திங்கள், 4 செப்டம்பர், 2023

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், காப்பியங்கள், (செவ்வியல் நூல்கள்)

செவ்வியல் நூல்கள்

தொல்காப்பியம்

தமிழில் மறைந்துபோன நூல்கள் ஏராளம். கிடைத்தவற்றுள் மிகத்தொன்மையான நூலாக தொல்காப்பியம் என்னும் இலக்கணநூல் திகழ்கிறது. இந்நூல் தமிழ்மொழியின் பெருமையையும், தமிழ் மக்களின் அறிவுப் பாரம்பரியத்தையும் உலகோர் அறிந்துகொள்ளப் பெரிதும் உதவுகிறது.

ü  இந்நூலின் ஆசிரியர் தொல்காப்பியர்  என்ற பெயரால் அடையாளப்படுத்தப்படுகிறார். இவரைக்குறித்த முழுமையான வரலாறு அறியப்படவில்லை.

ü  தொன்மையான காப்பியக்குடி என்னும் ஊரினர் என்பதால் இப்பெயர் பெற்றார் என்பர்.

ü  இந்நூலுக்குப் பனம்பாரனார் என்பார் சிறப்புப்பாயிரம் பாடியுள்ளார்.

ü  தொல்காப்பியம் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில், அதங்கோட்டு ஆசான் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.

ü  தொல்காப்பியத்திலுள்ள மொத்த நூற்பாக்கள் 1610.

ü  இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றிலும் ஒன்பது ஒன்பது இயல்கள் அமைந்துள்ளன.

ü  இந்நூலின் காலம் கி.மு. 5 அல்லது 3ஆம் நூற்றாண்டு என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்

ü  தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் என்பார் முதன்முதலில் உரைகண்டார். இவரது காலம் பதினோராம் நூற்றாண்டு என்பர்.

நற்றிணை

நற்றிணை அகவல் பாக்களால் இயற்றப்பட்ட 400 அகப்பாடல்களைக் கொண்ட தொகைநூல் இதன் அடியளவு 9 முதல் 12 அடிகள். பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடல்  இத்தொகை நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்துள்ளது.

ü  நற்றிணையில் உள்ள பாடல்களை இயற்றிய பெயர் தெரிந்த புலவர்கள் எண்ணிக்கை 175.

ü  56 பாடல்களை இயற்றிய புலவர் பெயர்களை அறியமுடியவில்லை.

ü  இதனைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. தொகுப்பித்ததவன் பன்னாடு தந்த பாண்டியன்                         மாறன் வழுதி.

ü  இந்நூலுக்கு முதலில் உரை எழுதியவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயங்கார்.

குறுந்தொகை

குறுந்தொகை 4 அடி முதல் 8 அடி வரை என்ற குறுகிய அடியளவுடைய 400 அகப்பாடல்களைக்கொண்ட ஆசிரியப் பாக்களால் ஆன தொகைநூலாகும். இப்பாடல்களை இயற்றிய புலவர்களின் எண்ணிக்கை 205. இத்தொகை நூலுக்கு  பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடல் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது. இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவர். தொகுப்பித்தார் பெயர் தெரியவில்லை.

அணிலாடு முன்றிலார், குப்பைக்கோழியார், விட்ட குதிரையார்  என்று சிறப்புத் தொடரால் அமைந்த பெயராலும்,  செம்புலப்பெயல் நீரார்  போன்று உவமையாலும் பெயர்பெற்ற புலவர் பலர் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளனர்.

ஐங்குறுநூறு

இந்த நூலில் உள்ள பாடல்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளும் உயர்ந்த அளவாக ஆறு அடிகளும் கொண்டவை. இந்நூல் 500 குறும்பாடல்களால் ஆனது. ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு நூறையும் ஒவ்வொரு புலவர் என ஐந்து புலவர்கள் இந்நூலிலுள்ள பாடல்களைப் பாடியுள்ளனர். ஒவ்வொரு நூறும் பத்துப் பத்துக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பத்தும் ஒரு பெயர் பெறுவது சிறப்பு. கருப்பொருள், உரிப்பொருள், பேசும் பாத்திரம், கேட்கும் பாத்திரம் முதலியவற்றுள் ஒன்று அப்பெயர்க்கு அடிப்படையாக அமையும்.

இதற்கும் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து இயற்றியுள்ளார். இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார். தொகுப்பித்தவர் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவராவர்.

இதனை இயற்றியோர் பற்றிய விவரம் வருமாறு:

 

மருதம்                  - ஓரம்போகியார்

நெய்தல்               - அம்மூவனார்

குறிஞ்சி                 - கபிலர்

பாலை                  - ஓதலாந்தையார்

முல்லை               - பேயனார

அகநானூறு

இது 13 அடிச்  சிற்றெல்லையும் 31 அடிப்பேரெல்லையும் உடைய 400 அகப்பாடல்களைக் கொண்டது. ஆசிரியப்பா யாப்புடையது. பாரதம் பாடிய பெருந்தேவனார் இதற்கு கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.

இதற்கு நெடுந்தொகை என்ற பெயரும் உண்டு. இது களிற்று யானை நிரை (1-120) மணிமிடை பவளம் (121-300) நித்திலக்கோவை (301 - 400) என்று மூன்று பிரிவாகப் பகுத்து தொகுக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு முறையில் இது ஏனையவற்றை விட வேறுபட்டுள்ளது. பாட்டின் எண்களைக் கொண்டு அதன் திணையைச் சொல்லும் வகையில் இத்தொகையிலுள்ள பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒற்றைப்படை எண் கொண்ட 200 செய்யுட்கள் பாலைத் திணைக்கு உரியன. 2, 8 என்ற எண்களில் முடிவன குறிஞ்சித் திணைக்குரியன. 4 என்ற எண்ணில் முடிவன முல்லைக்கும், 6 என்ற எண்ணில் முடிவன மருதத்திற்கும், 10, 20 என்றவாறு முடிவன நெய்தலுக்கும் உரியன.

மதுரை உப்பூரிகுடி கிழாரைக் கொண்டு இதனைத் தொகுப்பித்தவன் உக்கிரப்பெருவழுதி. இத்தொகை நூலில் 175 புலவர்களின் செய்யுட்கள் இடம்பெற்றுள்ளன.

கலித்தொகை

கலிப்பா என்னும் பாவகையால் இயற்றப்பட்ட 150 பாடல்கள் கொண்டது இந்நூல். அகப்பொருளைப் பாட ஏற்ற யாப்பாகத் தொல்காப்பியரால் சொல்லப்பட்டவை கலியும் பரிபாடலும் என்பது நினையத்தக்கது. அவ்விலக்கணத்திற்குப் பொருந்த அமைந்தது கலித்தொகை. நல்லந்துவனார் இந்நூலைத் தொகுத்தவர் ஆவார். நூல் முழுவதனையும் ஒரு புலவரே பாடியிருக்க வேண்டும் என்ற கருத்தும் உண்டு. இந்நூலை முதன்முதலில் பதிப்பித்து அச்சுக்குக்கொண்டுவந்தவர் சி.வை. தாமேதரம்பிள்ளை ஆவார். உரை எழுதியவர் நச்சினார்க்கினியர். ‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ என்று சிறப்பிக்கப்படும் இந்நூலில் பாண்டிய மன்னர்கள் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளனர். ஏறு தழுவல் என்னும் வீரவிளையாட்டைப்பற்றி முல்லைக்கலிப் பாடல்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பிற்காலத்து வெண்பாவொன்று, இதிலுள்ள ஐந்திணைகளையும் பாடிய புலவர்களைக் குறிப்பிடுகின்றது. இதன்படி, பாடியோரும் அவர் பாடிய திணையும் பின்வருமாறு அமைந்துள்ளது.

                         பாலை(35 பாடல்கள்)      - பாலை பாடிய பெருங்கடுங்கோ

                         குறிஞ்சி (29 பாடல்கள்)    - கபிலர்

                         மருதம்(35 பாடல்கள்)      - மருதன் இளநாகனார்

                         முல்லை(17 பாடல்கள்)   - சோழன் நல்லுருத்திரன்

                          நெய்தல்(33 பாடல்கள்)   - நல்லந்துவனார் 

புறநானூறு

புறப்பொருள் பற்றிய 400 அகவற்பாக்களைக் கொண்டது புறநானூறு. இதனைத் தொகுத்தாரும், தொகுப்பித்தாரும் யாவர் எனத் தெரியவில்லை. இத்தொகை நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இதனை நமக்குத் தேடித் தந்தவர் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயராவார். இது தமிழ்க் கருவூலம் என்றும் போற்றப்படுகிறது.

பதிற்றுப் பத்து

சேர மன்னர்கள் பதின்மரைப்பற்றிப் பத்துப் புலவர்கள் ஒவ்வொரு மன்னரைப்பற்றியும் பத்துச் செய்யுள் வீதம் பாடிய 100 செய்யுட்களின் தொகுப்பு இது. இதன் முதற்பத்தும், இறுதிப்பத்தும் அழிவுற்றன. எஞ்சியவை 80 செய்யுட்களே. இதனைத் தொகுத்தவர் தொகுப்பித்தவர் பெயர்களை அறியமுடியவில்லை.

இந்நூலின் ஒவ்வொரு பத்துக்கும் ஒவ்வொரு பதிகம் உண்டு. அப்பதிகத்தில் அப்பாடலைப் பாடிய புலவர், பாடப்பட்ட மன்னன், அவன் செய்த அருஞ்செயல்கள், ஆண்ட கால அளவு, புலவர் பெற்ற பரிசில் முதலிய அரிய செய்திகள் காணப்படுகின்றன.

 

பத்தின் பெயர்

 

பாட்டுடைத் தலைவன்

பாடிய புலவர்

 

முதற் பத்து

 

 

இரண்டாம் பத்து

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

குமட்டூர்க்

கண்ணனார்

மூன்றாம் பத்து

பல்யானைச் செல்கெழுகுட்டுவன்

பாலைக்

கௌதமனார்

நான்காம் பத்து

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்

காப்பியாற்றுக்

காப்பியனார்

ஐந்தாம் பத்து

கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்

பரணர்

ஆறாம் பத்து

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

காக்கை பாடினியார் நச்செள்ளையார்

ஏழாம் பத்து

செல்வக் கடுங்கோ வாழியாதன்

கபிலர்

எட்டாம் பத்து

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

அரிசில் கிழார்

ஒன்பதாம் பத்து

இளஞ்சேரல் இரும்பொறை

பெருங்குன்றூர் கிழார்

பத்தாம் பத்து

 

 

 

பரிபாடல்

எட்டுத்தொகை நூல்களுள் அகமும், புறமும் கலந்து அமைந்த நூல் பரிபாடலாகும். பரிபாடல் என்பது யாப்பு வகையால் பெற்ற பெயர். இதில், திருமால், முருகன், கொற்றவை என்ற தெய்வங்கள் பற்றியும், மதுரை நகர் பற்றியும், வையையாறு பற்றியும் புகழ்ந்து பேசும் எழுபது பாடல்கள் இருந்தன. அழிந்தவை போக இப்போது 22 பாடல்களும் சில சிதைந்த உறுப்புகளுமே எஞ்சியுள்ளன. புறத்திரட்டிலிருந்து வேறு இரு பாடல்கள் கிடைத்துள்ளன.

இந்நூலைத் தொகுத்தார் தொகுப்பித்தார் பற்றிய விவரம் கிடைக்கவில்லை. இதிலுள்ள பாடல்களை இயற்றியோர் பதின்மூவர். இவற்றுக்கு இசை வல்லுநர்களைக் கொண்டு பண் வகுக்கப்பட்டுள்ளன. பாடலாசிரியர் பெயருடன், இசை வகுத்தவர் பெயரும், பண்ணின் பெயரும் ஒவ்வொரு பாடலுக்கும் கீழ் தரப்பட்டுள்ளன.

 

நூல்

புலவர்

பாடல்

அடி

பொருள்

தொகுத்தவர்

தொகுபித்தவர்

கடவுள் வாழ்த்து பாடியவர்

தெய்வம்

நற்றிணை

175

400

9-12

அகம்

தெரியவில்லை

பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

பாரதம் பாடிய பெருந்தேவனார்

திருமால்

குறுந்தொகை

205

400

4-8

அகம்

பூரிக்கோ

தெரியவில்லை

பாரதம் பாடிய பெருந்தேவனார்

முருகன்

ஐங்குறுநூறு

5

500

3-6

அகம்

புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

பாரதம் பாடிய பெருந்தேவனார்

சிவன்

பதிற்றுபத்து

8

100(80)

8-57

புறம்

தெரியவில்லை

தெரியவில்லை

 

 

பரிபாடல்

13

70(22)

25-400

அகம் + புறம்

தெரியவில்லை

தெரியவில்லை

 

 

கலித்தொகை

5

150

11-80

அகம்

நல்லந்துவனார்

தெரியவில்லை

நல்லந்துவனார்

சிவன்

அகநானூறு

145

400

13-31

அகம்

உருத்திர சன்மனார்

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

பாரதம் பாடிய பெருந்தேவனார்

சிவன்

புறநானூறு

158

400

4-40

புறம்

தெரியவில்லை

தெரியவில்லை

பாரதம் பாடிய பெருந்தேவனார்

சிவன்

 

பத்துப்பாட்டு

முல்லைப் பாட்டு

பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன. இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.

முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது. கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக வாக்குறுதி தந்து போர்க்கடமை ஆற்றச் சென்ற தலைவன் வரும் வரையில், பிரிவுத் துயரைத் தாங்கி, இல்லறம் காக்கும் மனைவியின் ஒழுக்கம் பேசுவதே முல்லைத்திணை.

குறிஞ்சிப் பாட்டு

ந்நூல் 261 அடிகள் கொண்ட அகவற் பாவால் பாடப்பட்டது. குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருளும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் இந்நூல் குறிஞ்சிப்பாட்டு என்ற பெயரைப் பெற்றது. பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு. இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

காதல் நோயால் மெலிவுற்ற தலைவியின் மேனி வேறுபாட்டைக் கண்ட அன்னை, கட்டு பார்த்தும் கழங்கு பார்த்தும் தெய்வத்திற்குப் பூசைகள் செய்தும் அந்நோய் தீராமையால் துயர் உறுவது கண்ட தோழி, தலைவியின் துயருக்கு, அவள் ஒரு மலைநிலத் தலைவனிடம் கொண்ட காதலே காரணம் என்று வெளிப்படக் கூறும் வகையில் இப்பாட்டு இயற்றப்பட்டுள்ளது.

இச்செய்யுள் ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழ் அகத்திணைச் சிறப்பைக் கூறும் நோக்கத்தில் கபிலரால் இயற்றப்பட்டது.

பட்டினப்பாலை

பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது இப்பெயரின் பொருள். இங்கு குறிப்பிடப்படும் பட்டினம் புகார் நகராகும். 301 அடிகள் கொண்ட இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர். இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான். இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியரும் இவரே.

பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது. அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.

இதில் வரும் கிளவித் தலைவன் (தலைவியின் கணவன்), பாட்டுடைத் தலைவனாகிய கரிகாலன் பெருமைகளை யெல்லாம் விவரித்து, அவனால் ஆளப்படும் புகார் நகரின் பல்வேறு சிறப்புகளையும் பலபடப் பாராட்டி, அத்தகைய பட்டினத்தினையே பெறுவதாக இருப்பினும் தன் மனைவியைப் பிரிந்து செல்ல மனமில்லாது செலவைக் கைவிடுவான்.

301 அடிகள் கொண்ட இப்பாட்டில் 217 அடிகள் பட்டினச் சிறப்பையே பேசுகின்றன. பண்டைத் தமிழரின் வணிகச் சிறப்பையும், கலைச்சிறப்பையும், சமய வழிபாட்டுச் சிறப்பையும் பிறவற்றையும் இப்பாட்டு உலகறியச் செய்கிறது. துறைமுகத்தில் நடக்கும் ஏற்றுமதியும் இறக்குமதியும், அங்குச் சுங்க அதிகாரிகள் புலிச் சின்னம் பொறித்தலும், சுங்கம் பெறுதலும், அறச்சாலைகளில் உணவளிக்கும் சிறப்பும், வணிகர்களின் நடுவுநிலைப் பண்பும், அவர்களுடைய அறப் பண்பும் பாராட்டப்படுகின்றன.

நெடுநல்வாடை

இது 188 அடிகள் கொண்ட அகவல். இதனை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவரும் திருமுருகாற்றுப்படை ஆசிரியரும் வெவ்வேறு புலவர்கள் என்பர். இருவரும் ஒருவரே என்பாரும் உளர்.

காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில் இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவைக்கு வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.

பிரிவுத் துயரால் வருந்தும் காதலிக்கு வாடைக் காற்று நெடியதாகத் தோன்றுகிறது. அதாவது, ஒரு பொழுது ஓர் ஊழி போல் காண்கின்றது. ஆனால் பாசறையில் இருக்கும் தலைவன் புண்பட்ட வீரர்க்கும், யானைகளுக்கும் குதிரைகளுக்கும் அன்பு காட்டி ஆறுதல் செய்கிறான். காமச் சிந்தனையற்றுக் கடமையில் கருத்தூன்றுகிறான். இதனால் வாடை அவனுக்கு நல்லதாயிற்று. பாட்டின் பெயர்ப் பொருத்தம் இதனால் விளங்கும்.

இப்பாட்டில் இடம்பெறும் கூதிர்கால வருணனையொன்றே புலவரின் பெருமையை நிலைநாட்ட வல்லது.

சிறுபாணாற்றுப் படை

இது ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய 269 அடிகள் கொண்ட அகவற்பாட்டு. சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது. பெரும்பாணாற்றுப்படையை விட அளவால் சிறியது என்பதால் இப்பெயர் பெற்றது என்று கூறினும் பொருந்தும்.

இதில் சீறியாழின் உருவ அமைப்பு அழகாக, உவமைகளுடன் விளக்கப்பட்டுள்ளது. நல்லியக்கோடன் நாட்டு வளமும், மக்கள் வாழ்வுச் சிறப்பும், விருந்தோம்பும் பண்பும் காட்டப்பட்டுள்ளன. கடையெழு வள்ளல்களின் வரலாறுகள் சுருக்கமாகக் கூறப்பட்டிருத்தலும், மூவேந்தர் நாடுகள் வருணிக்கப்பட்டிருத்தலும் இந்நூலின் வரலாற்றுத் தன்மைக்குச் சான்றாகும்.

பெரும்பாணாற்றுப் படை

இது கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர், காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனைப் புகழ்ந்து பாடிய 500 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும். பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப்படை என்று பெயர் பெற்றது. 269 அடிகள் கொண்ட சிறுபாணாற்றுப் படையை நோக்க இது அடியளவில் பெரியது என்பது பற்றி இப்பெயர் பெற்றதாகவும் கொள்வர்.

இளந்திரையன் நாட்டின் ஐந்திணை வளமும், அவ்வத்திணையில் வாழ்ந்த வேடர், எயினர், மறவர், உழவர், பரதவர், ஆயர், அந்தணர் ஆகிய இனத்தவர் வாழ்க்கையும், அவர்களின் விருந்தோம்பற் பண்பும் பிறவும் பற்றி விரிவாகப் பேசுகிறது. மாந்தரின் குடியிருப்பும் செயல்களும் உண்மைத் தன்மையுடன் இதில் பாடப்பட்டுள்ளன.

பொருநராற்றுப் படை

சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு முடத்தாமக் கண்ணியார் இயற்றிய இப்பாட்டு 248 அடிகள் கொண்டது. போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.

பொருநன் கையாண்ட யாழ் பற்றிய வருணனை பாட்டின் முன் பகுதியிலேயே அமைந்துள்ளது. கொடியவரான வழிப்பறிசெய்வோரின் கல்மனத்தையும் கனிவுள்ளதாக மாற்ற வல்லது பாலை யாழ் என்ற செய்தி இதில் காணப்படுகிறது.

கலைஞர்கட்கு அருள் சுரந்து பரிசளிக்கும் கரிகாலனின் வண்மையைப் புலவர் சிறப்புறப் பாராட்டியுள்ளார். கண்ணால் பருகுவது போலப் பார்த்து, எலும்பையும் குளிரச் செய்யுமாறு அன்பு செலுத்தி, ஈரும் பேனும் தங்கியுள்ள கந்தலாடையினை நீக்கி, கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய இழைகளால் நெய்யப்பட்ட பட்டாடையை உடுத்தி, உயர்ந்த அரிசியால் சமைத்த புலால் உணவினை உண்ணச் செய்து, கன்றொடு கூடிய யானைகளைப் பரிசாக அளித்துப் பிரியாவிடை தருவான் கரிகாலன் என்கின்றார் புலவர். மேலும், பால்போல் வெண்மையான நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் கொடுத்து, ஏழடிகள் பின் சென்று அவர்கட்கு விடையளித்தான் என்றும் குறிப்பிடப்படுவது நோக்கத்தக்கது.

மலைபடுகடாம்

வேளிர்குடியைச் சேர்ந்த நன்னன் சேய் நன்னன் என்பானை இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் பாடிய 583 அடிகள் கொண்ட அகவற்பாட்டு இது. பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது. மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.

மலைச் சாரலில் தோன்றும் பல்வேறு ஓசைகள் பற்றிய வருணனையும், நன்னனைக் காணச் சென்ற குறவர்கள் கொண்டு போன கையுறைப் பொருள்கள் பற்றிய வருணனையும் நூலின் சிறந்த பகுதிகள்.

நன்னன் நாட்டு மக்கள் பலரும் வாழும் வாழ்க்கை முறைகளும், அவர்களின் விருந்தோம்பல் சிறப்பும் நன்னன் ஊரின் பெருமையும், அவன் கலைஞர்கட்குப் பரிசளிக்கும் சிறப்பும் இதில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

திருமுருகாற்றுப் படை

பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை. இது 317 அடிகள் கொண்டது. முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த இதனை இயற்றியவர் நக்கீரர். இவரும் நெடுநல்வாடையைப் பாடியவரும் ஒருவரே என்பார் பலர். இருவரும் வெவ்வேறு ஆசிரியர்கள் என்பாரும் உளர். ஆற்றுப்படுத்தப் படுவோன் பெயர் நூலுக்கு அமைவது ஏனைய ஆற்றுப்படைகளின் பண்பு. இது, அதற்கு மாறாக, பாட்டுடைத் தலைவன் பெயரால் அழைக்கப்படுகிறது. இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.

இதில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆறுபடை வீடுகள் பற்றியும், ஆங்காங்கு நடக்கும் வழிபாடுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன.

இந்நூலின் அருமை கருதி, பிற்காலத்தில் சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையில் ஒரு பகுதியாக இதனைச் சேர்த்துள்ளனர். இது, சைவர்களின் வழிபாட்டு நூலாக விளங்குகிறது.

மதுரைக் காஞ்சி

பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது. இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறி, தனக்கென வரையறுத்த நாட்களை நல்ல முறையில் வாழுமாறு அறிவுறுத்தும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றிய பாட்டாகும். இது காஞ்சித்திணையில் அமைந்தது 

இதில் பாண்டிய நாட்டின் ஐந்திணை வளம், அவ்வந்நிலங்களில் நடக்கும் வாழ்க்கை முறைகள், பாண்டியன் பகைவர் நாட்டை அழித்தல், பணிந்தார்க்கு நலம் செய்தல், இருபெருவேந்தரையும் ஐம்பெருவேளிரையும் வென்றமை ஆகியன விரிவாகக் கூறப்படுகின்றன.

வையையாற்று வளம், மதுரையைச் சூழ்ந்த அகழி, இரவும் பகலும் நடக்கும் அல்லங்காடி, நாளங்காடியின் தன்மைகள், அந்தணர் இருக்கை, சாவகர், சமணர், பௌத்தர்களின் இருக்கைகள், பெரியோர்களின் ஒழுகலாறுகள் ஆகியவற்றை ஆசிரியர் இனிதே விளக்கியுள்ளார். மாலை முதல் விடியற்காலம் வரையில் பல்வேறு மாந்தரின் செயல்களை அழகுறக் காட்டும் புலவர், பரத்தையர் தம்மை அழகுறுத்திக் கொண்டு செல்வக்குடி இளைஞர்களை மயக்கிப் பொருள் பறித்தலையும், உளியும், நூலேணியும் கொண்டு களவாடப்போகும் கள்வர் இயல்பையும், அவர்களைப் பிடித்தற்கு மறைந்து செல்லும் காவலர் இயல்பையும் இதனுள் மிக அழகாகக் காட்டியுள்ளார்.

அமைச்சர்கள் காவிதிப் பட்டம் பெறுதல், அறங்கூர் அவையத்தின் சிறப்பு, சங்கறுத்து வளையல் செய்தல் முதலிய தொழில் வல்லுநரின் இயல்புகள், பாணர்களின் நிலை, அவர்களின் கலைவன்மை, கட்டிடக்கலை, நெசவுக்கலை முதலியவற்றின் மேம்பாடு என்பவை இப்பாட்டில் விளக்கப்படுவது சிறப்பாகவுள்ளது.

மதுரைக் காஞ்சி கூறும் நிலையாமை உலக வாழ்க்கையை இகழ்ந்து ஒதுக்குவது அன்று. உலகம் நிலையானது. இதில் நிலைத்த புகழை நிலைநிறுத்த வேண்டும் என்பதே புலவரின் அறிவுரை.


வ.
எண்

நூலின் பெயர்

அடிகள்

பாடியோர்/ஆசிரியர்

பாடப்பட்டோர்

1.

திருமுருகு
ஆற்றுப்படை

317

நக்கீரர்

முருகக் கடவுள்

2.

பொருநர்
ஆற்றுப்படை

248

முடத்தாமக்
கண்ணியார்

கரிகால் பெரு
வளத்தான்

3.

சிறுபாண்
ஆற்றுப்படை

269

நல்லூர்
நத்தத்தனார்

நல்லியக்கோடன்

4.

பெரும்பாண்
ஆற்றுப்படை

500

கடியலூர்
உருத்திரங்கண்ணனார்

தொண்டைமான்
இளந்திரையன்

5.

கூத்தர்
ஆற்றுப்படை

583

பெருங்குன்றூர்ப்
பெருங் கௌசிகனார்

நன்னன் சேய்நன்னன்

6.

முல்லைப்பாட்டு

103

நப்பூதனார்

-

7.

குறிஞ்சிப்பாட்டு

261

கபிலர்

-

8.

மதுரைக்காஞ்சி

782

மாங்குடி மருதனார்

பாண்டியன்
நெடுஞ்செழியன்

9.

நெடுநல்வாடை

188

நக்கீரர்

-

10.

பட்டினப்பாலை

301

கடியலூர் உருத்திரங்
கண்ணனார்

-

கீழ்க்கணக்கு நூல்கள்

 

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்

பால் கடுகம் கோவை பழமொழி மா மூலம்

இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே

கைந்நிலையும் ஆம்கீழ்க் கணக்கு.

 

இப்பாட்டின்படி, இத்தொகுப்பில் அடங்கும் பதினெட்டு நூல்களின் பெயர்களும் கீழே தரப்படுகின்றன.

 

நாலடியார்

நான்மணிக்கடிகை

இன்னா நாற்பது

இனியவை நாற்பது

கார் நாற்பது

களவழி நாற்பது

ஐந்திணை ஐம்பது

ஐந்திணை எழுபது

திணைமொழி ஐம்பது

திணைமாலை நூற்று ஐம்பது

திருக்குறள்

திரிகடுகம்

ஆசாரக்கோவை

பழமொழி

சிறுபஞ்சமூலம்

முதுமொழிக்காஞ்சி

ஏலாதி

கைந்நிலை

 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் வகைப்பாடு

இப்பதினெட்டு நூல்களையும்

 

1. நீதி உரைப்பவை (11 நூல்கள்)

2. காதலைச் சிறப்பிப்பவை (6 நூல்கள்)

3. போர் பற்றியது (ஒன்று)

என மூன்று பிரிவுகளுள் அடக்கலாம்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலம்

பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுதியில் அடங்கும் தனித்தனி நூல்களின் காலத்தை வரையறுப்பது எளிதன்று. எனினும், இந்நூல் தோற்றம் பெற்ற காலம் இருண்ட காலம் (கி.பி. 3 முதல் கி.பி. 6 வரை) என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்ற களப்பிரர் காலமாகும். இனி, இம்முப்பிரிவுகளிலும் இடம்பெறும் நூல்கள் பற்றித் தனித்தனியே அறியலாம்.

திருக்குறள்

தமிழில் உள்ள அறநூல்களுள் காலத்தால் முந்தியதும் தன்மையால் தலைசிறந்ததும் திருக்குறளாகும். குறள் வெண்பா எனப்படும் யாப்பில் இயற்றப்பட்ட நூலாதலின் இந்நூலுக்குத் திரு என்னும் அடைமொழி சேர்த்து திருக்குறள் என்று வழங்கி வருகின்றோம்.

நூல் அமைப்பு

திருக்குறளில் அறத்துப்பால்(38 அதிகாரங்கள்), பொருட்பால்(70 அதிகாரங்கள்), காமத்துப்பால்(25 அதிகாரங்கள்) என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பெரும்பிரிவிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. இவை இயல்கள் எனப்படும். இயல்களின் உட்பிரிவுகளாக அதிகாரங்கள் அமைகின்றன. ஒவ்வோர் அதிகாரத்தி்லும் பத்துப்பத்துக் குறட்பாக்கள் இடம் பெறுகின்றன. இதில் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன. 

திருவள்ளுவர் வரலாறு

திருவள்ளுவர் பற்றிய உண்மையான வரலாறு, அறிய முடியாததாக உள்ளது. இவர் மயிலையில் பிறந்தவர் என்று ஒருசாரார் கருதுகின்றனர். இவர்க்குரிய இயற்பெயர் யாது என்றும் தெரியவில்லை. பிறந்த குடி பழம் பெருமை மிக்க வள்ளுவக்குடி என்பர். இவர் வாழ்ந்த காலம் பற்றியும் ஒருமித்த கருத்து இல்லை.

திருக்குறள் உரையாசிரியர்கள்

திருக்குறளுக்குப் பத்துப்பேர் இடைக்காலத்தில் உரையெழுதி உள்ளனர். இவ்வுரையாசிரியர் பெயர்களைப் பின்வரும் வெண்பாவால் அறியலாம்.

 

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்

பரிதி பரிமே லழகர் - திருமலையர்

மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு

எல்லை உரை செய்தார் இவர்

இவர்களுள் மணக்குடவர், காளிங்கர், பரிப்பெருமாள், பரிதியார், பரிமேலழகர் ஆகியோர் உரைகளே இப்பொழுது கிடைக்கின்றன. இவற்றுள் பரிமேலழகர் உரையே பெரியோர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றது. இக்காலத்தில் எண்ணற்ற புத்துரைகள் பலவும் தோன்றியுள்ளன.

வடமொழியில் உள்ள மனுநீதி முதலிய நீதி நூல்கள் வருணங்களின் அடிப்படையில் அறம் உரைப்பவை. திருக்குறள் ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கருத்தின் அடிப்படையில் மனித குலம் அனைத்திற்கும் பொதுவான அறம் கூறுவது.

வள்ளுவர் காலத்தில் வைதீகம், சமணம், பௌத்தம் முதலான பல சமயங்கள் வழக்கில் இருந்தன. ஆனால் வள்ளுவர் எச்சமயத்தையும் சார்ந்து நின்று அறம் உரைக்கவில்லை. அதனால்தான் ‘சமயக்கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இது என்ற வள்ளுவர்’ என ஒரு புலவர் பாராட்டினர்.

வள்ளுவர் கூறும் நெறிகள் உலகப் பொதுமை உடையனவாக விளங்குவதனால் திருக்குறள் உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்பது பாரதியார் வாக்கு. இந்நூலை பலரும் சிறப்பித்துப் பாடியுள்ளனர் அவை திருவள்ளுவமாலை என்ற பெயரால் தொகுக்கப்பட்டுள்ளது.

நாலடியார்

திருக்குறளுக்கு அடுத்த இடத்தில் வைத்து எண்ணப்படுவது நாலடியார். நாலடி வெண்பாக்கள் கொண்ட நீதி நூல்கள் வேறு பல உண்டு. எனினும், இதன் சிறப்புக் கருதி இதனை மட்டும் நாலடி என்று வழங்கினர். நானூறு வெண்பாக்கள் உடைமையால் நாலடி நானூறு என்றும் வழங்கும். இதற்கு வேளாண் வேதம் என்ற பெயரும் உண்டு. இந்நூலை சமண முனிவர் பலரும் இயற்றினர்.

 

இந்நூல் திருக்குறள் போன்றே முப்பால்களாகவும், பல இயல்களாகவும், அதிகாரங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது.

 

அறத்துப்பாலில் துறவற இயல், இல்லற இயல் என்ற இரண்டு இயல்களும் 13 அதிகாரங்களும் உள்ளன.

 

பொருட்பாலில் அரசு இயல், நட்பு இயல், இன்ப இயல், துன்ப இயல், பொது இயல், பகை இயல், பல்நெறி இயல் என ஏழு இயல்களும் 24 அதிகாரங்களும் அடங்கும்.

 

காமத்துப்பாலில் இன்ப துன்ப இயல், இன்ப இயல் என இரண்டே இயல்களும், 3 அதிகாரங்களும் உள்ளன.

 

நாலடியாரில் சமண சமயத்திற்கே சிறப்பாகவுரிய பல உண்மைகள் அழகாகக் கூறப்பட்டுள்ளன. செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவற்றை அழகிய உவமைகள் வாயிலாக இந்நூல் விளக்கியுள்ளமை சிறப்பாகும்.

பழமொழி நானூறு

நாலடி போலவே நானூறு வெண்பாக்கள் கொண்ட நீதிநூல் பழமொழியாகும். பழமொழி நானூறு என்றும் இது வழங்கும். இதிலுள்ள ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெறும். பாட்டு முழுவதும் அப்பழமொழியின் விளக்கமாக அமையும். பழமொழிகளைத் தொகுத்து இலக்கியமாக்கப்பட்டவற்றில் தொன்மையான தமிழ்நூல் இதுவேயாகும். திருக்குறள், நாலடியார் போன்ற அற நூல்களைத் தழுவிச் செல்வது இந்நூல். பழமொழியின் ஆசிரியர் முன்றுறை அரையனார் என்பவர். இவ்வாசிரியர் சமண சமயத்தினர்.

