வியாழன், 15 ஜூலை, 2021

தலைவன் சிறைப்புறத்தானாக தோழி தலைவியிடம் கூறுவாளாய் அலர்அச்சம் கூறி வரைவுகடாயது.

லைவன் சிறைப்புறத்தானாக தோழி தலைவியிடம் கூறுவாளாய் அலர்அச்சம் கூறி வரைவுகடாயது.

 


தோழி!                                        

ஊர் உறங்கும் நேரத்தில்

மிகவிரும்பி

நம் தாய் வைத்த

மருதாணி

விடியலில்

இளங்கதிர்போல் சிவந்து

உன் கைவிரல்

காந்தளோ எனும்படி

காட்சிதந்ததை

படித்துறையில்

நீர் மொள்ள வந்த பெண்கள்

பலவாறு பேசி வியந்ததை

சோலையில் சிலர்

சொல்லக் கேட்டேன்

 

அயலார் கண்பட்டால்

அவர்கண்ணில் தெம்பட்டால்

பறித்துவிடுவார்களோ

என பயந்து

முதிராத நார்த்தங்காய்களை

நறுக்கி

ஊறுகாய் போட்டுவிடும் தாய்

இதை அறிந்தால்

மிக மகிழ்வாள்

அன்றி நம் களவறிந்தால்

யாதாகுமோ?

 

அவன் மலை

மூங்கில் கொண்டு

நம் மனைக்கு

வேலியிட்டால்

நார்த்தங்காய் பிழைக்கும்

அவன் உண்ணும்

உணவுக்கும் துணையாகும்

 

நாளை

நண்பகலில்

நார்த்தங்காய் கேட்டு

அவன் தாய்வருவாளோ?

நள்ளிரவில்

நாய்குரைக்கும் நேரத்தில்

தான் வருவானோ?

 

-       ச. நீலமேகன். 

12-07-2021

கருத்துகள் இல்லை: