ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

மானுக்குப் பிணைநின்ற படலம் - சீறாப்புராணம்

 

சீறாப்புராணம்

 

மானுக்குப் பிணைநின்ற படலம்

 

     குயினிழல் பரப்பச் செவ்விக் கொழுந்தொடை நறவஞ் சிந்தும்

     வயிரவொண் வரையின் விம்மி வளர்ந்ததிண் புயத்து வள்ளல்

     செயிரறு மறையின் றீஞ்சொற் செழுமழை பொழிந்து தீனின்

     பயிர்வளர்ந் தேறச் செய்து பரிவுட னிருக்கு நாளில்                                   1

  

     அரியினஞ் செறிந்த போன்ற அறபிகள் குழுவி னாப்ப

     ணொருதனிச் சீய மொப்ப வுடையவன் றூதர் செல்வத்

     திருநகர்ப் புறத்து நீங்கிச் செழுமுகின் முடியிற் றாங்கி

     மருமலர் செறியுஞ் சோலை சூழ்ந்ததோர் வரையைச் சார்ந்தார்            2

   

     கொன்றையுங் குருந்துங் கார்க்கோற் குறிஞ்சியும் வேயுந் தெற்றித்

     துன்றிய நிழலு நன்னீர் சொரிதரு மிடமுஞ் செந்தேன்

     மன்றலொண் மலரு நீங்கா வனந்திகழ் வரையின் கண்ணே

     சென்றன ரெறிக்குங் காந்திச் செவ்விமெய் முகம்ம தன்றே                    3            

    

     வனந்திரி விலங்கு மாய்த்து வன்றசை வகிர்ந்து வாரித்

     தினந்தொறுங் கோலிற் கோலித் தீயிடை யமிழ்த்திக் காய்த்தித்

     தனந்தனி யிருந்து தின்று தன்றசைப் பெருக்க லன்றி

     யனந்தலிற் பொழுதும் வேறோ ரறிவென்ப தறிந்தி லானே                    4

                   

     காலினிற் கழலு நீண்ட கரியகா ழகத்தின் வீக்கும்

     பாலினில் வலையுங் கையிற் பருவரைத் தனுவுங் கூருங்

     கோல்வெறி துணியுந் தோளிற் கூன்பிறை வாளு மென்மை

     வாலுடைப் பறவை சேர்த்துங் கண்ணியு மருங்கிற் கொண்டோன்        5 

 

    குறுவெயர்ப் புதித்த மெய்யுங் கொழுந்தசை மணத்த வாயும்

     பறிதலை விரிப்புங் கூர்ந்த படுகொலை விழியு மாக

     வறபினி லறபி வேட னடவியிற் றொடர்ந்தோர் மானைக்

     கறுவொடும் வலையிற் சேர்த்திக் கட்டிவைத் திருப்பக் கண்டார்            6                     

 

    குழைகுழைத் தெறியுஞ் செந்தேன் கொழுமலர்க் காவை நோக்கார்

     பொழிமலை யருவி நோக்கார் புறத்துநன் னிழலை நோக்கார்

     செழுமுகிற் கவிகை வள்ளல் செறிதரு மீந்தின் செங்காய்

     மழையெனச் சொரிவ நோக்கார் மானையே நோக்கிச் சென்றார்.             7

 

     அருளடை கிடந்த கண்ணு மழகொளிர் முகமுஞ் சோதி

     சொரிநறை கமழ்ந்த மெய்யுஞ் சூன்முகிற் கவிகை யோடும்

     வருவது தூயோன் றூதர் முகம்மது வென்னத் தேறிப்

     பருவர லுழக்கு முள்ளத் தொடும்பிணை பகரு மன்றே.                            8

 

     நெடியவன் றூதர் வந்தார் வேடனா னிலத்தி னந்த

     முடலுயிர்க் கிறுதி யில்லை யுழையினத் தோடுஞ் சேர்ந்து

     கடிதினிற் கன்றுங் காண்போ மெனமுகம் மதுவைக் கண்ணா

     னொடிவரை யிமைமூ னோக்கியே கிடந்த தன்றே.                                    9

 

     பொருப்பிடைத் துறுகற் சார்பிற் பொரியரைத் தருவி னீழன்

     மருப்புடைப் படலைத் திண்டோண் மன்னவ ருடனும் புக்கி

     நெருப்பிடைத் தசைவா யார்ந்து நின்றவே டனையுஞ் செம்மான்

     றிருப்புதற் கருங்கட் டுண்டு கிடப்பதுஞ் சிறப்பக் கண்டார்.                     10

 

     இடைநிலத் துருக்கி விட்ட விரசிதம் பரந்த தென்ன

     மடிசுதை யமுதஞ் சிந்த வடிக்கணீர் பனிப்பத் தேங்கு

     முடலகந் துருத்தி யொப்ப நெட்டுயிர்ப் புயிர்த்துக் காலிற்

     றுடரொடுங் கிடப்பத் தூயோன் றூதுவ ரடுத்து நின்றார்.                           11

 

     கொடியடம் பிலையை மானும் குளம்பின்மேற் சுருக்கும் புள்ளிப்

     பொடியுடற் பதைப்பும் வீங்கிப் புதையுநெட் டுயிர்ப்பு நோக்கி

     நெடியவ னிறசூ லுல்லா நெஞ்சுநெக் குருகிக் கானின்

     பிடிபடு மானின் றன்பாற் பேரருள் சுரப்ப நின்றார்.                                    12

 

     கதிர்விரி கபீபு நிற்பக் கானகத் தருக்க ளியாவும்

     புதுமல ரலர்த்திச் செந்தேன் பொழிவமான் வருத்த நோக்கி

     விதிர்சினைக் கரங்கள் சாய்த்து மென்றழைக் கூந்தல் சோர

     மதியழிந் திரங்கிக் கண்ணீர் வடிப்பன போன்ற தன்றே.                            13

 

     குலத்தொடும் பறவை தத்தங் குடம்பையிற் புகுதன் மானை

     நிலத்திடைக் கிடத்திக் கட்டி நின்றவேட் டுவனைக் கண்ணா

     னலத்தொடுங் காண்ப தாகா தெனநடு நடுங்கி யுள்ள

     முலைத்தறப் பெடையி னோடு மொளிப்பன போன்ற தன்றே.               14

 

     ஏட்டலர் நறவ மாந்தி யிருஞ்சுரும் பிசைக்குந் தோற்றம்

     வாட்டமின் முகம்ம திங்ஙன் வந்தனர் வருந்து மானை

     மீட்டனர் வேட னீமான் விரும்பினன் பயங்க டீர்த்தார்

     கூட்டுறைந் தொளித்தன் மாற்று மெனப்பல கூய போலும்.                      15

 

    நிறைவளஞ் சுரந்த கானி னின்றநந் நபியை நோக்கிக்

     குறியவா லசைத்து நீண்ட கொழுங்கழுத் துயர்த்தி நீட்டி

     மறைபடா மதியே வண்மை முகம்மதே யென்னப் போற்றித்

     தறுகிடா தெவர்க்குங் கேட்பச் சலாமெடுத் துரைத்துக் கூறும்.                  16

 

           

     வல்லவ னுண்மைத் தூதே மன்னுமா நிலத்தின் மாந்த

     ரல்லலை யகற்றி வேதத் தறநெறி பயிற்றிச் சொர்க்கத்

     தில்லிடைப் புகுத்தப் பூவி னிடத்தினி லுதித்த கோவே

     யொல்லையி னெனது சொற்கேட் டுவந்தரு ளளிக்க வேண்டும்.             17

 

 

     என்னுயி ரெனநீங் காத வினமுமென் கலையுங் கன்றுந்

     துன்னிடத் திரண்டு பைம்புற் றுறைதொரு மேய்ந்து நாளு

     முன்னிய பசிக டீர்த்தோர் மிருகங்கட் குயிர்கொ டாமன்

     மன்னிய மலையின் சார்பு மனப்பய மகற்றி வாழ்ந்தேம்.                          18

 

     இருநிலத் தாசைக் காயோ ரிளங்கன்றென் வயிற்று றாதான்

     மருவிய கலையு நானும் வருத்தமுற் றிருக்குங் காலம்

     பெருகுதீன் முகம்ம தேநும் பெயரினைப் போற்றல் செய்தே

     னுருவமைந் திளஞ்சூன் முற்றி யுதரமும் வளர்ந்த தன்றே.                        19

 

     தனியனென் னுயிருங் காக்குங் கலையுயிர் தானு மொன்றா

     யினிதினொன் றாய தென்ன விளங்கன்றொன் றீன்றே னின்ப

     நனிகளி கடலி லாழ்ந்து நறுமலை யிடத்திற் சேர்ந்து

     துனிபல வகற்றி னேன்முன் சூழ்வினை யறிகி லேனே.                              20

 

     உள்ளுயி ரனைய கன்று மொருத்தலு மியானு மோர்நாள்

     வெள்ளமொத் தனைய மானி னினமுமோர் வெற்பின் சார்பி

     னள்ளிலை யள்ளி வாய்க்கொண் டரும்பசி தடிந்து நீருண்

     டெள்ளள வெனினு மச்ச மின்றிநின் றுலவு நேரம்.                                    21

 

    அத்திசைக் கெதிரின் மேல்பா லடுத்தொரு குவட்டின் கண்ணே

     மத்தகக் கரியு மாய்க்கும் வரிப்புலி முழக்க நீண்ட

     குத்திரத் தசனித் தாக்கின் குவலய மதிரக் கேட்டுத்

     தத்தியெத் திசையுந் திக்குந் தனித்தனி சிதறி னேமால்.                               22

 

 

     கூடிய தூறும் பாரிற் குளித்திடக் குதித்து வல்லே

     யோடிய திசையி னொன்றை யொன்றுகாண் கிலதா யானும்

     வாடிய மனத்தி னோடு மறியையு நோக்கா தாக்கை

     யாடியிற் றுரும்பாய் வேறோ ரடவியி னடைந்திட் டேனால்.                   23

 

     அடவியி னடையுங் காலை யவ்வுழைக் கரந்திவ் வேடன்

     றுடரிடும் வலையைச் சுற்றிச் சுருக்கிடப் புலிவாய்த் தப்பி

     மி்டலரி யுழையிற் சிக்கி மிடைந்தென மிடைந்து செவ்வி

     யுடலுயிர் பதைப்பத் தேம்பி யுணர்வழிந் தொடுங்கா நின்றேன்.             24

 

     வலையிடத் துறைந்த தென்ன மகிழ்ந்தெழந் தோடி வந்து

     நிலைபெற வடுத்துச் சாய்த்து நின்றெனை நோக்கி யாகத்

     துலைவுறும் பசிக்கின் றென்பா லுற்றனை யென்னக் கூறிச்

     சிலைகணை நிலத்திற் சேர்த்தித் தெரிந்தொரு பாசந் தொட்டான்.           25

 

     திருக்கற நாலு தாளுஞ் செவ்விதிற் கூட்டி யங்கை

     வரிக்கயி றதனாற் சுற்றி மாறுகொண் டீழ்த்துக் கட்டிக்

     கரிக்கர மென்ன நீண்ட கரத்தினாற் றாங்கி முன்னர்ச்

     சுருக்கிய வலையை நீக்கித் தோளினி லெடுத்துக் கொண்டான்.               26

 

    கவைமுனைக் கோட்டுச் செவ்விக் கலையுட லுயிரு மீன்ற

     நவியுட லுயிரு மோர்மா னுடன்கொண்டு நடப்ப தொத்துச்

     சவிபுறந் தவழுங் கோட்டுச் சார்பிலிவ் வனத்தின் கண்ணே

     சுவையறு மொழியா னென்னைச் சுமந்திவ ணிறக்கி வைத்தான்.             27

 

     கட்டுடன் கிடந்து நெஞ்சிற் கவலையுள் ளழிந்து மாறா

     நெட்டுயிர்ப் பெறிந்து சோர்ந்து நிலத்திடைக் கிடக்கு நேரம்

     வட்டவெண் கவிகை வள்ளல் முகம்மது நபியே யும்மைத்

     திட்டியிற் றெரியக் கண்டேன் றிடுக்கமுந் தீர்ந்த தன்றே.                           28

 

    எனவிவை யுரைத்துப் பின்னு மெழினபி முகத்தை நோக்கி

     மனநிலை வாக்கி னோடு முகம்மதே யென்னப் போற்றிப்

     புனமுறை விலங்கின் சாதி யாயினுந் தமியேன் புன்சொற்

     றனையருட் படுத்திக் கேட்பீ ரென்றுரை சாற்றிச் சாற்றும்.                        29

 

     இச்சிலை வேடன் கையி னிறத்தலை யுளத்தி லெண்ணி

     யச்சமுற் றுரைப்ப தன்றிவ் வவனியிற் சீவ னியாவு

     நிச்சய மிறத்த லல்லா லிருப்பவை நிலத்தி னுண்டோ

     முச்சகம் விளக்குந் தீனின் முதன்மறை முறைமைச் சொல்லோய்.           30

 

     கலையெனப் பிரிவி லாது கண்ணிமை காப்ப தென்ன

     வலைவறக் காப்பச் சின்னா ளவனியிற் கலந்து வாழ்ந்தேன்

     குலவிய மறியு மீன்றேன் குறித்தினி யிருப்ப தென்கொ

     லிலைநுனிப் பனியி னாக்கை யிறத்தலே நலத்தன் மன்னோ.                   31

 

     அடவியிற் கிரியில் வீணி லவதியுற் றிறந்தி டாமல்

     வடிவுடைக் குரிசி லேநும் மலர்ப்பதச் செவ்வி நோக்கிப்

     படுபரற் கானில் வேடன் பசிப்பிணி தீர்ப்ப தாக

     வுடலிறத் திடுத லெவ்வெவ் விறப்பினு முயர்ச்சி மேலோய்.                   32

 

     வரிப்புலி முழக்கங் கேட்டு மானினஞ் சிதறித் தத்தந்

     தரிப்பிட மறியா தொன்றுக் கொன்றுடன் சாரா தெங்கு

     முரைப்பரி தென்னப் போந்த தாலென தொருத்த றேடி

     யிரைப்பறா நெடுங்கான் போய்ப்போ யிருந்ததோ விறந்த தேயோ.       33

 

     ஒல்லையி னோடி நீங்கா தொருத்தலின் றளவு மோந்து

     புல்லினைக் கறியா நீரும் புசித்திடா திருந்து தேடி

     யல்லலுற் றழுங்கிக் கண்ணி னருவிநீர் சொரிய வாடிப்

     பல்லவ மெரியிற் புக்க தெனவுடல் பதைக்கு மன்றே.                               34

 

     பிடிபடு மிதற்கு முன்னே மூன்றுநாட் பிறந்து புல்லின்

     கொடிநுனை மேய்ந்து நீருங் குடித்தறி யாது பாவி

     மடிமுலை யிரங்கிப் பாலும் வழிந்தது குழவி சோர்ந்து

     படிமிசை கிடந்தென் பாடு படுவதோ வறிகி லேனே.                                35

 