இந்நூலில் பண்டை மன்னர்கள் பலரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. மனுநீதிச் சோழன் தன் மகனைத் தேரினைச் செலுத்திக் கொன்ற செய்தியும் (93), பாரி முல்லைக்குத் தேரும், பேகன் மயிலுக்குப் போர்வையும் அளித்த வரலாறும் (361), கரிகாலன் இரும்பிடர்த் தலையார் உதவியால் அரசு பெற்று ஆண்ட வரலாறும் (105), கரிகாலனுக்கு யானை மாலையிட்டு மன்னனாக்கிய செய்தியும் (62), அவனே நரைமுடிந்து வந்து நீதி வழங்கிய வரலாறும் (21), வேறு பல வரலாறுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

குலவிச்சை கல்லாமல் பாகம்படும் (21), கற்றலின் கேட்டலே நன்று (61), வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று (175), நுணலும் தன் வாயால் கெடும் (184), முதல் இல்லார்க்கு ஊதியம் இல்(லை) (312), ஒருவர் பொறை இருவர் நட்பு (247) என்பன இந்நூலில் இடம்பெறும் பழமொழிகளில் சில.

திரிகடுகம்

கடவுள் வாழ்த்தோடு சேர்ந்து 101 வெண்பாக்களைக் கொண்ட நீதிநூல் இது. இதில், திரிகடுகம் என்ற மருந்தில் அடங்கியுள்ள சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று காரப் பொருள்கள் உடல் நோயைத் தீர்ப்பது போல், அப்பெயர் கொண்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலும் கூறப்பட்ட மூன்று அறக்கருத்துக்கள் அகநோயைத் தீர்க்கவல்லது.  இதன் ஆசிரியர் நல்லாதனார்.

இந்நூலாசிரியர் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை ஆகியவற்றின் கருத்துக்களை எடுத்தாண்டுள்ளார். இதில் காணும் பழமொழிகளாவன (1) உமிக்குற்றுக் கை வருந்துவார் (2) தம் நெய்யில் தாம் பொரியுமாறு (3) துஞ்சு ஊமன் கண்ட கனா (4) தூற்றின்கண் தூவிய வித்து முதலியனவாகும்.

ஈதற்குச் செய்க பொருளை (90), நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும் (72), கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் (52), நெஞ்சம் அடங்குதல் வீடாகும் (43), சூதினால் வந்த பொருளை விரும்பல் ஆகாது (42). விருந்தின்றி உண்ட பகல் அறிவுடையவர்க்கு நோயாகும் (44). பொய் நட்பின் சிறப்பை அழித்து விடும் (83) என்பனபோன்ற கருத்துக்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

நான்மணிக்கடிகை

நான்கு உயர்ந்த மணிகளால் ஆன அணிகலன் போல ஒவ்வொரு பாட்டிலும் நான்கு அரிய உண்மைகளைத் தொகுத்துக் கூறும் வெண்பாக்களைக் கொண்ட நூல் நான்மணிக்கடிகை. கடவுள் வாழ்த்து இரண்டு உட்பட, இதில் 104 செய்யுட்கள் உள்ளன. இதன் ஆசிரியர் விளம்பி நாகனார். இந்நூல் எத்தகைய சீரிய கருத்துக்களை எடுத்துரைக்கிறது என்பதை பின் வரும் பாடல் உணர்த்தும்.

                            கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை கொண்டானின்

                            துன்னிய கேளிர் பிறர் இல்லை, மக்களின்

                            ஒண்மைய வாய்சான்ற பொருள் இல்லை ; ஈன்றாளொடு

                            எண்ணக் கடவுளும் இல்.

சிறுபஞ்சமூலம்

சிறுவழுதுணை, நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி என்பனவற்றின் வேர்கள் உடற்பிணி போக்கி நலம் செய்வது போல, மக்களின் அறியாமையைப் போக்க இதன் ஒவ்வொரு செய்யுளிலும் ஐந்து ஐந்தாகக்கூறியுள்ள அரிய கருத்துக்கள்  உதவுவதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் என்ற பெயர் பெற்றது.

இதன் ஆசிரியர் காரியாசான். இதில், சிறப்புப்பாயிரங்கள் இரண்டும் 104 வெண்பாக்களும் உள்ளன. இந்நூலில் பொய்ச்சான்று கூறுபவன் நாக்கு சாகும்(8), வலிமையில்லாதவன் சேவகம் செய்வதும், செந்தமிழை அறியாதான் கவிபுனைதலும் நகைப்புக்கு இடமானவை(10),  என்பனபோன்ற கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

ஏலாதி

ஏலம், இலவங்கம், நாக கேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு என்னும் ஆறு பொருள்களைக் கலந்து செய்வது ஏலாதிச் சூரணமாகும். இம்மருந்து போல, ஒவ்வொரு செய்யுளிலும் ஆறு அரிய அறக்கருத்துக்களைக் கொண்ட 80 வெண்பாக்களால் ஆன நூலும் ஏலாதி எனப் பெயர் பெற்றது. உடல்நோய் தீர்க்கும் ஏலாதிச் சூரணம் போல, இச் செய்யுட்களில் வற்புறுத்தப்படும் அறங்களும் அகநோய் நீக்கி நலம் செய்யும் என்பது கருத்து. இதன் ஆசிரியர் கணிமேதாவியார். திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியரும் இவரே.

