வெள்ளி, 13 நவம்பர், 2020
வியாழன், 12 நவம்பர், 2020
புதன், 11 நவம்பர், 2020
சனி, 7 நவம்பர், 2020
செவ்வாய், 30 ஜூன், 2020
கலியுக பாணர்கள்...
பசிக்கும்
பரிசுக்கும்
பாடிப்பாடி
இப்போதெல்லாம்
மன்னன் மட்டுமே
இருக்கிறான்
மக்களிருப்பதில்லை
பாணன் பாட்டில்
- ச. நீலமேகன்
30-06-2020
திங்கள், 29 ஜூன், 2020
எதுவும் கேட்பதாயில்லை
எவ்வளவோ
சொல்லிவிட்டேன்
யாரும் கேட்பதாயில்லை
இல்லை இல்லை
எதுவும் கேட்பதாயில்லை
வண்டி ஏர்க்காலை
தூக்கியதும்
படுத்து
அசைபோட்ட மாடு
அதுவாகவே
வந்து நிற்கும்
நுகத்தடியில்...
- ச. நீலமேகன்.
29-06-2020
புதன், 17 ஜூன், 2020
பாட்டிமார்கள்...
காலநேரக் கணக்கற்ற
உன் அழுகைக்கு
அவள் மட்டுமே
புரிந்துகொண்ட
அகராதியில் தொகுக்கப்படாத
அர்த்தங்கள்...
தவறி விழுந்தபோதெல்லாம்
வாசற்படியோடும்
தெருவில்
இடரி விழச்செய்த
பருக்கைக் கல்லோடும்
அவள் செய்துவைத்த
சமரசங்கள்....
முழுதாய்
மொழி அறியாத வயதில்
நீ கண்ணுறங்க
அவள் சொல்லித் தீர்த்த
கணக்கற்ற
கதைகள்...
காலம் மறந்து
விளையாடி
வீடுதிரும்புகையில்
உன் வருகை
எதிர்பார்த்து
ஏங்கிக்கிடந்த பார்வைகள்...
உன் பசி தீராமல்
தன் பசி அடங்காதவள்
வலிகளை...
துன்பங்களை...
வாழ்நாளை...
மாற்றிக்கொள்ள
வகைசெய்து
இயற்கை படைத்திருந்தால்
இன்று உனக்குப்
பாரமாய்
இருந்திருக்கமாட்டாள்
மூத்துத் தளர்ந்த
தாய்.
- ச. நீலமேகன்.
17-06-2020
10.30 PM.
சனி, 4 ஏப்ரல், 2020
நேர்த்திக்கடன்
நேர்த்திக்கடன்
கொழுப்பெடுத்து அலைகிறது
கொரோனா வைரஸ்
தனித்திருந்து அதற்குத்
தண்ணி காட்டுங்கள்
அடிக்கடி உங்கள்
கைகளுக்குச் சோப்பு போடுங்கள்
அதுவும்கூட சோப்புக்குத்தான்
மயங்குகிறதாம்
மாய்கிறதாம்
இருமலோ
தும்மலோ
இப்போதைக்கு
யார் வந்தாலும்
காட்டிக்கொடுக்காது
அதற்கு
உங்கள் கைக்குட்டையில்
அடைக்கலம் தாருங்கள்
இப்போதைக்கு
பக்தியோடு
கந்தசஷ்டி கவசம்
பாடினால் மட்டும் போதாது
உயிர்க்காக்க
முகக்கவசமும் தேவை
என்பதை உணருங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு
ஓடிப்பிடித்து
விளையாடுவதற்குப் பதிலாய்
கொஞ்ச நாள்
ஒளிந்து விளையாட
அறிவுறுத்துங்கள்
தொடர்ந்துவா
தொட்டுவிடாதே!
முன்னேறிப்போ
முத்தமிடாதே!
உனக்கும் எனக்கும்
பத்து மீட்டர்
இடைவெளி கட்டாயம் தேவை!
இப்படி வாகனங்களில்
எழுதப்பட்ட
எச்சரிக்கை வாசகங்கள்
இப்போது மனிதனுக்கும்
பொருந்துவதைக் கவனி!
எந்த வேடத்திலும்
வரலாம்
கொரோனா வைரஸ்
என்பதால்
அரசாங்கம் போட்ட
லஷ்மண ரேகையைத்
தாண்டாதே!
அவசியத் தேவைக்கன்றி
ஊர் எல்லையை மட்டுமில்லை
உன் வீட்டு
வாசற்படியைக்கூடத்
தாண்டக்கூடாதென
உனக்கு நீயே
காப்புக் கட்டிக்கொள்
உன்னைப் பார்க்கப்போய்
ஊருக்கே நோய்
என்ற அவப்பெயர்
தங்களுக்கு
வேண்டாமென்றுதான்
தெய்வங்களும்
கோயிலுக்கு வரவேண்டாமென
பக்தர்களுக்குக்
கோரிக்கை வைத்திருக்கின்றன
என்பதை அறிந்துகொள்
நாட்டில்
தந்தி சேவை
நிறுத்தப்பட்டதென்னவோ உண்மைதான்
அதற்கு பதிலாய்
வாட்ஸ்அப்பில்
நீங்கள் தொடங்கியிருக்கும்
வதந்தி சேவை
தேவைதானா? என்பதை யோசி!
சங்கிலி பறிப்பு
தவறுதான்
கூடாதென்பீர்கள்..
ஆனால்
கொரோனா என்ற
வைரஸ் சங்கிலியை மக்கள்
கூடாமலிருந்து பறிப்பதுதான்
இன்றைய யுத்த தர்மம்
என்ற உண்மையை
ஊருக்கு உபதேசம் செய்
காற்று
மரத்திடம்
சலவைக்குப்போய்
வந்திருக்கிறது
அதை விரைவில்
அழுக்காக்க
ஆசைப்படாதீர்கள்
வெடிச்சத்தமும்
வாகன இரைச்சலும் இல்லாததால்
பறவைகளில் பாடல்
சீரான அலைவரிசையில்
கேட்கத் துவங்கியிருக்கிறது
அதைச் சிதைத்துவிடாதீர்கள்
இந்தக் கொள்ளை நோய் ஒழிந்தால்
ஊர் எல்லையில் இருக்கும்
உங்கள்
குலதெய்வத்திற்கு
குடும்பத்தோடு
மரக்கன்றுநட்டு
நேர்த்திக்கடன் செய்வதாய்
வேண்டிக்கொள்ளுங்கள்
ஆம்
இனியும் இயற்கையைப்
பாழ்படுத்தமாட்டோமென்று
நேர்ந்துகொள்ளுங்கள்
எதிர்காலத்தில் தெய்வகுத்தம்
நேராமல் பார்த்துக்கொள்ளுங்கள்
வீதிகளில் நடமாடாமல்
வீடுகளில் இருங்கள்
விதிமீது பழிபோடாமல்
விதிப்படி நடந்திடுங்கள்
தனித்திருந்தால் ஞானம் பிறக்கும்
புது ஞாலம் பிறக்கும்.
- ச.நீலமேகன்