     கோட்டுடைக் கலையி னோடுங் கூடிற்றோ வலதோர் பாலின்

     மீட்டதோ வினத்தைச் சேர்ந்து விம்மிநின் றேங்கிற் றோகான்

     காட்டிடைப் புலிவாய்ப் பட்டுக் கழிந்ததோ வென்னைத் தேடி

     வாட்டமுற் றலறி யோடி மறுகிற்றோ வறிகி லேனே.                                36

 

    தேங்கிய பசியால் வாடித் திரிந்ததோ விறந்த தோவென்

     றேங்கிய வருத்த மல்லா லிவ்விட ரதனி லாவி

     நீங்குமென் றுள்ளத் துள்ளே னெட்டுட லுடும்பி னாவி

     தாங்கிய தரும வேந்தே தவறன்று சரத மன்றே.                                           37

 

     மன்னிய கலிமா வென்னும் வழிநிலை மாந்த ரியாரும்

     பொன்னிலம் புகுதச் செய்யும் புண்ணியப் புகழின் மிக்கோய்

     கொன்னிலைச் சிலைக்கை வேடன் கொடும்பசி தணிப்பே னென்றாட்

     பின்னிய பிணிப்பு நீக்கிப் பிணையென விடுத்தல் வேண்டும்.                 38

 

    விடுத்திரேற் கலையைச் சேர்ந்து விழைவுறுங் கவலை தீரப்

     படுத்தியென் னினத்துக் கோதிப் பறழினுக் கினிய தீம்பால்

     கொடுத்தரும் பசியை மாற்றிக் குலத்தொடுஞ் சேர்த்து வல்லே

     யடுத்தொரு கடிகைப் போதி லடைவனென் றறைந்த தன்றே.                  39

 

     மானுரை வழங்கக் கேட்டு மனத்தினிற் கருணை பொங்கிக்

     கானவேட் டுவனை நோக்கிக் கன்றிடை வருத்தந் தீர்த்துத்

     தான்வரு மளவு மியானே பிணையெனச் சாற்றி நின்றார்

     தீனெனும் பயிரைக் காத்துச் செழும்புகழ் விளைக்குஞ் செம்மல்.           40

 

     பிரியமுற் றிரங்கிக் காட்டின் பிணைக்கியான் பிணையென் றோது

     முரையினைக் கேட்டு வேட னொண்புயங் குலுங்க நக்கித்

     தெரிதரு மறிவி னோடுஞ் சினத்தொடுங் கலந்து தேர்ந்து

     கருமுகிற் கவிகை வள்ளல் கவின்முக நோக்கிச் சொல்வான்.                   41

 

    முள்ளுடைக் கானி லேகி முகமழிந் துச்சி வேர்வை

     யுள்ளங்கா னனைப்ப வோடி யுடலுலைந் தொன்றுங் காணா

     விள்ளரும் பசியான் மீளும் வேளையிப் பிணையை நோக்கி

     யொள்ளிழை வலையிற் றாக்கிப் பிடித்திவ ணொருங்கு சார்ந்தேன்.       42

 

     பெருத்தமான் றசையா லிற்றைப் பெரும்பசி தவிர்ந்த தென்று

     ளிருத்தியிங் கிருந்தே னந்த விருமனக் களிப்பை நீக்கி

     வருத்தமுற் றிடுஞ்சொற் சொன்னீர் முகம்மதே யெவர்க்கு மிச்சொற்

     பொருத்தம தன்று விண்ணு மண்ணினும் புகழின் மிக்கோய்.                  43

 

 

    கானிடைப் பிடித்த மானைக் கட்டவிழ்த் தவணிற் போக்கின்

     மானிடர் பாலின் மீட்டும் வருவது முன்ன ருண்டோ

     ஞானமு மறையுந் தேர்ந்தோர் செய்யுளு நாட்டிற் றுண்டோ

     வூனமிப் பிணைச்சொ லையா வோதுவ தொழிக வென்றான்.                  44

 

    என்னுறு பிணையாய்ப் போன விரும்பிணை கடிகைப் போதி

     னுன்னிடத் துறும்வா ராதே லுன்பசி தீர்ப்ப தாகப்

     பின்னிரண் டொன்றுக் கன்பாய்த் தருகுவன் பேது றேலென்

     றன்னவன் றனக்குச் சொன்னா ராரணத் தமிர்தச் சொல்லார்.                     45

 

     காரணக் குரிசில் கூறுங் கட்டுரை செவியி னோர்ந்து

     பாரினி லெவர்க்குந் தோன்றாப் புதுமைபார்த் தறிவோ மல்லாற்

     சார்பினிற் சாரா லொன்றுக் கிரண்டுமே தருது மென்றார்

     பேரினிற் பிணையாய்க் கொள்ளல் கருத்தெனப் பெரிதுட் கொண்டோன்.46

 

     கள்ளமுங் கரப்பு மாறாக் கருத்தின னுயிர்கட் கென்று

     மெள்ளள விரக்க மில்லா வேட்டுவ ரினத்தி னுள்ளே

     னுள்ளம தறிந்துங் கேட்டீ ருரைப்பதென் னுயர்ந்த மேன்மை

     வள்ளனும் மதுர வாய்மை மறுத்திலேன் விடுத்தி ரென்றான்.                   47

 

    வேட்டுவ னுரைப்பக் கேட்டு முகம்மது விருப்ப முற்று

     வாட்டமுற் றிருந்த புள்ளி மானிடத் திருந்து பாரி

     னீட்டிய காலிற் சேர்த்த துடரினை நெகிழ்த்துக் கானிற்

     கூட்டுறாக் குழவிக் குப்பால் கொடுத்திவண் வருக வென்றார்.                48

 

    இருந்துகான் மடக்கி நீட்டி யெழுந்துடன் முறுக்கு நீக்கி

     மருந்தெனு மமுதத் தீஞ்சொன் முகம்மதின் வதன நோக்கிப்

     பொருந்திய கலிமா வோதிப் புகழ்ந்துடற் பூரிப் போடுந்

     திருந்தவே டனையும் பார்த்துச் சென்றது கானின் மானே.                         49

 

     வெண்ணிலாக் கதிர்கான் றென்ன மென்முலை சுரந்த தீம்பான்

     மண்ணெலா நனைப்பச் சூழ்ந்த வனமெலாந் திரிந்து தேடிக்

     கண்ணினி லினங்கா ணாது கலங்கியோர் வனத்தின் கண்ணே

     யெண்ணரும் பிணையுங் கன்றுங் கலையுட னினிது கண்ட.                     50

 

     மலைவற வினத்து ளாகி மனத்தினுட் கவலை நீக்கிக்

     கலையினுள் வருத்தந் தீர்த்துக் கன்றினை யணைத்து விம்மு

     முலையினை யூட்டி மென்மை முதுகுவா லடிநா நீட்டி

     யலைதர வளைத்து மோந்து வேட்கையை யகற்றிற் றன்றே.                    51

 

     கன்றது வயிறு வீங்கக் கதிர்முலை யமுத மூட்டி

     நின்றதன் னினத்துக் கெல்லா நெறிபடுங் கானி லோடி

     வன்றிறல் வேடன் கையிற் படும்வர வாறுந் தூதர்

     வென்றிகொள் பிணையின் மீட்டு விட்டது மோதிற் றன்றே.                    52

 

     பிணையென வுரைத்த மாற்றம் பிணைக்குல மனைத்துங் கேட்டுப்

     பணைபடு கானி லுள்ளப் பதைப்பொடுந் துணுக்கி நிற்பத்

     துணையெனுங் கலையி னங்கஞ் சோர்ந்துநெட் டுயிர்ப்பு வீங்கி

     யணைதர வடுத்து நோக்கி யாற்றுவான் றொடங்கிற் றன்றே.                   53

 

     மாறுகொண் டவர்கை தப்பி வந்தமா னினத்தின் சாதி

     கோறலை விரும்பி முன்னு நரர்கையிற் கூடிற் றுண்டோ

     வேறுரை பகரேல் பார்ப்பை வெறுத்துமுன் னினத்தை நீத்து

     மீறெனப் போதல் வேண்டா மெனுமுறை யியம்பிற் றன்றே.                   54

 

     இணைத்தென்னைப் பிணித்த வேட னிதயத்துக் கியையப் பேசி

     பிணைத்தன்னைப் பொருத்தி நின்றோர் பெரியவன் றூத ரிந்தத்

     திணைத்தலத் தறிவி லாத சேதனச் சாதி யன்றே

     யணைத்துயி ரனைத்துங் காத்தற் கவரல தில்லை யன்றே.                         55

 

    என்னுயி ரதனை வேட னிரும்பசிக் கியைய வீந்து

     நந்நபி பிணையை மீட்ப நன்மனம் பொருந்தி லேனாற்

     பொன்னுல கிழந்து தீயு நரகினிற் புகுவ தல்லாற்

     பின்னொரு கதியு முண்டோ பிழையன்றிப் பெருமை யன்றே.                 56

 

    சிறப்புடைக் குரிசின் முன்னஞ் செப்பிய மாற்ற மாறி

     மறப்பொடு மிருந்தே னாகில் வரிப்புலி யினத்தின் வாய்ப்பட்

     டிறப்பதே சரத மல்லா லிருப்பதற் கிடமற் றுண்டோ

     வுறப்பெரும் விருப்ப மென்மே லிருத்தலை யொழித்தல் வேண்டும்.    57

 

    நதி்யிடைப் பெருக்கின் முன்னோர் நவ்விபி னடக்கு நாளின்

     மதியிலி யொருத்தன் வள்ளன் முகம்மதின் வசன மாறிப்

     புதியநன் னீரு ளாழ்ந்து நொடியினில் வீழ்ந்து போய

     வதிசய முலகில் விண்ணி லியாவரே யறிகி லாதார்.                                   58

 

    ஈதெலா மறிந்து மென்னை யிவணிடை யிருத்தல் வேண்டி

    யோதுதல் பழுதென் றோதி யுழையின மனைத்துந் தேற்றிக்

    காதலிற் கலையைப் போற்றிக் கன்றினை யதன்பாற் சேர்த்திப்

    பேதுற லெனப்பா லூட்டி யெழுந்தது பிணையு மன்றே.                            59

 

     இனத்தினை விடுத்து நீங்கி யிருங்களிப் பிதயம் பூப்ப

     வனத்தினி லேகுங் காலை மறிமுன மறிப்பச் சீறிச்

     சினத்தது தடுப்ப வோடிச் செவ்விமான் முகத்தை நோக்கி

     யினித்தவாய் புற்றீண் டாத விளமறி யுரைக்கு மன்றே.                               60

 

     மாதவம் பெற்று நின்போன் முகம்மது நபிதஞ் செய்ய

     பாதபங் கயத்தைக் கண்டு பரிவுட னீமான் கொண்டு

     போதலே யன்றி நின்னைப் புறத்தினி லகற்றி வாழே

     னீதுமுத் திரையென் றோதி யெழுந்துமுன் குதித்த தன்றே.                        61

 

    இறையவன் றூதைக் கண்ட வதிசய மிதுகொ லென்ன

     மறிமன மறுகி லாது வதைதனைப் பொருந்திச் சேற

     லிறுதியற் றின்ப நம்பா லெய்துமென் றகத்தி னெண்ணிச்

     செறிவனங் கடந்து வேடன் றிசைதனை யடுத்த தன்றே.                             62

 

     குருளையும் பிணையுங் கூடி வருவது குறித்து நோக்கி

     முருகலர் புயத்தார் வள்ளன் முகம்மது மகிழ்ந்தன் பாக

     விருளுறு மனத்த னான வேடனை யினிது கூவி

     யொருபிணைக் கிரண்டுன் பாலில் வருவதென் றுரைத்திட் டாரால்       .63

 

     அன்னது கேட்டு வேட னோக்கியன் புற்ற காலை

     முன்னிய கன்று மானு முகம்மதி னடியிற் றாழ்ந்து

     பன்னிய சலாமுங் கூறிப் பாவியெற் காக வேட்டு

     மன்னிய பிணையை மீட்டு மெனுமுரை வழங்கிற் றன்றே.                      64

 

 

     மாடுறைந் திவைமான் கூற முகம்மது நபியும் விற்கை

     வேடனை விளித்து நந்தம் பிணையினை விடுத்து நின்றன்

     பீடுடைப் பசியை மாற்றிப் பெரும்பதிக் கடைக வென்றார்

     வீடுபெற் றுயர்ந்து வாழ்ந்தே னெனமலர்ப் பதத்தின் வீழ்ந்தான்.             65

 

     பாதபங் கயத்தைப் போற்றிப் பருவர லகற்றி யாதி

     தூதுவ ரிவரே யல்லா லிலையென மனத்திற் றூக்கி

     வேதநா யகமே யென்பால் விருப்புறுங் கலிமாத் தன்னை

     யோதுமென் றிருகை யேந்தி யுவந்துநின்றுரைப்ப தானான்.                     66

 

     கருமுகிற் கவிகை வேந்தே கானக வேட னென்னு

     முருவினன் விலங்கோ டொப்பே னுள்ளரி வுணர்வு மில்லேன்

     றெருளுறப் பாவி யென்னைத் தீனிலைக் குரிய னென்னப்

     பெரிதளித் திடுதல் நுந்தம் பெருமையிற் பெருமை யென்றான்.               67

 

     மதிமுக மகிழ்ச்சி கூர முகம்மது கலிமாச் சொல்ல

     விதயமுற் றோதி வேட னினிதினி னீமான் கொண்டு

     புதியனை வணங்கிச் செய்யுஞ் செய்தொழில் பொருந்தக் கேட்டு

     நிதிமனைக் குரிய னாகித் தீனிலை நெறிநின் றானே.                                  68

 

     பெறுகதி நின்னாற் பெற்றேன் பெரும்பவங் களைந்தேன் மாறாத்

     தெறுகொலை விளைத்து முன்னஞ் செய்தொழி றவிழ்த்தே னீயு

     மறுகலை யெறிந்து தேறு மனக்கலை யொடுகன் றோடு

     முறுகலை யிடத்திற் போய்ச்சேர்ந் தொழுகலை முயல்தியென்றான்      69

 

     வானவர் பரவுங் கோமான் முகம்மது மானை நோக்கிக்

     கானகஞ் சென்னீ யென்றார் கமலமென் பதத்திற் றாழ்ந்து

     தீனிலைக் குரிய வேடன் றன்னையுந் திருந்தப் போற்றி

     நானிலம் புகலப் பாரி னடந்தினஞ் சேர்ந்த தன்றே.                                    70

 

     தேனைக்குங் குமங்கள் சிந்தச் செழித்ததிண் புயத்து வள்ளல்

     கானைக்குவ் விடத்திற் காட்டுங் கமலமென் பதத்தைப் போற்றித்

     தானைக்கும் பதிக்கு மியானே தலைவனென் பவர்போல் வேடன்

     மானைக்கொண் டுவரப் போயீ மானைக்கொண் டகத்திற் புக்கான்.        71

 

     துடவைநன் மலரைத் தூற்றுந் தூய்நிழ லிடத்தை நீந்திப்

     படர்முகிற் கவிகை யோங்கப் பாருள தெவையும் வாழ்த்த

     வடவரை யனைய திண்டோள் வயவர்க ளினிது சூழக்

     கடிமனை யிடத்திற் புக்கார் கபீபிற சூலு மன்றே.                                        72

 

           முற்றும்

 

கருத்துகள் இல்லை: