வெள்ளி, 15 செப்டம்பர், 2023

கோவில் வழிபாடு - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை


கோவில் வழிபாடு

-          கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கோவில் முழுதுங்கண்டேன் உயர்

     கோபுரம் ஏறிக்கண்டேன்

தேவாதி தேவனையான் தோழி

     தேடியுங் கண்டிலனே

 

தெப்பக் குளங்கண்டேன் சுற்றித்

     தேரோடும் வீதிகண்டேன்

எய்ப்பில்லைப்பாம் அவனைத் தோழி

     ஏழையான் கண்டிலனே

 

சிற்பச்சிலைகண்டேன் நல்ல

     சித்திர வேலைகண்டேன்

அற்புத மூர்த்தியினைத் தோழி

     அங்கெங்கும் கண்டிலனே

 

பொன்னும் மணியுங்கண்டேன் வாசம்

     பொங்குபூமாலை கண்டேன்

என்னப்பன் எம்பிரானைத் தோழி

     இன்னும்யாம் கண்டிலனே

 

தூபமிடுதல் கண்டேன் தீபம்

     சுற்றி எடுத்தல் கண்டேன்

ஆபத்தில் காப்பனைத் தோழி

     அங்கேயான் கண்டிலனே

 

தில்லைப்பதியுங்கண்டேன் அங்குச்

     சிற்றம்பலமுங் கண்டேன்

கல்லைக்கனிசெய்வோனைத் தோழி

     கண்களாற் கண்டிலனே

 

கண்ணுக் கினியகண்டு-மனத்தைக்

                 காட்டில் அலையவிட்டு,

பண்ணிடும் பூசையாலே-தோழி

                   பயனொன்றில்லை, அடி!

 

உள்ளத்தில் உள்ளான்,அடி!-அதுநீ

     உணர வேண்டும் அடி

உள்ளத்தில் காண்பாய்எனில்-கோயில்                 உள்ளேயுங் காண்பாய் அடி!

கருத்துகள் இல்லை: