திங்கள், 18 மார்ச், 2013

ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்
தமிழ் இலக்கியம்  காலந்தோறும்  பல்வேறு வகையான பாடுபொருளுக்கும் புதிய இலக்கிய வடிவங்களுக்கும்  இடங்கொடுத்து  தன்னை வளப்படுத்திக் கொண்டுள்ளது. அவ்வரிசையில்  குறிப்பிடத்தக்கது ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ. கீழ்த்திசைப் பௌத்தச் சிந்தனையில் முகிழ்த்துச், சீனத்துப் பண்பாட்டில் திளைத்து, ஜப்பானிய அழகுப்பார்வையில் மலர்ந்து கவிதை மணம் வீசும் ஹைகூ 15 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது.
இந்த ஜப்பானிய கவிதை வடிவத்திற்கென்று நீண்ட வரலாறுண்டு  இது வளர்ச்சிபெற்று  வந்த காலகட்டத்தை  பின்வருமாறு பிரிப்பர்.

ü  நாராக் காலம் (கி.பி. 700 முதல் 794  வரை)
ü  ஹபாயன் காலம் (கி.பி. 794 முதல் 1192 வரை)
ü  கமெக்கூரா காலம் (கி.பி. 1192 முதல் 1332 வரை)
ü  நான்போக்குச்சாக் காலம் (கி.பி. 1332 முதல் 1630 வரை)
ü  எடோ காலம் (கி.பி. 1603 முதல் 1863 வரை)
ü  டோக்கியோ காலம் (கி.பி. 1863 க்கு அடுத்தது)
இவற்றுள் எடோ காலத்தில்தான் 5-7-5  என்ற அசை அமைப்பிலான சீன ஜப்பானிய மொழிக் கலவையாக ஹைக்கூ கவிதை தோற்றம் பெற்றது.
ஹைக்கூ பெயர்க்காரணம்.
தொடக்க காலத்தில் ஹைக்கூ கவிதை ‘ஹொக்கூ’ என்றழைக்கப்பட்டு பிறகு ‘ஹைகை’ என்றாகி கடைசியில் ‘ஹைக்கூ’ என்றானது.
 “Haiku” என்ற சொல்லுக்கு இணையாகத் தமிழில் ஹைகூ, ஹைக்கூ, ஹைய்கு, ஹொக்கு, அய்க்கூ, ஐக்கூ என்ற சொல்லாட்சிகளும், அதன் வடிவத்தைச் சுட்டும் வண்ணம் துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்பா, அகத்தியக் கவிதை, கடுகுக் கவிதை, குட்டைக் கவிதை, குறுங்கவிதை, நறுக் கவிதை, மத்தாப்பூக் கவிதை, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை முதலான பெயர்களாலும் அடையாளப்படுத்தப்படுகிறது.
ஹைக்கூவின் இலக்கணம்
            எது ஹைகூ என்பதற்கு எத்தனையோ விளக்கங்கள் சொல்லப்பட்டுவிட்டன; என்றாலும் இன்னும் எந்த விளக்கமும் ஹைகூவை முழுமையாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறமுடியாது.  (ஈரோடு தமிழன்பன், ஜப்பானிய ஹைகூ 100, விழிகள் பதிப்பகம், சென்னை, 2011, ப.9).
               ரெங்கா, டாங்கா போன்ற ஜப்பானிய மரபுக்கவிதை வடிவங்களின் இறுக்கமான இலக்கணக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலைபெற விரும்பியபோதுதான் ஹைக்கூ பிறந்தது.  இது 5-7-5 என்ற அசை அமைப்பையுடைய மூன்றடிகளால் ஆனது. அசை என்பதற்கு ஜப்பானிய மொழியில் ‘ஓஞ்ஜி’ என்று பெயர்.  ஆரம்பகாலத்தில் 5-7-5 என்ற அசையமைப்பு முறையாக பின்பற்றப்பட்டு பிறகு கைவிடப்பட்டது.
ஹைக்கூமொழி
            ஹைக்கூவின் மொழியில் மிகைபடக் கூறுதல் இல்லை அவசியமற்ற  சொற்களைச் செதுக்கி அழகான கட்டுக்கோப்புடன் சுருங்கிய வடிவத்தில் சொல்லப்படுவது. ஹைகூவின் மொழியாட்சி முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய அம்சமாகும், சொற்களைப் பொறுத்தவகையில் ஹைகூ மிகச் சிக்கனமானது. வேண்டாத சொற்களைமட்டுமல்ல வாக்கிய அமைப்புக்கு வேண்டிய இணைப்புச் சொற்களைக்கூட அது விலக்கிவிடுகிறது. அதாவது அதன் சொல்லாட்சி தந்தி மொழியைப் போன்றது.(அப்துல் ரகுமான் (முன்னுரை) தி. லீலாவதி, ஜப்பானிய ஹைகூ, அன்னம் (பி) லிட், சிவகங்கை, 1987. ப.9. )ஆக ஹைக்கூவின் அடிப்படை சுருக்கம், தெளிவு, உணர்ச்சித் தூண்டல் என்பவையே.
ஹைக்கூ வாசகன்.
               ஹைக்கூ ஒரு காட்சியைக் காட்டுகிறது. அதைப்பற்றிச் சொல்வதில்லை. அதன் விளைவான உணர்ச்சிகளையும் சொல்வதில்லை, படிப்பவரின் கற்பனைக்கே அவைகளை விட்டுவிடுகின்றது.
