செவ்வாய், 5 செப்டம்பர், 2023

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலை


 




v ஓர் ஒழுங்கமைவில்(பூக்களை வரிசைப்படத் தொடுத்து மாலையாக்குவதைப் போல) புறப்பொருள் இலக்கணம் பற்றி வெண்பாவால் இயற்றப் பெற்றது என்பதால் இந்நூல் புறப்பொருள் வெண்பாமாலை என்ற பெயரைப் பெற்றது.

 

v வெண்பாமாலை என்பது ஆசிரியர் ஐயனாரிதனார் இட்ட பெயர்.

 

v வெண்பாமாலைகள் பல உண்டு ஆதலின் இந்நூலைக் குறிப்பாகச் சுட்டும் வகையில் புறப்பொருள் வெண்பாமாலை என்ற பெயரைப் பெற்றது.

 

v புறப்பொருள் வெண்பா மாலைக்கு முதல் நூலாக “பன்னிருபடலம்” என்ற இலக்கணநூல் குறிப்பிடப்படுகிறது.

 

v இயற்றியவர் சேரவேந்தர் மரபில் தோன்றிய ஐயனாரிதனார் ஆவார்.

 

v இவரது காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.13ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்பது ஆய்வாளர் கருத்து.

 

v அகப்பொருள் இலக்கணத்திற்கு தோன்றியதைப்போல (அகப்பொருள் விளக்கம் என்ற நூலுக்குப் பின்னரும் மாறனகப் பொருள், இலக்கண விளக்கம், களவியற் காரிகை)புறப்பொருள் வெண்பா மாலைக்குப் பின் புறப்பொருள் இலக்கணத்தைக் கூறும் தனி இலக்கண நூல்கள் எவையும் தோன்றவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

 

v தொல்காப்பியர் புறத்திணைகளை  வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழாகக் குறிப்பிடுகிறார்,

 

v ஐயனாரிதனார் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை எனப் புறத்திணைகளைப் பன்னிரண்டாகப் பகுத்துக் கூறுகிறார்.

 

v இவ்வரிய நூலின் உரையாசிரியர், சாமுண்டி தேவ நாயகர் என்பவர் ஆவார்.

 

v இவ்விலக்கண நூல் 12 திணைகளையும் 341 துறைகளையும் கொண்டு விளங்குகிறது. இதனை விளக்க ஐயனாரிதனார் 361 எடுத்துக்காட்டுப் பாடல்களைப் படைத்துள்ளார்.

 

v இந்த எடுத்துக்காட்டுகள் வெண்பா யாப்பிலும் மருட்பா யாப்பிலும் இயற்றப் பெற்றுள்ளன.

1

வெட்சித்திணை

வெட்சிப்பூச்  சூடிய மறவர்கள் பகை நாட்டில் உள்ள பசுக்கூட்டத்தைக் கவர்ந்து வருதல்.

2

கரந்தைத்திணை

கரந்தைப் பூச்சூடி மாற்றார் கவர்ந்து சென்ற பசுக்களை மீட்கச் செல்வது.

3

வஞ்சித்திணை

வஞ்சிப்பூச் சூடி மாற்றான் மண்ணைக் கைப்பற்றக் கருதி படையெடுத்துச் செல்லுதல்

4

காஞ்சித்திணை

காஞ்சிப்பூச்சூடிய வீரர்கள் மாற்றார் படையெடுத்து வருவதை அறிந்து வரவிடாமல் எல்லையில் நின்று தடுத்தல்.

5

நொச்சித்திணை

மதிலைப் பகையரசன் கைப்பற்றாதவாறு நொச்சிப்பூச் சூடி போரிடுதல்

6

உழிஞைத்திணை

பகைநாட்டின் காவற்காட்டையும் அகழியையும் அழித்துக் கோட்டையைக் கைப்பற்ற மறவர்கள் உழிஞைப்பூச் சூடி போரிடுதல்.

7

தும்பைத்திணை

தும்பைப் பூச் சூடி பகையரசர் இருவர் எதிரெதிராக நின்று போர்க் களத்தில் கடுமையாகப் போரிடுவது.

8

வாகைத்திணை

போரில் பகைவரை வென்று ஒருவர் வெற்றி பெற்று அதற்கு அடையாளமாக வாகைப் பூச்சூடுதல்.

9

பாடாண்திணை

புகழ், வலிமை, கொடைத்தன்மை, இரக்க உணர்வு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ஓர் ஆண்மகனுடைய ஒழுக்கத்தைப் போற்றிப் பாடுவது.

10

பொதுவியல் திணை

வெட்சி முதல் பாடாண் ஈறாகச் சொல்லப்பட்ட திணைகளுக்குப் பொதுவானவற்றையும் கூறாது விடப்பட்டவற்றையும் விளக்குவது.

11

கைக்கிளைத்திணை

இது ஒருதலைக் காமம் எனப்படும். இது ஆண்பாற்கூற்று, பெண்பாற்கூற்று என பகுதிகளை உடையது.

12

பெருந்திணை

பொருந்தாக் காமம் – இது ஆண்பாற் கூற்று, இருபாற் பெருந்திணை என இரண்டாகப் பாகுபடுத்தி விளக்கப்படும்.

கருத்துகள் இல்லை: