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டே மணிக்கட்டைப் பார்க்கிறார். மணிக்கட்டில் வாட்சைக் காணோம்.

மூர்த்திக்கு மனம் பதைத்தது. அவசர அவசரமாக கிளம்பிவந்ததில் எங்கேயாவது கழன்று விழுந்துவிட்டதா? அல்லது வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டோமா? அது திரும்ப நம் கைக்குக் கிடைக்காதா?  அம்மாவுக்குப் போன் செய்து வழக்கமாக வைக்கும் டேபிள்மீது இருக்கிறதா என்று பார்க்கச்சொல்வோமா? என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தவர். திடீரென்று படுக்கையிலிருந்து  போர்வையை விலக்கி எழுந்து நின்று பார்க்கிறார், மேசைமேல் வாட்ச். அவரது மனம் அமைதிப் பெருமூச்சுவிட்டது.

வாட்சில் நேரம் அதிகாலை 4.00 மணி, அப்படியே நிமிர்ந்து பார்க்கிறார். ஆறு வருடத்திற்கு முன் இறந்துபோன அவர் அம்மாவின் புகைப்படம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் எப்போதோ நின்றுபோய் ஓடாமல் கிடந்தது சுவர் கடிகாரம். அதிகாலைக் கனவு பலிக்குமா என்ன?

 

ச. நீலமேகன்

21-12-2016

புதன், 21 ஜூலை, 2021

செய்தி இடைவேளை





செய்தி இடைவேளை

 

யாருமற்ற தனியறையில் இணையத்தில் படம் பார்த்துக்கொண்டிருந்த வேணுவிற்கு படத்தில் வந்த கறுப்புவெள்ளை சாலிடர் டிவியும் அதில் வந்த சோபனாரவி செய்திவாசிப்பதாக வந்த காட்சியும் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது.  

அப்போதெல்லாம் இன்றைக்கு இருப்பதைப்போல வீட்டுக்குவீடு டிவியோ கேபிள் இணைப்போ, ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாக வைத்துக்கொள்ளும் DTH குடைகளோ கிடையாது. அதுமட்டுமல்ல இன்றைக்கு நாம் பார்க்கும் ஆயிரக்கணக்கான சேனல்களோ அதில் வரும் 24 மணிநேர நிகழ்ச்சிகளோ அப்போதெல்லாம் இல்லவே இல்லை. தூர்தர்ஷன் என்ற அரசாங்க தொலைக்காட்சியும் அதில் ஒளிபரப்பாகும் வரையறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளும்தான் அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்குக் கிடைத்த ஒரே பொழுதுபோக்கு. 

அதிலும் இன்றைக்கு இருப்பதைப்போல டிஜிட்டல் தொழில்நுட்ப ஒளிபரப்பு ஒன்றும் கிடையாது, தொலைக்காட்சியில் தெரியும் படம் தெளிவில்லாமல் பொரிபொரியாகவோ குறுக்கே கோடுகோடாகவோ சில சமயங்களில் அலையலையாகவோதான் வரும். டிவியைவிட பிரமாண்டம் அந்த டிவிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆண்டனா கம்பம்தான்.

ஊரில் யார்யார் பணவசதி உள்ளவர்கள், யார்யார் வீட்டில் டிவி இருக்கிறது என்ற புள்ளிவிவரத்தைச் சேகரிக்க வேண்டுமானால் வீடுவீடாகச் சென்று கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதில்லை; உயர்ந்து நிற்கும் ஆண்டனாக்களைப் பார்த்தாலே போதும். அதற்காக டிவியும் ஆண்டனாவும் இல்லாத வீடுகளில் உள்ளவர்கள் எல்லாம் பரம ஏழைகள் என்றோ, டிவி வைத்திருப்பவர்கள் எல்லோரும் வசதி படைத்தவர்கள் என்றோ சொல்லிவிடவும் முடியாது. காரணம் பணம் இருந்தாலும் பலருக்கு வாங்க மனம் வருவது கிடையாதே.

டிவியில் தெரியும் படத்தின் தரம் ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்கும் ஆண்டனாவின் உயரத்தைப்பொறுத்தும் அது சரியான திசையில் திருப்பி வைத்திருப்பதைப்பொறுத்தும்தான் அமையும் அதனால் சில வீடுகளில் ஆண்டனா கம்பத்தை மிக உயரமாக அமைத்திருப்பார்கள்.

டிவியில் தெரியும் காட்சி ரொம்பவும் பொரிப்பொரியாக இல்லாமல் சற்று தெளிவாய்த்தெரிவது ஆண்டனாவின் உயரத்தினால் மட்டும் அமைந்துவிடுவதில்லை, அது காக்கைகளில் ஒத்துழைப்பிலும் அடங்கியிருக்கிறது என்பதை அனுபவப்பட்டவர்கள் நன்கு அறிவார்கள். காரணம் காக்கைகள் கூட்டமாக படுக்கைவாட்டில்  அலுமினியக் கம்பிகள் பொருத்தப்பட்டு கோபுரவடிவில் இருக்கும் ஆண்டனாவில் உட்கார்ந்து பல சமயங்களில் அந்த அலுமினியக்கம்பிகளை வளைத்துவிட்டுப்போய்விடும். அதனால் அவற்றை விரட்டுவதற்காக சிலர் ஆண்டனாவிற்குமேல் காற்றடித்தால் சுழலுகின்ற வகையில் காற்றாலை ரெக்கையை மல்லாக்காகப் பொருத்தியதைப்போலப் பொருத்தி காக்கைகளை விரட்ட வழிசெய்து வைத்திருப்பார்கள் ஆனால் அந்த முயற்சியெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான், அப்புறம் அந்த காற்றாடி சுற்றாமல் சிக்கி அப்படியே கிடக்கும், பிறகு மீண்டும் காக்கைகள் வழக்கம்போல அமரத்துவங்கிவிடும்.

காக்கைகள் மட்டுமல்லாது சிலநேரங்களில் பலமான காற்றுவந்து ஆண்டனாவை திசைதிருப்பிவிட்டுப் போய்விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் டிவிக்கு சரியான சிக்னல் கிடைக்காததால் படம் வராது. இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் டிவியில் படம் வருகிறதா என்பதை ஒருவர் பார்த்துச் சொல்ல, ஒருவரோ இருவரோ ஆண்டனாவை சரியான திசைக்குத் திருப்பவேண்டும் அப்போதுதான் எல்லோரும் அன்றைக்குப் படம் பார்க்கமுடியும்.