               எழுதும்போது கவிஞனுக்கும்  கருப்பொருளுக்கும்  ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் எண்ணங்களைக் கலையவிடாமல் நேரடியாகச் சொல்லும்போது  கவிஞனின் உணர்வுக்கும், வாசகனின் மனதிற்கும் கவிதை ஒரு பாலமாக அமைந்து நேரடித் தொடர்பை உண்டாக்கிவிடுகிறது .                                                    
         கவிஞனின் எண்ணம் முழுவதையும் ஹைக்கூ வெளிப்படுத்துவதில்லை, ஹைக்கூ கவிதைகளைப் புரிந்துகொள்வதில் வாசகனுக்கு மிகப்பெரிய பங்குண்டு ‘ஹைக்கூ ஒரு பொருளை சுட்டிக் காட்டுவதோடு நின்றுவிடும், வாசகனே அதில் மறைந்திருக்கும் உணர்ச்சிகளைத் தேடித் துருவிக் கண்டுபிடித்து சுவைக்க வேண்டும்.
            ஹைக்கூ வாசிப்பில் வாசகனின் நிலைபற்றிராபர்ட் ப்ளைஎன்ற அறிஞர்   ‘படிப்பவனை ஒரு கழுகு தன் குஞ்சை மலை உச்சிக்கு அழைத்துச்செல்வதைப்போல கூட்டிச் செல்லும் ஹைக்கூ , அங்கே அவனைத் திடீர் என்று போட்டுவிடும், கற்பனை உள்ளவன் பறக்கிறான் இல்லாதவன் விழுந்து இறக்கிறான்’ என்று குறிப்பிடுகிறார்.
மேலும் ஈரோடு தமிழன்பன் அவர்கள் ‘அது முழுமையானதாகவோ, தெளிவான கருத்துத் தெறிப்புடனோ இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாசகன் தனது கைவசம் கொஞ்சம் வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஹைய்குவைப் படிக்க வேண்டும். அவை தேவைப்படலாம். அவன், தனது அனுபவங்களையும், அனுமானங்களையும், கற்பனைகளையும் எடுத்துக் கொண்டு சென்றால், தானும் படைப்பாளியோடு ஒரு பங்குதாரராகிப் பயனை இதயக்களத்தில் வரவு வைக்கலாம். வாசகனும் கவிஞனோடு சேர்ந்து ஹைய்குவை மணந்துகொண்டு அவனுக்கு ஒரு விதத்தில் சகலையாகி விடுவதைத் தவிர வேறு வழியில்லை’ (தமிழன்பன், சூரியப் பிறைகள், நர்மதா பதிப்பகம், சென்னை, 1985, ப. 10.) என்று குறிப்பிடுவதிலிருந்தும் ஹைக்கூ கவிதையைப் புரிந்து பொருள் கொள்வதில் வாசகன் எந்த அளவுக்கு இன்றியமையாதவனாக விளங்குகின்றான் என்பதை உணரலாம்.
ஜப்பானிய ஹைக்கூவும் பொருள் புலப்பாடும்
            ஹைகூவின் மிக முக்கியமான பண்பு அதன் ஜென் தத்துவப் பார்வை, புத்த மதத்தின் ஒரு பிரிவாகிய  ஜென் தத்துவத்தின் அடிப்படையை ஓரளவுக்காவது புரிந்துகொண்டால்தான் ஹைகூவின் ஆழங்களைச் சுவைக்கமுடியும். ஒருநாட்டின் மொழி, இலக்கியத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அந்நாட்டின் பண்பாட்டை அறிந்துகொள்ளவேண்டிய தேவையுள்ளது. அவ்வகையில்  ‘ஜப்பானிய நிலவியல், சமுதாயவியல், சமயவியல், பண்பாட்டு மரபியல் இவை எல்லாம் தெரியாமல் ஆழமும் நுட்பமும் உள்ள ஜப்பானிய ஹைகூ கவிதைகளைப் புரிந்துகொள்ள இயலாது.’ (ஈரோடு தமிழன்பன், ஜப்பானிய ஹைகூ 100, விழிகள் பதிப்பகம், சென்னை, 2011, ப.12.) என்றும் ‘சங்கப் பாடல்களில் இறைச்சி உள்ளுறை உவமம் ஆகியவற்றை விளக்கத் தேவைப்பட்ட நச்சினார்க்கினியர்கள் - ஜப்பானியக் கவிதைகளுக்கும் தேவை போலும்!’ (தமிழன்பன், சூரியப் பிறைகள், நர்மதா பதிப்பகம், சென்னை, 1985, ப.VI) என்றும் ஈரோடு தமிழன்பன் கூறும் கருத்துக்கள் இங்கு ஜப்பானிய ஹைக்கூவுவின் பொருள் புலப்பாட்டுக்கு பண்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்பதை விளக்குகிறது.
ஹைக்கூ  வெளிப்பாடு
            ஹைக்கூ கவிதை கருத்தை வெளிப்படுத்தும் தன்மையைப் பற்றி ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துக்களை குறிப்பிடுகின்றனர்.

Ø  கவிதையின் முதல்அடி  சாட்டையைக் கையில் எடுக்கும் அமைதியுடனும் இரண்டாவது அடி அதை ஓங்கும் நிதானத்துடனும் மூன்றாவது அடி அதை சுழற்றி வீசிய அடிக் கனத்தோடும், நெறிப்பதாக அமைய வேண்டும். அதுவே உண்மையான ஹைக்கூவின் இலக்கணம்.

Ø  ஹைக்கூவின் தனித்தன்மை அதன்  மூன்றாவது வரியாகும். அந்த இறுதி வரியில் எப்போதும் எதிர்பாராத ஒரு திருப்பம் உண்டு.

Ø  முதல் வரியில் கரு அல்லது காட்சியின் அறிமுகம்; இரண்டாவது வரியில் ஒரு வியப்பு காத்திருக்கும்; மூன்றாவது வரியோ முழு வெளிப்பாடு தீடிரென நிகழ்வது போன்ற ஒரு அதிர்ச்சியைத் தோற்றுவிக்கும்.

Ø  பாறையின் பல மேற்பரப்புகளை உளி செதுக்கித் தள்ளிவிட்டுச் சிற்பத்தை வெளிக்காட்டுவது போன்றது ஹைக்கூ என்பார் ஆர். எச். பிளித்.

Ø  கவிஞன் இறங்கிக்கொள்ள வாசகன் அதன் மீது பயணம் தொடர்வான் அதுதான் – அதுதான் ஹைக்கூ.
புகழ் மொழிகள்
v  உருவத்தில்சுருக்’ – உணர்த்தும் முறையில்சுரீர்’ – பார்வையில்பளிச்’ – நடையில்நச்’ – இதுதான் ஹைக்கூ ! (இரா.மோகன் (தொகுப்பு) தமிழ் ஹைகூ ஆயிரம், சாகித்திய அகாதெமி, 2012.)

v  அது சின்னதாக இருக்கும் பெரிய அற்புதம், வடிவத்தைப் பார்த்தால் வாமனன் மாதிரி ஆனால் தாரை வார்த்தாலோ விசுக்கென்று விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விசுவரூபமெடுத்து மூவுலகையும் அளந்துவிடும் திரிவிக்கிரமன் மாதிரி. (அப்துல் ரகுமான், ‘மின்மினிகள்’, ஜூனியர் விகடன், 18 ஜனவரி 1984, ப.18.)

v  ஒரு மொழியின் கவிதைகள் மற்ற மொழிகளில் பெயர்க்கப்படுவது வியப்புக்குரியதல்ல. ஆனால் ஒரு மொழியின் கவிதை வடிவம் உலக அளவில் புகழ் பெறுவதென்பது வியப்பானது. இத்தகைய வியப்புக்குரியது ஜப்பானிய ஹைகூ. (அப்துல் ரகுமான், ‘அறிமுகம்’, தி. லீலாவதியின் ‘ஜப்பானிய ஹைகூ’, ப.3).

v  குத்தீட்டி போலப் பாய்ந்து படிப்பவர் மனத்தில்நறுக்கென்று தைக்கும் விதத்தில் கருத்துக்களை விளங்க வைக்கப் பயன்படுத்தும் முறையே ‘ஹைக்கூ’ எனப்படுகிறது.
தமிழ் ஹைகூ கவிதைகளின் உள்ளடக்கம்
            ஹைகூ  கவிதைகளின் -  ஒரு படைப்பாளன் அவ்வக்கால சமூக சூழலுக்கு ஆட்பட்டவனாக விளங்குகிறான், எனவே அரசியல், பொருளாதாரம், பகுத்தறிவு, காதல், சாதியம், வறுமை என பாடப்படாத பொருளே இல்லை  என்கின்ற அளவுக்குத் தற்கால ஹைகூ கவிதைகள் விளங்குகின்றன.

வளர்ச்சி நிலை
தமிழ்ச்சூழலில் ஹைகூ கவிதையானது பல்வேறு நாளிதழ்கள் வாயிலாகவும், பருவ இதழ்கள் வாயிலாகவும், சிறு வெளியீடுகள் வாயிலாகவும்,  கவியரங்குகள் வாயிலாகவும் வளர்க்கப்பட்டு  குறிப்பிடத்தக்க அளவில் இன்றைக்கு சுமார் இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஹைகூ கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.
ஹைக்கூ முதல் முயற்சிகள்
Ø  1916 – ஆம் ஆண்டில் ‘ஹொக்கு’ என்ற பெயாரால் தமிழுக்கு முதன்முதலில் அறிமுகம் செய்தவர் பாரதியார்.
Ø  1968 – ஆம் ஆண்டில் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை முதன்முதலில் மொழிபெயர்த்துத் தந்தவர் கவிஞர் சி. மணி.
Ø  1970 – ல் தமிழ் மரபுப்படி தமிழ் ஹைக்கூ கவிதைகளை எழுது வெளியிட்டவர் அப்துல் ரகுமான்.
Ø  1984 – ஆம் ஆண்டில் ‘புள்ளிப் பூக்கள்’ என்ற முதல் தமிழ் ஹைக்கூ கவிதைத் தொகுதியை வெளியிட்டவர் அமுதபாரதி.
ஜப்பானிய ஹைகூ கவிதையின் பண்புகள்
            ஹைக்கூ கவிதைகளைக் குறித்து ஆராய்ந்த நிர்மலா சுரேஷ் என்பவரும் வேணு சீனுவாசன் என்பவரும் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் ஹைக்கூ கவிதையை புரிந்துகொள்ள பெரிதும் உதவும்.

v  ஹைக்கூ கற்பனையை ஏற்காது.
v  ஹைக்கூ உவமை, உருவகங்களைப் பயன்படுத்தாது.
v  ஹைக்கூ உணர்ச்சியை வெளிப்படையாய்க் கூறாது.
v  ஹைக்கூ தன்மைப் பாங்கினைத் தவிர்க்கும்.
v  ஹைக்கூ கவிதைக்குள்ளே ஒரு சொல் மட்டும் குறியீடாய்ப் பயின்று வருதல் இல்லை.
v  ஹைக்கூ இருண்மையை மேற்கொள்ளாது.
v  ஹைக்கூவில் நுண்பொருண்மை இல்லை.
v  கவிஞன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை.
v  பிரச்சாரமின்மை.
v  எளிமையாகக் கூறுவது.
v  சொல்லுவதைக் காட்டிலும் சொல்லாமல் விடுவது.
v  சின்ன உயிர்களையும் சிறப்பித்துப் பாடுவது.
v  மின்னல் என வரும் ஈற்றடி அமைப்பினைக் கொண்டதாக இருப்பது.
v  மெல்லிய நகைச்சுவையுணர்வு இழையோடியிருக்கும்படி அமைவது.
v  இயற்கையைப் பாடுவதுடன் இயற்கையை மனித உணர்வுகளோடு இணைத்துப் பாடுவது.
v  ஆழ்மன உணர்வுகளும் மெல்லிய சோகமும் இழையோடும்படி அமைவது.     
v  பிற உயிர்களைத் தனக்கு இணையாக மதித்துப் பாடுவது.
v  மூன்றடிகளால் பாடுவது.

      துணைநூற் பட்டியல்
1.    வேணு சீனுவாசன், சங்கக் கவிதையும் ஜப்பானிய ஹைக்கூவும், அமராவதி பதிப்பகம், சென்னை, 2001.
2.    ஈரோடு தமிழன்பன், ஜப்பானிய ஹைகூ 100, விழிகள் பதிப்பகம், சென்னை, 2011.
3.    பரிமளம் சுந்தர், ஜப்பானிய- தமிழ் ஹைகூ கவிதைகள் -  ஓர் ஒப்பாய்வு, காரோன் – நீரோன் பதிப்பகம், சொக்கிகுளம், மதுரை, 2005.
4.நிர்மலா சுரேஷ், ஹைக்கூக் கவிதைகள், முனைவர்பட்ட ஆய்வேடு, சென்னைப் பல்கலகைக்கழகம், சென்னை, 1993.
5.    தி. லீலாவதி, ஜப்பானிய ஹைகூ, அன்னம் (பி) லிட், சிவகங்கை, 1987.
6.    தமிழன்பன், சூரியப் பிறைகள், நர்மதா பதிப்பகம், சென்னை, 1985.




செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

ஏழு திணைகள்

வெட்சி      - குறிஞ்சிக்குப் புறன்
வஞ்சி       - முல்லைக்குப் புறன்
உழிஞை     - மருதப் புறன்
தும்பை       - நெய்தல் புறன்
வாகை       - பாலைப் புறன்
காஞ்சி      - பெருந்திணைப் புறன்
பாடாண்     - கைக்கிளைப் புறன்

புதன், 23 மே, 2012

ஏழை மக்களுக்கு உதவி செய்வது என்பது ஏழைத்தன்மை
மனித சமூகத்தில் இல்லாதிருக்கும்படி செய்வதே ஒழிய, இங்கொருவனுக்கு அங்கொருவனுக்குச் சாப்பாடு போடுவதல்ல – பெரியார்.

வியாழன், 17 ஜூன், 2010

கலாச்சாரம்


உன் கழுத்தில்
கட்டெறும்பு
ஊர்ந்து செல்கிறது
நீ எனக்கு அன்னையாக
இருக்கலாம்
ஆனால்
நீ மகனாக நினைப்பாயா ?
என்பது சந்தேகம்
நீ எனக்குச் சகோதரியாக
இருக்கலாம்
உடனே அவ்வுறவை
உன்னிடம் எதிர்பார்பது
மிக அதிகம்
நீ எனக்குக் காதலியாகக்
கூட இருக்கலாம்
ஆனால்
நீ கனவு கண்ட
மன்மதன்
நானாக இருக்க வாய்ப்பில்லை
யோசித்துக் கொண்டிருக்கையில்
கடித்துவிட்டது
கலாச்சாரம்.

செவ்வாய், 25 மே, 2010

தாலாட்டுப் பாடல்கள்

தாய்மை உலகிற்கு வழங்கிய இலக்கியக் கொடை தாலாட்டாகும், தாயின் நாவசைவில் தாலாட்டுப் பிறக்கிறது. தால்+ஆட்டு (தால் – நாக்கு) நாவை ஆட்டிப் பாடுவதால் தாலாட்டு எனப் பெயர்பெற்றது. தாலாட்டுப் பாடல் நாவசைத்து ஒலியெழுப்புதலில் தொடங்குகிறது.
தாலாட்டுப் பாடலின் அடியளவு.
தாலாட்டுப் பாடல்களுக்கு அடிவரையறை என்பது கிடையாது. தாயின் மனப்போக்குக்கு ஏற்றவாறும், குழந்தை உறங்க எடுத்துக்கொள்ளும் காலத்தைப் பொறுத்தும், தாலாட்டின் பாடும் நேரம் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருக்கும். தாலாட்டுப் பாடல் நீலாம்பரி என்ற பண்ணில் அமைந்திருக்கும்.
தாலாட்டுப் பாடுவோர்
தாலாட்டுப் பாடுவோர் தாயாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை, தாய்குப் பதிலாகக் குழந்தையின் அத்தை, சித்தி, பாட்டி, அக்கா, மற்றும் உறவினர் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
பாடல் பொருண்மை
தாலாட்டுப் பாடல்களை குழந்தை தூங்குவதற்காகத் தாய் பாடினாலும், அதனூடே அத்தாயின் எண்ணங்கள், ஏக்கங்கள், துன்பங்கள், துயரங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், குழந்தை இல்லாத காலத்தில் தான் பட்ட வேதனைகள், பழிச்சொற்கள், குழந்தை வேண்டி தான்கிடந்த தவங்கள், செய்த அறங்கள், உறவினர் பெருமை சிறுமை, தாய்வீட்டுப் பெருமை, தாய்மாமன் பெருமை போன்றன பாடல் பொருண்மைகளாக இருக்கும்.

குழந்தை இல்லாத காலத்தில் ஏங்கிப் பாடியது.

1. கிண்ணியிலே போட்ட சோற்றைக்
கீறித் தின்னப் பிள்ளை இல்லை
ஊருக்குப் போகையிலே
உடன்வரப் பிள்ளை இல்லை


2. பூக்கிற காலத்திலே
பூமாறிப் போனேனே!
காய்க்கிற காலத்திலே
காய்மாறிப் போனேனே.


3. எட்டாத கோவிலுக்கு
எட்டி விளக்கேற்றி
தூரத்துக் கோவிலுக்குத்
தூண்டா விளக்கேற்றி..

பிறந்த குழந்தையை தாய் வருணித்தல்

1. மாசிப் பிறையோ நீ வைகாசி மாங்கனியோ
தேசப் பிறையோ நீ தெவிட்டாத மாங்கனியோ
எங்கள்குலம் மங்காமல் எதிர்குலத்தோர் ஏசாமல்
தங்கமலி பொக்கிஷத்தைத் தானாள வந்த கண்ணோ.
தாய்மாமன் பெருமை

1. கடைக்குக் கடை பார்த்துக்
கல்லிழைத்த சங்கெடுத்துச்
சுத்திச் சிகப்பிழைத்துத்
தூருக்கே பச்சைவைத்து
வாய்க்கு வயிரம் வைத்து
வாங்கி வந்தார் தாய்மாமன்.

2. வெள்ளியால் செய்த ஏட்டில்
வைர எழுத்தாணி கொண்டெழுத
பள்ளியில் சேர்க்க மாமன்
பரிவுடன் வந்திடுவார்.

3. பால் குடிக்கக் கிண்ணி
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்.

4. ஆனை விற்கும் வர்த்தகராம் – உன் தாய்மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்

சின்னண்ணன் வந்தானோ கண்ணே – உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு

பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்

பட்டுப் புடவைகளும் கண்ணே – உனக்கு
கட்டிக்கிடக் கொடுத்தானோ!

பொன்னால் எழுத்தாணியும் – கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்

கன்னாரே! பின்னா ரேன்னு – கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ!

உறவினர் பெருமை

1. சின்னாத்தங் கரையோரம் – எஞ்சின்னையா நீ
சிறு மணலுக் கொழிக் கையிலே – உன்

சின்ன அத்தைக் கண்டாளாம் – உனக்குச்
சீட்டெழுதி விட்டாளாம்!

பெரி யாத்தங் கரையோரம் – எஞ் சுப்பையா நீ
பெரு மணலுக் கொழிக் கையிலே – உன்

பெரிய அத்தைக் கண்டாளாம் – உனக்குப்
பேரெழுதி விட்டாளாம்!

பனை பிடிங்கிப் பல் விளக்கி – நீ
பயிர் போல நாமமிட்டால்

நாமத்தின் அழகுகண்டு
நச்சுவாளாம் அத்தை மகன்

துணை நின்ற நூல்கள்

1. சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், 2009.
2. சு. சண்முகசுந்தரம், நாட்டுப்புறவியல், காவ்யா, 2007.
3. நா. வானமாமலை, தமிழர் நாட்டுப் பாடல்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2006.



சிறுபத்திரிகைகள்

வணிக நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, மக்களுக்குப் பிடிக்கிற, மக்கள் விரும்புகிற விஷயங்களைத் தருகிறோம் என்ற பெயரில் தரக்குறைவான செய்திகளைத் தரும், ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு முற்றிலும் மாறானவை சிறுபத்திரிகைகள். இவை விற்பனையை நோக்கமாகக் கொள்ளமால், குறைந்த எண்ணிக்கையிலான தரமான வாசகர்களைக் கொண்டு, அவர்களின் சிந்தனை ரசனை ஆகியவற்றை மேம்படுத்தும் எண்ணத்துடன் தனிப்பட்ட ஆதரவைத் தேடிப்பெற முயலும் பத்திரிகைகள் சிறு பத்திரிகைகள் எனப்படுகின்றன. இவைகள் அளவில் சிறியவை என்றில்லாமல், குறைந்த அளவு வாசகர்களைக் கொண்டிருப்பதாலும், குறிப்பிட்ட சிறு வட்டத்துக்குள்ளேயே விநியோகிக்கப் படுவதாலும் சிறு பத்திரிகைகள் என்ப்படுகின்றன.
இப்பத்திரிகைகளின் உள்ளடக்கமாக கவிதை, கதை, நாவல், கட்டுரை, விமர்சனம், ஆராய்ச்சி போன்ற இலக்கியம் சார்ந்த விஷயங்களும், சினிமா, நாடகம், ஓவியம் போன்ற கலைப்படைப்புகளையும் கொண்டு சமூக அக்கறை கொண்டதாகவும் விளக்குபவைகளே சிறுபத்திரிகைகள் என்ற தரத்தினை மற்றும் தகுதியினைப் பெறுகின்றன.
இத்தகைய தீவிர இலக்கியப்பத்திரிகைகள் தெடர்ந்து வெளிவருவதற்கு பொருளாதாரம் என்ற ஒன்று பெரும் தடைக்கல்லாகவே உள்ளது. இவ்வகையில் ஆயிரக்கணக்கான சிறுபத்திரிகைகள் அவ்வப்போது தோன்றி மறைந்து வருகின்றன. இவை வாழ்வின் இன்ப துன்பங்களைப் பிரதிபலிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் அதற்கான காரணத்தை மக்களுக்கு உணர்த்தி போராடவும் சமாளிக்கவும் கற்றுத்தருகின்றன. இக்காரணத்தாலேயே அறிவாளிகளால் சிறுபத்திரிகைகள் பெரிதும் மதிக்கப்படுகின்றன.
சிறுபத்திரிகைகளின் எழுச்சி பாரதியாரின் காலகட்டத்திலிருந்து தொடங்குகிறது எனலாம். சமூகச் சீர்திருத்தங்களில் நாட்டங்கொண்ட அவர் ‘இந்தியா’, ‘சக்கரவர்த்தினி’ ஆகிய பத்திரிகைகளை நடத்தினார். இப்பத்திரிகைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியது. கீழே கொடுக்கப்பட்டுள்ள சிறுபத்திரிகைகள் மட்டுமல்லாது எத்தனையோ ஆயிமாயிரம் பத்திரிகைகள் வெளி உலகுக்குத் தெரியாமல் தங்கள் இலக்கியப் பணியைச் செய்துகொண்டிருக்கின்றன.
சில குறிப்பிடத்தக்க சிறுபத்திரிகைகள்
மணிக்கொடி
சூறாவளி
கலாமோகினி
கிராம ஊழியன்
தேனீ
சந்திரோதயம்
பொன்னி
சக்தி
புதுமை இலக்கியம்
தென்றல்
வாரம்
விடிவெள்ளி
ஹனுமான்
சரஸ்வதி
சாந்தி
எழுத்து
இலக்கிய வட்டம்
நடை
கசடதபற
ஞானரதம்
அஃக்
நீலக்குயில்
சதங்கை
வானம்பாடி
கொல்லிப்பாவை
சுவடு
யாத்ரா
வைகை
சோதனை
பாலம்
விஸ்வரூபம்
பிரபஞ்சம்
சாதனா
விழிகள்
மானுடம்
நீதி
மனிதன்
தாமரை
சிகரம்
சகாப்தம்
புதியவானம்
முழக்கம்.
செம்மலர்
ஆராய்ச்சி
மன ஓசை
புதிய கலாச்சாரம்
கேடயம்
தீபம்
கணையாழி
நிகழ்
காலச்சுவடு
கல்குதிரை
நண்பர் வட்டம்
தீராநதி
உயிர்மை
தலித்முரசு
அணங்கு
புதிய கோடாங்கி
தெறிகள்

இந்தி எதிர்ப்புப் போராட்டம்

ராஜாஜி 1938 ல் இந்தியை கட்டாயமாக்கியபோதே, (1965 அவரே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்தார் என்பது வரலாறு.) பெரியார், அண்ணா ஆகியோர் தலைமையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பக்தவச்சலம் அவர்கள், பதவியில் இருந்தபோது ‘1965 ஜனவர் 26 ந்தேதி முதல் இந்தி ஆட்சிமொழியாகும்’ என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
1965 ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மாணவர்களே தலைமையேற்று நடத்தினர். போராட்டத்தை மாணவத் தலைவர்களான பெ. சீனிவாசன், ரவிச்சந்திரன், ராஜா முகமது, துரை முருகன்(தற்போது சட்டத்துறை அமைச்சராக இருப்பவர்), ம.நடராசன், துரைசாமி, எம். எம். ராமன், நாவளவன், எல். கணேசன், காளிமுத்து, நா. காமராசன், வை. கோபால்சாமி(ம.தி.மு.க., தலைவர்), ஆகியோர் போராட்டத்தை முன்னின்று நடத்தினர். அண்ணா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது போராட்டம் தீவிரமானது.
தீக்குளிப்புச் சம்பவங்கள்
இந்தியை எதிர்த்து தமிழகத்தில் முதன் முதலில் சின்னசாமி என்ற ஆசிரியர் 1964 ம் ஆண்டு ஜனவர் 25 ந்தேதி திருச்சி ரயில் நிலையம் அருகே ‘தமிழ் வாழ்க ! இந்தி ஒழிக !’ என்று முழக்கமிட்டபடி தீக்குளித்து உயிரிழந்தார். 1965, 26 ந்தேதி தே.மு. சிவலிங்கம் என்பவரும், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அரங்கநாதன் என்பவரும். தீங்குளித்து உயிரிழந்தனர்.
விஷம் குடித்து இறந்தவர்கள்.
இந்தித் திணிப்பை கண்டித்து திருச்சி மாவட்டம் கீரனூரைச் சார்ந்த முத்து என்பவரும், விராலிமலையைச் சார்ந்த சண்முகம் என்பவரும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் மாணவர் பலி
சிதம்பரத்தில் மாணவர் ஊர்வலத்தில் போலீசார் மாணவர் மீது தடியடி நடத்தினர். அதனால் மாணவர்கள் போலீசாரைத் தாக்கினர். இதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராஜேந்திரன் என்ற மாணவர் பலியானர். தபால் நிலையங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.(அரசு பதிவின்படி 921 பேர்) பல ஊர்களில் நடந்த தூப்பாக்கிச் சூட்டில் 25 பேர் பலியானார்கள்.
உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட போலீசார்
இதன் எதிர் விளைவாக என்.கே. வெங்கடேசன்(திருப்பூர் உதவி ஆய்வாளர்), எம். ராமசாமி ஆகியோரின் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர்களை உயிரோடு எரித்துக் கொள்ளப்பட்டனர்.
அமைச்சர்கள் ராஜினாமா
11-2-1965 ல் மத்திய அமைச்சர்கள் சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசன் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு
திருச்சியில் வீரப்பன் என்ற ஆசிரியர் தீக்குளித்தார், ரயிலுக்குத் தீவைக்கப்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் மாண்டனர்.12 விமானங்களில் ராணுவம் குவிக்கப்பட்டு நடத்த துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் பலியாயினர். மதுரையிலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியானர்கள். அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தை நிறுத்தக்கூறியும், மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
ஆதரவளித்தவர்கள் கைது
மாணவர்களுக்கு ஆதரவளித்த குன்றக்குடி அடிகளார், கி.ஆ.பெ. விசுவநாதம், இலக்குவனார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அன்றைய காங்கிரஸ் எம்.பி., பொள்ளாச்சி மகாலிங்கம் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதமிருந்தார்.
எரிக்கப்பட்ட பிணங்கள்
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த தூப்பாக்கிச் சூட்டில் ஏராளமானவர்கள் பலியானார்கள். இறந்தவர் பிணங்களைக்கூட உறவினர்கள் பார்க்க ராணுவம் அனுமதி அளிக்காமல், லாரிகளில் ஏற்றிச் சென்று எரித்தனர்.
முடிவுக்கு வந்தது
போராட்டம் எல்லைமீறிப்போன நிலையில் மத்திய அரசு பணிந்து ‘இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் நீடிக்கும். இது குறித்து இந்தி பேசாத மக்களுக்கு நேரு அளித்த உறுதிமொழி சட்டமாக்கப்படும்’ என்று அறிவித்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால், 1970 மார்ச் மாதம் சிறந்த திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் பரிசு வழங்கும் விழா ஒன்றில் ‘இனி தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் இறைவணக்கம் என்பது தமிழ்தாய் வாழ்த்துப்பாடலாக இருக்கும், மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த’ என்ற பாடலே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அமையும்’ என்று அறிவிக்கப்பட்டது.
இப்பாடலுக்கு ஆதரவாகவும், எதிர்த்தும் பலர் கருத்து தெரிவித்தனர். கி.வா. ஜகன்நாதன் ‘அங்கிங் கெனாதபடி’ என்று தொடங்கும் தாயுமானவர் பாடலைப் பாடலாம் எனக் கருத்து தெரிவித்தார். ஆனால், கா. அப்பாதுரையார், மா.பொ.சி., மு.வ., போன்றோர் பொருத்தமானது என்றே ஆதரித்தனர்.

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!
- மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை

கடித இலக்கியம்

கடித இலக்கியம்
எழுத்துக்கள் மூலம் எண்ணங்களை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் தொடர்ப்பு கொள்ள கடிதங்கள் உதவுகின்றன. அந்த வகையில் கடித வடிவத்தையே இலக்கிய வடிவமாக்கி ஒருவர் படிக்கும் நிலையிலிருந்து, பலரும் படிக்க வாய்ப்பாக, கடிதங்கள் எழுதும் வடிவில் பல கருத்துக்களைத் தெரிவிப்பது கடித இலக்கியம். மேலை நாட்டினர் இதனை ஒரு கலையாகவே வளர்த்து வருகின்றனர்.
தமிழில் கடித இலக்கிய முன்னோடியாக அறிஞர் அண்ணா, டாக்டர். மு.வ., அவர்களைக் குறிப்பிடலாம். அறிஞர் அண்ணா ‘திராவிட நாடு’ என்ற இதழில் “தம்பிக்கு” என்ற பெயரில் தமிழ்நாட்டின் பழம்பெருமைகளையும், அன்றைய சமூக அரசியல் சிக்கல்களையும் ஆற்றல் வாய்ந்த நடையில் கடித நூல்களாகத் தந்துள்ளார்.
மு. வ. அவர்கள் “அன்னைக்கு”, “நண்பர்க்கு”, “தம்பிக்கு”, “தங்கைக்கு” என்று ஒரு குடும்பமே சமூகச் சிக்கல்களைக் கூறுபோட்டுக் காட்டும் வகையில் தமது கடித இலக்கியத்தை உணர்வுப்பூர்வமாக வடித்துள்ளார். மேலும் டாக்டர். சொ. சிங்கார வேலனார் “புதுமைக்கு” என்ற பெயரிலும், பேராசிரியர் மு. சு. அருள்சாமி “தோழர்க்கு”, “காதலிக்கு” என்ற பெயரிலும் தங்கள் கடித இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

சங்க இலக்கிய ஆய்வுகள்


 

சங்க இலக்கிய ஆய்வுகள்


 

  1. அ.சதிஷ்                    -    தமிழ் அறிவுப் பாரம்பரியத்தில் உரையாசிரியர்கள்

    சங்க இலக்கிய உரைகள்


    நவம்பர் (2007).


     

  2. கி.பாண்டுரங்கன்(1704)            -    பண்டையத் தமிழர் போரியல் வாழ்கையும்

    தற்காலப் போர் நடவடிக்கையும்

    உ.த.நி (1983)


     

  3. பொன்மணி வைரமுத்து         -    சங்க இலக்கியத்தில் புதுக்கவிதைக் கூறுகள்

    செ.ப.க (1988)


     

  4. ர.குருசாமி                    -    சங்க கால சேரர் அரசியல் நெறி முறைகள்


 

  1. சேஷாத்திரி.ஜ(1738)         -    சங்க இலக்கியத்தில் உளவியல் நோக்கு (1986)


 

  1. இரா.மாயாண்டி         -    சங்க இலக்கியத்தில் கற்பனை (1977)


 

  1. இரா.இராசேந்திரன்         -    தமிழ் பண்பாடு-ஒரு பார்வை (1960)


 

  1. சாரதா கலாவதி(1776)         -    சங்க இலக்கியத்தில் மலர்கள் (1981)


 

  1. பெ.சுப்பிரமணியம்(1790)         -    பழந்தமிழ் நூல்களில் ஊழ் (1989)


 

  1. சின்-கோதில் மொழியன்(1796)        -    பழந்தமிழ் இலக்கியங்களில் சாதி எதிர்ப்புக்

    கருத்துக்கள் (1999)


     

  2. ப.தாமரைக்கண்ணன்(1814)             பண்டைத்தமிழிலகியங்களில் நீதி(2004)


 

  1. வி.கல்யாணி(1850)             சங்க இலக்கியத்தில் தலைவி (1986)


 

  1. ஆர்.சுப்புலட்சுமி(1860)         -    சங்க இலக்கியங்களில் மனித நேயம் (1995)


 

  1. நா.ஆறுமுகம்(1865)         -    கலித்தொகை-ஓர் ஆழ்வாய்வு


 

  1. க.இரேவதி(1867)         -    சங்க இலக்கியத்தில் செலவு விலக்கல் (2002)


 

  1. இரா.தமிழரசி(1928)     -    சங்க இலக்கிய உத்திகள் (1982)


 

  1. எஸ்.பி.நிசாம்முகமது இக்பால்(1933)-    சங்க அக இலக்கியத்தில் குறியீடு


 

  1. ஆம்.சுப்பிரமணியன்(1945)     -    தமிழ் இலக்கியத்தில் சட்டமும் நீதியும் (1982)


 

  1. ஆ.அமிர்தகௌரி(1952)     -    சங்க இலக்கியத்தில் உரையாடல் (1986)


 

  1. அரங்க.இராமலிங்கம்(1953)     -    சங்க இலக்கியத்தில் வேந்தர் (1982)


 

  1. ச.இரேணுகா(1999)     -    சங்க இலக்கியம் காட்டும் மனித உறவுகள் (2001)


 

  1. இரா.அனுராதா(2022)     -    சங்க இலக்கியங்களில் அறக்கருத்துக்கள்-ஓர்
    ஆய்வு (2004)


 

  1. க.மங்கையர்கரசி(2041)     
        -    சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் (1999)


 

  1. சு.கோகில வாணி(2061)     -     சங்க இலக்கியத்தில் தாய்சேய்,உறவு-ஓர் உளவியல் நோக்கு(1997)


     

  2. க.அண்ணாமலை(2081)         -    சங்க இலக்கியத்தில் முல்லைத்திணை (1977)


 

  1. அ.செங்கோடமுதலி(2105)         -    சங்க இலக்கியத்தில் தலைவன் (1987)


 

  1. கு.வெ.பாலசுப்பிரமணியன்(211    6)    -    சங்க இலக்கியத்தில் புறப்பொருள் (1984)


 

  1. தி.முத்துகண்ணப்பன்(2130)         -    சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் (1971)


 

  1. நடராசன்(2130)         -    பெண்பாற்புலவர்-சங்க காலம் (1973)


 

  1. பா.வீரப்பன்(2131)         -    சங்க இலக்கிய நடை(பத்துப்பாட்டு மட்டும்) (1981)


 

  1. ந.கந்தசாமி(2140)         -    நற்றினை-ஒரு திறனாய்வு (1977)


 

  1. இரா.சரளா(2156)         -    சங்க இலக்கியத்தில் தோழி (1980)


 

  1. ந.ஆடியபாதம்(2184)         -    சங்க இலக்கியத்தில் குறிஞ்சித்திணை (2184)

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

சென்னை - எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை

அரசு தாய் சேய் நல மருத்துவமனை
எழும்பூர்
சென்னை - 8

நாள்தேறும் இம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள்
1. கர்ப்ப கால கவனிப்புப் பிரிவு
2. மகளிர் நோய்யியல் பிரிவு
3. குழந்தைப் பேறின்மை இயல்
4. வளரிளம் பருவ நோயியல் மருத்துவம்
5. பல் மருத்துவம்
6. புற்று நோய் கண்டறிதல்
7. புற்று நோய் மருந்தியல் துறை
8. புற்று நோய் மறு கவனிப்பு
9. பச்சிளம் குழந்நை பராமரிப்பு
10. குடும்பக்கட்டுப்பாடு மற்றும் கருக்கலைப்பு
11. மறு கவனிப்புப் பிரிவு
12. தொடர் புறநோயாளிகள் பிரிவு.


ஆகிய நோய்களுக்கான சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.

வியாழன், 29 ஜனவரி, 2009

செவ்வாய், 27 ஜனவரி, 2009

கவிதை

நீ
வட்டத்தின்
மையப்புள்ளியாய்
இருக்கிறாய்
உன்னைக் கடந்து போகின்றன
எத்தனையோ
பார்வைக்கோடுகள்
உன்னைக் கடந்த
விட்டங்களில் ஒன்றாவேனா...
உன்னில் கலந்த
ஆரமாவேனா.....
நான் ?

புதிய தமிழ் மென்பொருள்


The New Tamil WordProcessor "MenTamizh" is ready for sale.
For More Details Please Visit:
www.lingsoftsolutions.com/net
Email :
contact@lingsoftsolutions.com
Phone Number :
96000 59414 (chennai)

வெள்ளி, 25 ஏப்ரல், 2008

செய்தி

சென்னைப் பல்கலைக் கழக எப் 50 அரங்கில் தமிழ் மொழித்துறை சார்பில் தொல்.திருமாவளவன் தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தகவல் ச.நீலமேகன்