எப்படியிருந்தாலும்  டிவியில் ஓரளவுக்குத் தெளிவான காட்சியைப் பார்ப்பதென்பது அவரவர்கள் அதிஷ்டத்தைப்பொறுத்துத்தான் அமையும். இந்த ஆண்டனா கம்பம் இருக்கிறதே அது வெறும் ஆண்டனா கம்பம் மட்டுமல்ல,  அது அந்த வீட்டின் கௌரவத்தின் அடையாளமாகவும் இருந்தது. அந்த கௌரவத்திற்கு உரியவர்களாக எல்லோரும் இருந்துவிடுவதில்லை. அந்த கௌரவம் ஊரில் வசதிபடைத்த சிலருக்கும்,  கடன்வாங்கியாவது அந்த டிவியை வாங்கி அதை கண்டுபிடித்தவனுக்கும் அதை உற்பத்திசெய்தவனுக்கும் பெருமை தேடித்தர நினைக்கும் மனம்படைத்தவர்களுக்கும்தான்  கிடைத்தது.

அப்படிப் பார்க்கப்போனால் ஊரில் பத்துப் பன்னிரண்டு வீடுகளில்தான் அந்தக் கௌரவக் கொடி பறந்துகொண்டிருந்தது. அப்படி அந்தப் பத்துப் பன்னிரண்டு வீட்டுக்காரர்களும் ஏதாவது அரசாங்க உத்தியோகத்தில் நிரந்தர வருமானம் உள்ளவர்களாகவோ, பரம்பரைப் பணக்காரர்களாகவோ, ஊரில் பெருந்தலையாகவோ, பிள்ளைகள் நன்குபடித்து பட்டணத்தில் வேலை செய்பவர்களாகவோ அல்லது புதியன விரும்பும் வேட்கை கொண்டவர்களாகவோதான் பெரும்பாலும் இருப்பார்கள்.

இப்படி டிவிப்பெட்டி வைத்திருப்பவர்கள் எல்லோரும் பெருந்தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று சொல்லிவிடமுடியாது. சிலர் யாரையும் வீட்டுக்குள் சேர்க்க மாட்டார்கள்; சிலர் வேண்டா வெறுப்பாய் பார்த்துவிட்டுப்போகட்டுமே என்று நினைத்து அனுமதிப்பார்கள்; இன்னும் சிலர் தங்கள் வீட்டில் பலரும் வந்து படம்பார்த்துவிட்டுப்போவதை பெரும் கௌரவமாக நினைப்பார்கள். இப்படிப் பல ரக மனிதர்கள் அந்த டிவிப் பெட்டிக்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்கள்.

இந்த பலதரப்பட்ட மனிதமனம் கொண்டவர்கள் வீடுகளில்தான் இல்லாதவர்கள் சென்று படம்பார்க்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். அதற்காக  எல்லாரும் எல்லாவீடுகளுக்கும் சென்றுவிடுவதில்லை. பக்கத்துவீட்டிலேயே டிவி இருந்தாலும் சண்டைக் காரர்கள் வீட்டுக்குள் யாரும் நுழைவதில்லை அவர்கள் வேறு வீடுகளுக்குத்தான் செல்வர்கள்.

அப்படிச்செல்லும் வீடுகளிலும் சில விச்சித்திரங்கள் நடப்பதுண்டு. டிவி பார்க்க வருபவர்களை வீட்டிலுள்ள பெருந்தலைகள் அனுமதித்தாலும், அந்த வீட்டிலுள்ள பேரனோ பேத்தியோ ரொம்பவும் பிகுபண்ணிக்கொள்வார்கள் அல்லது சிறியவர்கள் பெருந்தன்மையோடு நடந்துகொள்ள அந்த வீட்டிலுள்ள உலகியல் அறியாத பாட்டிகள் “எந்த தெருவுல இருந்து இங்கவந்து டிவி பார்க்க வர்றது” என்று சொல்லி தெருவெல்லை தாண்டிவரும் சிறுபிள்ளைகளை விரட்டிவிடுவதும் உண்டு.

சில நேரங்களில் பள்ளிக்கூடத்தில்  டிவி இருக்கும் வீட்டுப் பிள்ளைகளுடன் ஏதாவது சண்டை ஏற்பட்டுவிடும்போது டிவி இருக்கும் வீட்டுப் பிள்ளைகள் தங்களை எதிர்த்துச் சண்டை போட்டவர்கள் தங்கள் வீட்டுக்கு  வாடிக்கையாக டிவி பார்க்கவரும் பையனாகவோ பெண்ணாகவோ இருந்துவிட்டால் “ஏய் எங்க வீட்டுக்கு டிவி பார்க்க வருவ இல்ல அப்ப பார்த்துக்கிறேன் ஒன்ன” என்று மிரட்டல் விடுவதும் நடக்கும் அதனால் சில பிள்ளைகள் அப்படிப்பட்ட அம்சத்தைப் பெற்றுவிட்ட பிள்ளைகளிடம் எதிர்ப்புகாட்டாமல் அடங்கிப் போய்விடுவதும் உண்டு. அந்த அளவுக்கு டிவிக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு ஒரு தனி மரியாதை இருந்தது.

இந்தச் சம்பவங்கள் எல்லாம் நினைவு வந்தபோது, வர்க்க பேதங்களின் வித்து எப்படியெல்லாம் சமூகத்தில் ஊன்றப்பட்டிருந்தது என்பதை எண்ணிப் பார்த்தபோது வேணுவுக்கு விந்தையாகத்தான் இருந்தது.

இன்றைக்கு எல்ஈடி, எல்சிடி என்று சிறிய வடிவத்தில் உயர் தொழில் நுட்பத்தில் இருந்த இடத்திலிருந்தே ரிமோட் மூலம் இயக்குவதை எண்ணிப் பார்த்தபோது வேணுவுக்கு நடராஜவாத்தியார் வீட்டுப் பெரிய சைஸ் கருப்புவெள்ளை சாலிடர் டிவிதான் நினைவுக்கு வந்தது. அந்த டிவிக்கு இரண்டு பக்கம் இழுத்துப் பூட்டும் மரத்தாலான ஒருவித ஷட்டரும் அதைப் பூட்டி வைப்பதற்கு ஒரு சாவியும்கூட இருந்தது. அதை நடராஜ வாத்தியார் பையன் பாலாஜி பூட்டும்போது பார்த்ததை வேணு நினைத்துப் பார்த்து  நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தான். அப்போது அந்த டிவி டியூனரைத் திருப்பும்போது கேட்கும் ‘டக்டக்’கென்ற சத்தம் அவன் நினைவில் வந்துபோகத் தவறவில்லை.

டிவியில் வயலும் வாழ்வும் , ஒளியும் ஒலியும், மகாபாரதத் தொடர், சிறுவர்கள் ரசிக்கும் சக்திமான் தொடர், ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் ஒளிபரப்பாகும் திரைப்படம் என அட்டவணைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கமுடியும்  அவற்றில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியையும் ஞாயிறு மாலையில் ஒளிபரப்பாகும் திரைப்படத்தையும் பார்க்கவே நிறைய பேர்  வருவார்கள். ஊரில் பெருந்தன்மையானவர்கள் வீடு எது என்பதை அந்த வீட்டில் உட்கார்ந்து டிவி பார்க்கும் நபர்களின் எண்ணிக்கையையும், பார்க்கவந்தவர்களின் நிலையையும் பார்த்தாலே தெரிந்துவிடும்.

ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் திரைப்படத்திற்கு இடையில் வரும் செய்தி இடைவேளைதான் டிவி பார்க்கவரும் பிள்ளைகளுக்கு  பெரும் துன்பத்தை ஏற்படுத்திவிடும் அந்த துன்பத்தை சிறுவயதில் வேணுவும் பலமுறை அனுபவித்திருக்கிறார்.

உலகநடப்பைப் பற்றி அறியாத,  அதை அறிந்துகொள்ள விருப்பமில்லாத சிறுபிள்ளைகளுக்கு செய்தி இடைவேளை எட்டிக்காயாகக் கசக்கும். செய்தி வாசித்து முடித்து “இத்துடன் இன்றைய செய்திகள் நிறைவடைந்தன மீண்டும் செய்திகள் இரவு பத்துமணிக்கு, வணக்கம்” என்று செய்தி வாசிக்கும் பெண்மணி சொல்லிமுடித்ததும். படம் பார்க்கும் ஆர்வத்திலிருந்த பிள்ளைகள் ஏதோ படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது தானாகவே இடையில் வந்து செய்தி வாசிக்கும் பெண் எதைஎதையோ பேசி நேரத்தை வீணடிப்பதாக நினைத்துக்கொண்டு முகத்தைச் சுளித்துக்கொண்டு “வணக்கம்… வணக்கம்… போதும் போய்வா…” என்று சொல்லிவிட்டு திரைப்படம் தொடர்கிறது… என்று எப்போது வரும் என்பதை எதிர்பார்த்து ஆர்வத்தோடு காத்துக்கிடக்கும்

சில நேரங்களில் டிவி பார்க்கவந்த இடத்தில் வீட்டிலுள்ளவர்கள் சாப்பிடுகிற நேரமாகவும் அந்த செய்தி இடைவேளை  அமைந்துவிடும் இதை உணர்ந்த பெரியவர்கள் இங்கிதம் கருதி எழுந்துபோய்விடுவார்கள். அந்த சூழலில் டிவிவீட்டுக்காரர்களும் பெரியவர்கள் இல்லாத பட்சத்தில் உட்கார்ந்துகொண்டிருக்கும் சிறுவர்களிடம் செய்தி இடைவேளையை உணவு இடைவேளையாக்கி “ எல்லோரும் வீட்டுக்குப்போய் சாப்பிட்டுவிட்டு வாங்க” என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள். திரும்பிவரும்போது கதவு திறந்திருக்கும் என்று சொல்லமுடியாது. கதவு சாத்தப்பட்டிருந்தால் கதவைத் தட்ட கூச்சப்பட்டு திரும்பிப்போய்விடுவதும் உண்டு. இந்த சம்பவம்தான்  டிவி பார்க்கவரும் சிறுபிள்ளைகளுக்கு செய்தி இடைவேளையின்மீது  இந்த அளவுக்கு வெறுப்பு ஏற்படக் காரணம்.

அப்படி கதவு சாத்தப்பட்டதால் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் எப்படி முடிந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாமல் போன எத்தனையோ திரைப்படங்கள் உண்டு. இது போன்ற எதிர்பாராத வேளைகளில் திரைப்படத்தின் முடிவை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் ஓட்டம்பிடித்து வேறு ஒரு வீட்டிற்குச்  சென்று பார்த்ததும் வேணுவுக்கு நினைவுக்கு வந்தது. இந்த வலியும் செய்தி இடைவேளையின்மீது வெறுப்பு தோன்ற முக்கிய காரணியாக இருந்தது.

இப்படி ஒருநாள் நடராஜவாத்தியார் வீட்டில் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது வாத்தியார் பையன் பாலாஜி செய்ததை வேணுவால் இன்னும் மறக்கமுடியவில்லை. அன்றொரு ஞாயிற்றுக்கிழமையில்  எம்ஜிஆர் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது வழக்கம்போல செய்தி இடைவேளை வந்ததும் எல்லோரும் எழுந்துபோய்விட்டார்கள். வேணு எங்கே எழுந்து வெளியே போனால் கதவைச் சாத்திவிடுவார்களோ என நினைத்து எல்லோரும் போய்விட்டதை அறியாதவன்போல  செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது. வேணுமட்டும் இன்னும் போகாமல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த பாலாஜி, “டேய் ஊரிலிருந்து உங்க மாமா வந்திருக்கிறாராம். உங்க அம்மா உன்னை வரச் சொன்னாங்களாம்” என்று சொல்லி வேணுவை அனுப்பிவிட்டான். வேணு வீட்டுக்கு ஓடிப்போய் பார்த்தபோது மாமா வரவில்லை. அம்மாதான் தலைவலியோடு படுத்துக்கொண்டிருந்தாள். வேணுவுக்கோ ஏமாற்றத்தின் வலி..

ஞாபகக் குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வேணுவை, வீட்டில் இன்டர்நெட் வசதி இல்லாததால் தன் வீட்டுக்கு வந்திருந்த  சதீஷோடு ஆன்லைன் கிளாசில்  படித்துக்கொண்டிருந்த  அவன் மகள் ஆர்த்தி, வகுப்பு முடிந்து அப்பாவை சாப்பிடக் கூட்பிட்டபோது வேணு அந்த ஞாபகக் குளத்திலிருந்து கரையேற வேண்டித்தான் இருந்தது.

    வேணு சாப்பிட எழுந்தபோது யாரோ  இரும்புகேட்டை தட்டி கூப்பிடும் சத்தம்,  யார் என்று போய் பார்த்தபோது அவன்தான் தன் பையனை அழைத்துப்போக வந்திருந்தான். வந்தவன் வேணுவைப் பார்த்து “எப்பதான் இந்த பள்ளிக்கூடத்த தொறப்பாங்களோ பெரிய தொல்லையாப்போச்சு” என்று சொல்லிவிட்டு தன் பிள்ளையை சைக்கிளின் பின்னால் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டான். கேட்டை சாத்திவிட்டு திரும்பியபோது எதிரே வந்த ஆர்த்தி கேட்டாள் “யாருப்பா பாலாஜி அங்கிளா?” என்று. 


-          ச. நீலமேகன்

21-07-2021

திங்கள், 19 ஜூலை, 2021

கூரை

கூரை

-          சிறுகதை

 

ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தவன் தன் முகத்தில் தண்ணீர் சொட்டு சொட்டாய்  விழுந்ததில்  திடுக்கிட்டு எழுந்தபோது மழை சோவென்று பெய்துகொண்டிருந்தது. மின்சாரம் நின்றுபோயிருந்ததால், மண்ணெண்ணெய் விளக்கையும் தீப்பெட்டியையும் தேடி இருட்டில் தடுமாறிக்கொண்டிருந்தார் நடேசன்.

ஒருவழியாகத் தட்டுத்தடுமாறி தீப்பெட்டியைக் கண்டுபிடித்து எடுத்தபோது தீப்பெட்டிக்குள் தீக்குச்சிகளே இல்லாமல் வெத்துப்பெட்டியாக காலியாக இருப்பதாகத்தான் தோன்றியது அவருக்கு. அந்த வட்டாரத்தில் தீப்பெட்டியை வெத்துப்பெட்டி என்றுதான் சொல்லுவார்கள். அந்த பெயருக்கு ஏற்றார்போலத்தான் வெத்துப்பெட்டி காலியாக இருந்தது. வெத்துப்பெட்டியை கிலுகிலுப்பை ஆட்டுவதைப்போல் ஆட்டிப்பார்த்தபோதுதான் உள்ளே ஒன்றிரண்டு குச்சிகள் இருப்பதை நடேசனால் உணரமுடிந்தது.

தீக்குச்சியை எடுக்க விரலால் அழுத்தியபோது வெத்துப்பெட்டியின் முனைப்பகுதி முறிந்துபோய்விட்டது. விரலில் தட்டுப்பட்ட ஒரு குச்சியை எடுத்து வெத்துப்பெட்டியின் பக்கவாட்டில் உரசியபோது மழையின் ஈரப்பதத்தில் பெட்டி நமுத்துப்போயிருந்ததால் எத்தனையோமுறை உரசியும் தீப்பொறி வந்ததே தவிர  குச்சி தீப்பற்றவில்லை. தீப்பெட்டியின் பக்கவாட்டை உள்ளங்கையில் தேய்த்து சூடேற்றி மீண்டும் நான்கைந்து முறை உரசியதில் குச்சி பற்றிக்கெண்டது. அந்த வெளிச்சத்தில் அடுப்படிக்கு அருகில் மாடத்திலிருந்த மண்ணெண்ணெய் விளக்கை எரிகின்ற குச்சி அணைவதற்குள் பற்றவைத்துவிட்டார்.

பாட்டில் விளக்கில் மண்ணெண்ணெய் கொஞ்சமாகத்தான் இருந்தது திரிக்கு எட்டவில்லை. ஏற்றிய விளக்கு அணைந்துவிடும்போல இருந்தது. வெளிச்சத்தில் கையிலிருந்த வெத்துப்பெட்டியைப் பார்த்தபோது அஸ்திரங்கள் தீர்ந்த அம்புத் தூணியைப்போல ஒரே ஒரு தீக்குச்சிமட்டுமே மீதமிருந்தது. விளக்கு நின்றுவிட்டால் தீக்குச்சிக்கு எங்கேபோவது என்று அவசரகால நடவடிக்கையில் இறங்கிய நடேசன் விளக்கை சாய்த்து திரியை எண்ணெயால் நனைக்க முயன்றபோது பக்கென்று பாட்டில் விளக்கின் முன்பகுதி நனைந்து,  அதன் தலைப்பகுதி பிரகாசமாக எரிய ஆரம்பித்தது.

அதற்குள் தன் பிள்ளைகளின் அருகில் உறங்கிக்கொண்டிருந்த நடேசனின் மனைவி விசாலமும் நடேசனின் விளக்கேற்றும் வேள்வியில் கலந்துகொண்டார். பிள்ளைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தன் தந்தையின் இந்த வித்தைகளை எல்லாம் அவர்கள் பார்க்க கொடுத்துவைக்கவில்லை.

அந்த பாட்டில் விளக்கின் திரி கடையில் வாங்கிவந்த ஒன்றல்ல அது அவரே தயாரித்த உள்நாட்டுத் தயாரிப்பு. கடையில் விற்கும் விளக்குத் திரியை வாங்காததற்கு அது அந்நியப்பொருள் என்று அவர் விட்டுவிட்டதாக யாரும் நினைக்கவேண்டியதில்லை. அதை வாங்க அவர் கையில் போதிய வருவாய் இல்லை என்பதுதான் உண்மை. எனவேதான் சுதேசித் தயாரிப்பாக மனைவியின் கிழிந்த நூல்புடவையை ஓரத்தில் கொஞ்சமாகக் கிழித்து அதைத் திரியாகத் திரித்து விளக்குத்திரியாகப் பயன்படுத்துவார். இப்படிப்பயன்படுத்துவது நேற்றோ இன்றோ வந்த புதுப்பழக்கமல்ல அது ரொம்பகாலத்துக்கு முன்பிருந்தே  வந்த வழக்கம்.

விளக்குத்திரிமட்டுமல்ல அந்த மண்ணெண்ணெய் விளக்கும்கூட அவரது சொந்த தயாரிப்புதான். யாராவது குடித்துவிட்டு வீசிவிட்டுப்போன பிராந்திபாட்டிலைக் கொண்டுவந்து அதன் மூடியில் ஆணியால் துளையிட்டு அதில் புடவைத்துணியை திரியாக நுழைத்து அந்த விளக்கை அவர் தயாரித்து வைத்திருந்தார்.  ஒரு முறை தன் தந்தை பிராந்தி பாட்டிலில் விளக்கு தயாரிப்பதைப் பார்த்த அவரது மூத்தபையன் சுந்தரம் பழைய இங்க் பாட்டிலில் சைக்கிள் டியூப்பின் பித்தளை வாய்ப்பகுதியை பாட்டில் மூடியில் பொருத்தி சற்று நவீனப்படுத்தி தானும்கூட ஒரு விளக்கை தயாரித்திருந்தான். அதை அவனும் அவன் தம்பியும் இரவில் படிக்கின்ற நேரத்தில் மின்சாரம் நின்றுவிடுகிறபோது பயன்படுத்திக்கொள்வதுண்டு.

இப்படிப்பட்ட இக்கட்டான நேரங்களில் தீப்பெட்டிச் சண்டைகூட கணவன்மீதான விசாலத்தின் ஊடலுக்குக் காரணமாவதுண்டு. பல நேரங்களில் கணவனோடு சண்டைபோட வலுவற்று, அக்கம்பக்கத்தில் தீக்குச்சி கடன்வாங்கிய நிகழ்வுகளும் அவர்கள் இல்லற வரலாற்றில் எத்தனையோமுறை நடந்திருக்கிறது.

விளக்கிலும் மண்ணெண்ணெய் இல்லை, மண்ணெண்ணெய் ஊற்றிவைக்கும் சாராய சீசாவிலும் மண்ணெண்ணெய் தீர்ந்துபோயிருந்தது. விளக்கு அணைவதற்குள் விசாலம் மாடத்திலிருந்த அகல்விளக்கில் தாளிக்கும் எண்ணெயை ஊற்றி அதில் ஏற்கனவே இருந்த திரியை நனைத்து  விளக்கை ஏற்றிவிட்டாள். அந்த வெளிச்சத்தில் நடேசனின் துன்பம் நிறைந்த வாழ்க்கைக்குத் துணையாக நிற்கும் விசாலத்தின் முகம் அவனுக்கு விளக்கின் வெளிச்சத்தைவிட கூடுதலான வெளிச்சத்தைத் தருவதாகத் தோன்றியது.

அந்த நள்ளிரவில் இடிமின்னலோடு சேர்ந்து மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது. கூரையிலிருந்து ஒழுகும் மழைநீர் தரையில் விழுந்து நனையாமல் இருக்க ஒழுகும் இடத்திற்கு நேராகப் பாத்திரங்களை வைப்பது அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக இருந்ததால் அதற்காக கழுவிக் கவிழ்த்துவைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை எடுத்துவந்து ஒழுகும் இடத்திற்கு நேராக வைத்தபோது அலுமினியப் பாத்திரத்தில் சொட்டும் மழை நீர் ‘டொக் டொக்’கென்று விழுந்து சோகராகத்தை வாசித்துக்கொண்டிருந்தது.

மழைக்காலமானால் இந்த போராட்டம் நடேசனின் வீட்டில் ஆரம்பமாகிவிடும். கூரை ஒழுகும்போதெல்லாம், குரங்குகளை நினைத்து ரொம்பவும் குறைபட்டுக்கொள்வான், அன்றாடம் சாரைசாரையாய் குரங்குகள் வீட்டுக் கூரைகளின்மீது அணிவகுப்பு நடத்தும் பெட்டைக் குரங்குகள் தங்கள் குட்டிகள் வயிற்றைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ள அங்குமிங்குமாக நடந்துபோய்க்கொண்டிருக்கும். அந்தக் குரங்குகளுள் சில திடீரென்று இராமாயணத்தில் வரும் வாலியும் சுக்கிரீவனையும் போல வீட்டுக்கூரைமேல் ஒன்றையொன்று தாக்கி சண்டைபோட்டுக்கொள்ளும்போது ஓடுகள் உடைந்து கலைத்துப் போட்டுவிடும்போது சூரிய ஒளி அம்புபாய்வதைப் போல் வீட்டிற்குள் நுழையும். உச்சி வெய்யில் நேரத்தில் சிறிதும்பெரிதுமாக வட்டவட்டமாக சூரிய ஒளி சுவற்றில் தெரியும். அதைப் பூகோளம் படித்தவர்கள் பார்த்தால்  அவர்களுக்கு வானத்தில் சுற்றித்திரியும் கோள்கள்தான் நினைவுக்குவரும்.

மேலும் வீட்டுக் கூரையின் ஓட்டைத் திருப்பி ரொம்ப வருஷங்களாகிவிட்டிருந்தபடியால் மூங்கில் கழிகளும் ஒடிந்து அவனுக்கு எதிராக மழைக்காலத்தில் ஒத்துழையாமை இயக்கம் நடத்த ஆராம்பித்துவிடும். பிறகு அதை சமாதானப்படுத்துவதுதான் நடேசனுக்கு ஒரே வழி. அந்த சமாதான முயற்சி கூரையில் ஒழுகும் இடம் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தால் அடிஓட்டை அசைத்து தண்ணீர் ஒழுகுவதை நிறுத்த முயல்வதாக இருக்கும். உடனே ஆறுதல் சொன்னால் அழுகையை நிறுத்திவிடுகிற குழந்தையைப் போல கூரை ஒழுகுவது நின்றுவிடும்.

 பல நேரங்களில் எவ்வளவு சொல்லியும் அடங்காமல் அழுதுகொண்டே இருக்கும் அடங்காத குழந்தையைப் போல அந்த முயற்சி பலிக்காமல் போய்விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட சூழலில் பாத்திரங்களைத் தான் கேடயமாக்கி  அந்த இக்கட்டான சூழலிலிருந்து தப்பிக்க வேண்டும்.

நனைந்துகிடக்கும் வீட்டுத் தரையின் ஈரத்திற்கு தேரைகள்வேறு வந்துவிடும் அது எங்காவது ஜன்னல் கதவின் மீதோ அல்லது பாத்திரங்களின்மீதோ உட்கார்ந்துகொள்ளும். அதைக் கவனிக்காமல் பாத்திரத்தை எடுக்கவோ, அல்லது ஜன்னலை சாத்தவோ போனால் திடீரென்று மேலே தாவிக் குதிக்கும். அப்படிக் குதிக்கும்போது அதன் குளிந்த தேகம் விசாலத்திற்கு ஒருவிதமான அருவருப்பை ஏற்படுத்தும்.  சில நேரங்களில் குடிப்பதற்காக தவலையில் பிடித்து வைத்திருக்கும் தண்ணீரில் கூட நீந்திக் கிடப்பதை விசாலம் பார்த்ததுண்டு.

மழையின் வேகம் குறைந்து பிசுபிசுவென்று தூறல் போட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த நடேசனும் விசாலமும் வெகு நேரத்திற்குப்பின் போர்வைக்குள் புகுந்து கண்ணயர்ந்து போனார்கள்.

பொழுது விடிந்து வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்த விசாலம் உறங்கிக்கொண்டிருந்த பிள்ளைகள் இருவரையும் எழுப்பிவிட்டு தேநீர் கொடுத்து படிக்கச் சொல்லிவிட்டு அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப அடுப்பில் உலைவைத்து சோறாக்கிக் கொண்டிருந்தாள்.

வெந்நீரை இறக்கிவைத்துவிட்டு குளிப்பதற்கு கூப்பிட வந்தபோது இளையவன் கையெழுத்துப் பயிற்சிக்கான இரட்டைவரி நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான்.  மூத்தவன் ஓவிய நோட்டில் தான் வரைந்த வீட்டின் கூரைக்கு வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தான். விசாலத்திற்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வந்தது.

அந்த நம்பிக்கை பொய்த்துப்போய்விடவில்லை. இருபது ஆண்டுகள் கழித்து மூத்தவன் புதுவீடுகட்டி குடிபுகுந்த இரவன்று பலத்தமழை எல்லோரும் உறங்கிவிட்டார்கள் விசாலத்திற்கு அந்த மழைநாட்களின் நினைவு ஊசலாடிக்கொண்டிருந்ததால்  உறக்கம்வரவில்லை. மகன்கட்டிய ஒழுகாத காங்கிரீட் கூரையின்கீழ்  ஒருநாள்கூட வாழ்ந்துபார்க்க அவர் இல்லையே என நினைத்தபோது கண்களில் ஒழுகும் கூரையாய் கண்ணீர் சொட்டியது. பேரனை தன் மடியில் போட்டு தூங்கவைத்துக்கொண்டிருந்த பாட்டி விசாலம் அதை தன் புடவையின் முந்தானையால் துடைத்துக்கொண்டாள். மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது.

 -          ச. நீலமேகன்

                          17-07-2021

 

வியாழன், 15 ஜூலை, 2021

தலைவன் சிறைப்புறத்தானாக தோழி தலைவியிடம் கூறுவாளாய் அலர்அச்சம் கூறி வரைவுகடாயது.

லைவன் சிறைப்புறத்தானாக தோழி தலைவியிடம் கூறுவாளாய் அலர்அச்சம் கூறி வரைவுகடாயது.

 


தோழி!                                        

ஊர் உறங்கும் நேரத்தில்

மிகவிரும்பி

நம் தாய் வைத்த

மருதாணி

விடியலில்

இளங்கதிர்போல் சிவந்து

உன் கைவிரல்

காந்தளோ எனும்படி

காட்சிதந்ததை

படித்துறையில்

நீர் மொள்ள வந்த பெண்கள்

பலவாறு பேசி வியந்ததை

சோலையில் சிலர்

சொல்லக் கேட்டேன்

 

அயலார் கண்பட்டால்

அவர்கண்ணில் தெம்பட்டால்

பறித்துவிடுவார்களோ

என பயந்து

முதிராத நார்த்தங்காய்களை

நறுக்கி

ஊறுகாய் போட்டுவிடும் தாய்

இதை அறிந்தால்

மிக மகிழ்வாள்

அன்றி நம் களவறிந்தால்

யாதாகுமோ?

 

அவன் மலை

மூங்கில் கொண்டு

நம் மனைக்கு

வேலியிட்டால்

நார்த்தங்காய் பிழைக்கும்

அவன் உண்ணும்

உணவுக்கும் துணையாகும்

 

நாளை

நண்பகலில்

நார்த்தங்காய் கேட்டு

அவன் தாய்வருவாளோ?

நள்ளிரவில்

நாய்குரைக்கும் நேரத்தில்

தான் வருவானோ?

 

-       ச. நீலமேகன். 

12-07-2021

ஞாயிறு, 4 ஜூலை, 2021

பழி

பழி

-         சிறுகதை

 

 விலங்கியல் ஆசிரியை சரோஜாதேவி அன்று வழக்கத்துக்குமாறாக ஆய்வுக்கூடத்துக்குச் சென்று  விலங்கு மாதிரிகளை எடுத்துவர பாலகிருஷ்ணனை அழைத்தபோது அவன் ஒரு கணம் திகைத்துத்தான் போனான்.

அவர் வகுப்பிலும் சரி ஆய்வுக்கூடத்திலும் சரி எந்தவேலையாக இருந்தாலும் மாணவி என்றால், எப்போதும் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும் விமலா,  ஜெயபாரதி அல்லது பிரேமலதா.  மாணவன் என்றால், பாஸ்கரன் அல்லது கருணாகரன் இவர்களைத்தான் அழைப்பார். ஆனால் அன்று வழக்கத்துக்கு மாறாக பாலகிருஷ்ணனை அழைத்ததும் அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை பெருமிதமாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல குருவின் பார்வை தன்மீது பட்டதில் அவனுக்கு உள்ளூர பெரும் மகிழ்ச்சி, ஆசிரியர்களால் தானும் கவனிக்கப்படுகிறோம் என்பதை எண்ணி பார்த்ததால் வந்த பூரிப்பு அது என்று கூடச் சொல்லலாம்.

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று மற்றவர்கள் நினைக்கலாம் காரணம் பாலகிருஷ்ணன்  மதிப்பெண்களை வாரிக்குவிக்கிற முதன்மையான மாணவர்களில் ஒருவனும் அல்ல, தோற்றத்தில் மற்றவர்களின் கவனத்தைத் திருப்புகிற தோற்றப்பொலிவுடையவனும் அல்ல அடையாளம் தெரியாத மாணவச் சமுத்திரத்தில் அவனும் ஒரு துளி.

மட்டரகமான தைத்ததிலிருந்தே ஒரு முறைகூட இஸ்திரி செய்யப்படாத சாயம்போன காக்கிபேண்ட், காலர் நைந்து கிழிந்தும், அக்குள் பகுதியில் தையல் போனதால் ஊசியில் கையால் தைக்கப்பட்டும், பின்பக்கம் சுருண்டு கிடக்கும் வெள்ளை சர்ட். இதுதான் அவனது அன்றாட ஒற்றைச் சீருடை. அவனை மற்ற மாணவர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டுவதற்கு இதுகூடக் காரணமாக இருக்கலாம். ஒருவேளை இந்த தனித்துவம்தான் அன்று விலங்கியல் ஆசிரியை சரோஜாதேவி அவனை அழைத்ததற்கு காரணமோ என்னவோ தெரியவில்லை.

 அந்த  விலங்கியல் ஆய்வுக்கூடத்தின் ஒரு மூலையிலுள்ள அறைக்குள் கண்ணாடி சாடிகளுக்குள் திரவத்திற்குள் மூழ்கிய நிலையில் பதப்படுத்தப்பட்ட பாம்பு, ஆமை, நண்டு, தவளை, கடல்குதிரை, நத்தை, தேள் இப்படி எத்தனையோ உயிரின மாதிரிகள் கண்ணாடிக் கதவுகள் கொண்ட மர பீரோவில் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். அவற்றை அவன் தன் செய்முறை நோட்டில் கையொப்பம் வாங்கச் செல்கிறபோது தூரத்திலிருந்து பார்த்ததுண்டு.

ஒவ்வொரு மாதிரியின் அடியிலும் அதன் விலங்கியல் பெயர்கள் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். அந்த பெயர்களில் அவனை ரொம்பவும் ஈர்த்தது அல்லது மறக்கமுடியாதபடி செய்தது என்றால் அது பாம்பின் விலங்கியல் பெயரான நாஜா நாஜா என்பதுதான்.

அவன் அந்த பெயரை மறக்காமல் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வதற்கு ஒரு காரணம் இருந்தது.  ஒரு முறை வகுப்பில் அந்த பெயரைச் சொன்னபோது இளங்குமரன் சிரித்துவிட்டான் உடனே அவனை எழுப்பி “எதுக்குடா சிரிச்ச நான் என்ன பூஜா பூஜான்னா சொன்னேன்” என்று சரோஜாதேவி மேடம் சொன்னபோது வகுப்பில் எல்லோரும் வயிறுகுலுங்க சிரித்தார்கள் என்பதுதான் அது.

அப்படிப்பட்ட அந்த மாதிரிகளை தன் கைகளால் எடுத்துவரப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் சரோஜாதேவி மேடத்தின் பின்னால்  செருப்பில்லாத அவன் பாதங்களை ஒரு பூனை தன் பாதங்களை வைத்து நடப்பதைப்போல ஓசையில்லாமல் ரொம்பவும் பவ்யமா நடந்து போய்க் கொண்டிருந்தான்.

ஆய்வுக்கூடத்தில் எப்போதும் கெமிஸ்ட்ரி வாத்தியாரோடு உட்கார்ந்து பள்ளி முடிந்து மாலையில்  தாங்கள் இருவரும் சேர்ந்து நடத்தும் டியூசன் பற்றியும் அதன் வரவுசெலவு பற்றியும் பேசிவிட்டுப் போவதுண்டு. அன்று அப்படித்தான் ஏதோ வேலையாக கெமிஸ்ட்ரி வாத்தியாரோடு பேசிக்கொண்டிருந்தார்  கணக்கு வாத்தியார் மோசஸ்.

அப்படிப் பேசிக்கொண்டிருந்தவர் தூரத்தில் லேப்புக்குள் சரோஜாதேவி மேடத்தின் பின்னால் நடந்துவந்துகொண்டிருக்கும் பாலகிருஷ்ணனைப் பார்த்ததும் கோபத்தோடு அழைத்தார்.  அவர் அழைத்ததும் ஆசிரியையின் பின்னால் நடந்து போய்க் கொண்டிருந்த பாலகிருஷ்ணன்  அவர் அழைப்புக்கு செவிசாய்த்து ஆசிரியர் என்ற முறையில் அவர்மீது கொண்ட மரியாதையின் காரணமாக தன் நடையில் விரைவுகாட்டி தனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த சரோஜாதேவி மேடத்தைக் கடந்து அவர் முன்னால் போய் நின்றான். அவன் தன்னைக் கடந்துபோவதை விலங்கியல் ஆசிரியை சரோஜாதேவி கூட   ஒரு கணம் திரும்பிப்பார்த்தார்.

தன் எதிரே வந்து நின்ற பாலகிருஷ்ணனைப் பார்த்து கணக்குவாத்தியார் மோசஸ், “டேய் மொதல்ல எப்படி நடந்துவந்த, இப்ப எப்படி நடந்துவர்ற?” என்று மிரட்டல் தொனி வெளிப்பட அவனைக் கேட்டபோது, அவன் ஒரு நொடி இயக்கமற்று ஸ்தம்பித்துத்தான் போனான்.  அவர் எதற்காக இப்படி மிரட்டுகிறார் என்பது அவனுக்கு விளங்கவே இல்லை.

“தப்பை ஒத்துக்கொள்” என்று சொல்லிக்கொண்டே மோசஸ் வாத்தியார் தன் அருகே வந்துவிட்ட சரோஜாதேவி மேடத்திடம் இவன் உங்களைப் போலவே நடந்து ஜாடை செய்து உங்கள் பின்னால் நடந்து வந்தான் மேடம்; நான் கூப்பிட்டதும் மாற்றிவிட்டான் எவ்வளவு திமிர் பாருங்க இந்த பையனுக்கு” என்று சொன்னபோது பாலகிருஷ்ணனுக்கு எங்கிருந்துதான் அந்தக் கோபம் வந்தது என்று அவனுக்கே தெரியவில்லை. அடுத்த கணமே அவரின் ஆசிரியர் பிம்பம் அவன் கண் முன் சுக்குநூறாய் உடைந்தது.

நிரபராதி ஒருவன் தன் மீது சுமத்தப்பட்ட பொய்க்குற்றச்சாட்டை பொறுத்துக்கொள்ள முடியாமல் நெஞ்சம் கலங்குவானே அதைப்போலவே தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து “என் மீது பழி போடாதீங்க சார் உங்கள் பார்வையும் கண்ணோட்டமும் தான் தவறு, அவர் நடந்து போனதை நீங்கள்தான் வேறு கோணத்தில் பார்த்து இருக்கிறீர்கள் உங்கள் கண்ணோட்டம்தான் தவறானது அப்படி எந்த பார்வையும் எனக்கு இல்லை என்று பாலகிருஷ்ணன் சொல்லி கண்கலங்க நின்றபோது, மோசஸ் வாத்தியாருக்கு இன்னும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

அருகே நின்றுகொண்டிருந்த சரோஜாதேவி மேடத்திடம் “நான் ஒன்றுமறியாதவன் என்னை நம்புங்கள் மேடம்” என்று சொன்னபோது  பாலகிருஷ்ணன் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டது

தன் மீதே இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும் என்பதை மோசஸ் வாத்தியார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பாலகிருஷ்ணன் அழுதுகொண்டே “உங்கள் கண்ணோட்டம் சரியில்லை சார்” என்று சொன்னபோது பக்கத்திலிருந்த கெமிஸ்டரி வாத்தியார்வேறு பலமாக சிரித்துவிட்டார் அது இன்னும் அவன்மீதான கோபத்தை அதிகரிக்கக் காரணமாய்ப் போய்விட்டது.

பாலகிருஷ்ணன் அங்கு நின்று அழுதுகொண்டிருந்ததை லேப்பிலிருந்த மாணவர்கள்  எல்லோரும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தன் மீது சுமத்தப்பட்ட பழியையும் தாண்டி அவன் வருந்துவதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று தன்மீது அந்த ஆசிரியருக்கு தோன்றக்கூடிய நல்ல அபிப்பிராயத்தை இழந்துவிடுவோமோ என்பதும், இரண்டாவது தன்மீது அந்த சூழலில் தோன்றிய  வெறுப்பால் வர இருக்கின்ற செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களைக் குறைத்துவிடுவார்களோ என்பதும்தான்.

அதற்கு ஏற்றார் போல “நீ இப்படிப்பட்டவனா” என்று கேட்பதைப்போல சரோஜாதேவி மேடம் அவனை ஏறஇறங்கப் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டார். இந்தப் பழியிலிருந்து தான் குற்றமற்றவன் என்பதை எவ்வாறு நிரூபிப்பது என்ற சிந்தனையோடே கிடுகிடுவென நடந்து யாருமற்ற வகுப்பறைக்குள் வந்து கதவுகளைச் சாத்திக்கொண்டு பெஞ்ச்சின்மீது உட்கார்ந்து மேசைமீது தலையை வைத்து குனிந்தவாறு அழுதுகொண்டிருந்தான்.

லேப்பிலிருந்து கோபமாக வெளியே வந்துகொண்டிருந்த பாலகிருஷ்ணனை சமாதானப்படுத்த வகுப்பில் அவன் பக்கத்தில் உட்காரும் முருகையன் கூட தடுத்துப் பார்த்தான். ஆனால் அவன் கையை பாலகிருஷ்ணன் உதறிவிட்டு ஓடியதில் முருகையன் கைக்கடிகாரம் கழன்று கீழே விழுந்ததோடு பாலகிருஷ்ணனின் நகம் அவன் கையில் காயத்தை ஏற்படுத்தி விட்டது.

அந்த முருகையன்தான் ஓடிப்போய் பாலகிருஷ்ணன் வகுப்பறைக்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்ட விஷயத்தை மோசஸ் வாத்தியாரிடம் சொன்னான்.  அவர் பதறிப் போய் ஓடி வந்து கதவைத் திறந்துகொண்டு பாலகிருஷ்ணனின் அருகே நின்றபோது அங்கிருந்த மேசையின் மீது தன் கையால் ஓங்கி படார் படார் என்று அடித்துக் கொண்டு அழுதவாறே “என் மீது வீண் பழி சொல்ல உங்களுக்கு எப்படி சார் மனசு வந்தது. இனி என்னைப் பார்க்கும்போதெல்லாம் மேடம் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள். நீங்களாகவே ஒரு ஊகத்தை ஏற்படுத்திக்கொண்டு இப்படி பழிசுமத்தலாமா?” என்று கேட்டபோது மோசஸ் வாத்தியாருக்கு தான் தவறு செய்து விட்டோமோ என்று தோன்றியது.

பாலகிருஷ்ணனுக்கு எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவன் அழுகையை நிறுத்தாததால்  கடைசியில் தன்னை மன்னித்து விடும்படி அவனிடம் செல்லிவிட்டு அங்கிருந்து வெளியே வந்த மோசஸ் வாத்தியார், “நாம் அவனைத் தவறாகச் சந்தேகப் பட்டதைப் போல  “உங்கள் கண்ணோட்டம்தான் தவறானது” என்று இவன் சொன்னதைக்கேட்டு அந்த மேடம் நம்மைத் தவறாக நினைத்திருந்தால்?” என்பதை நினைத்துப்பார்த்தபோது நடந்துபோய்க்கொண்டிருந்த அவருக்கும்கூட உடல் கூசியது.

அவர் லேப்புக்குள் நுழைந்தபோது வேலிப்பக்கமாக இருந்து நுழைந்துவிட்ட பாம்பை அது கொடிய விஷமுடையதா? இல்லையா? அது யாரையாவது கடிக்க வந்ததா? அல்லது தன் பசிக்காக இரைதேட வந்ததா? என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல். பாம்பென்றால் கொடியது அது நஞ்சுடையது. அது கடித்தால் நாம் செத்துவிடுவோம். எனவே அதைக் கண்டால் அடித்துவிடவேண்டும் என்று சமூகம் தவறாகக் கற்பித்த பாடத்தை அப்படியே ஆராயாமல் ஏற்றுக்கொண்ட மாணவர்கள்  அதை ஆரவாரத்தோடு அடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் ஒருவன் "இன்னும் உயிர் இருக்கு வால் ஆடுதுபாரு" என்று செத்த பாம்பை அடிக்க ஓடினான்.

- ச. நீலமேகன்

    (04-07-2021)