இந்நூல் சமணர் சிறப்பாகப் போற்றும் கொல்லாமை, புலால்மறுத்தல், கள்ளுண்ணாமை என்னும் ஒழுக்கங்களை வற்புறுத்துகின்றன. மேலும், வீடுஇழந்தவர், கண்ணில்லார், தம் செல்வத்தை இழந்தவர், நெல் இழந்தவர், கால்நடைச் செல்வம் இழந்தவர் ஆகியோர்க்கு உணவு கொடுத்தவர் பல்யானைகளைக் கொண்டு உலகாளும் மன்னராய் வாழ்வர் (52) என்றும், கடன்பட்டவர், பாதுகாப்பு இல்லாதவர், கையில் பொருள் இல்லார், கால் முடம்பட்டவர், வயது முதிர்ந்தவர், வயதில் இளையார் ஆகியோருக்கு உணவு ஈந்தவரும் மண்மேல் படை கொண்டு ஆளும் பேறு அடைவர் (53) என்றும் கூறும் கருத்துக்கள் மனங்கொள்ளத்தக்கன. கல்வியின் சிறப்பை வற்புறுத்தும் பின்வரும் பாடல் என்றும் போற்றத்தக்கது

 

இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்

நடை வனப்பும், நாணின் வனப்பும் - புடை சால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல ; எண்ணோ(டு)

எழுத்தின் வனப்பே வனப்பு (74)

இன்னா நாற்பது

இது கடவுள் வாழ்த்து உள்பட 41 வெண்பாக்களைக் கொண்ட அறநூல். இதிலுள்ள ஒவ்வொரு பாட்டும் இன்னது இன்னது துன்பம் தருவது என்று கூறுவதால் இன்னா நாற்பது என்று பெயர் பெற்றது. இதன் ஆசிரியர் கபிலர். இவர் சங்க காலக் கபிலர் அல்லர் பிற்காலத்தவர்.

இந்நூலில், ஈன்றாளை ஓம்பாவிடல் இன்னா, (18), அடைக்கலம் வவ்வுதல் இன்னா (41), ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா (23), உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா (16), அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா (29), பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா (38) என துன்பம் தரக்கூடிய செயல்கள் இவைஇவை என நுட்பமாக எடுத்துரைக்கின்றது.

இனியவை நாற்பது

வாழ்விற்கு நன்மை தரும் இனிய அறக்கருத்துக்களைக் கூறும் நாற்பது வெண்பாக்களைக் கொண்ட நூல் இனியவை நாற்பதாயிற்று. இந்நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். நட்டார்க்கு நல்ல செயல் இனிது (17), மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே (13), கற்றறிந்தார் கூறும் கருமப்பொருள் இனிதே (32) என இனிமை தரக்கூடிய செயல்கள் எவை எவை என எடுத்துக்கூறுகின்றது.  

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது மூதுரை அல்லது முதுசொல்லாகும். அனுபவம் வாய்ந்த மூத்தோர் ஏனையோர்க்கு உலகியல் உண்மைகளை எடுத்துக் கூறுவது என்னும் பொருளில் முதுமொழிக் காஞ்சி எனப்பட்டது.

               காஞ்சியென்பது மகளிர் இடையில் அணியும் மணிக்கோவையும் ஆகும். அது போல முதுமொழிகள் பல கோக்கப்பட்ட நூல் என்னும் பொருளில் இப்பெயர் அமைந்தது என்றும் கூறலாம். இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்கிழார் எனக் குறிக்கப்படுகின்றார்.

இந்நூலில் பத்துப்பத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு பத்திலும் பத்து அறிவுரைகள் உள்ளன. ஒவ்வொரு பத்தும் ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் என்று தொடங்குகின்றது. ஒவ்வொரு பத்துக்கும் ஒவ்வொரு பெயர் தலைப்பாக அமைகிறது. அப்பெயர் அப்பத்தில் அமைந்த எல்லாப் பத்துப் பாடல்களின் அடிகளிலும் இடம்பெறும். சிறந்த பத்து, அறிவுப்பத்து, துவ்வாப்பத்து என்றவாறு அப்பெயர்கள் அமையும்.

ஆசாரக்கோவை

ஆசாரம்’ என்னும் வடசொல் ஒழுக்கம் என்று பொருள்படுவது. நல்லொழுக்கக் கோட்பாடுகளைத் தொகுத்துக் கோவையாகத் தருவதனால் இப்பெயர் பெற்றது. சிறப்புப் பாயிரம் நீங்கலாக இதில் நூறு வெண்பாக்கள் உள்ளன. வெண்பா வகையில் குறள், சிந்தியல், நேரிசை, இன்னிசை, பஃறொடை ஆகிய பல வகையும் இதில் உள்ளன. இது வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.  இதன் ஆசிரியர் பெருவாயில் முள்ளியார் என்னும் சான்றோர்.

அகத்தூய்மைக்கு உரிய உயர்ந்த அறங்களை வற்புறுத்துவதோடு, அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல ஒழுகலாறுகளையும் இது வற்புறுத்தியுள்ளது. காலையில் எழுதல், காலைக்கடன் கழித்தல், நீராடல், உணவு உட்கொள்ளல், உறங்குதல் ஆகிய நடைமுறைகளின் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை இது போல் வேறு எந்த நூலும் சொல்லவில்லை.

அகநூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அகப்பொருள் பற்றியன ஆறு நூல்களாகும். அவை (1) கார்நாற்பது (2) ஐந்திணை ஐம்பது (3) திணைமொழி ஐம்பது (4) ஐந்திணை எழுபது (5) திணைமாலை நூற்றைம்பது (6) கைந்நிலை என்பன.

கார் நாற்பது

இது முல்லைத்திணைக்குரிய ஆற்றியிருத்தல் என்னும் ஒழுக்கத்தினை அழகிய நாற்பது வெண்பாக்களால் விளக்கும் நூலாகும். முல்லையின் பெரும்பொழுதான கார்காலம் ஒவ்வொரு பாட்டிலும் சிறந்த முறையில் பாடப்படுவதால் இந்நூல் கார் நாற்பது எனப் பெயர் பெற்றது. இதன் ஆசிரியர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.

ஐந்திணை ஐம்பது

ஒவ்வொரு திணைக்கும் பத்துப் பாக்களாக ஐந்து திணைகளுக்கும் ஐம்பது வெண்பாக்களைக் கொண்ட நூலாதலின் இந்நூல் ஐந்திணை ஐம்பது என்று பெயர் பெற்றது. கருத்து வளமும் நடையழகும் கொண்ட இந்நூலை இயற்றியவர் மாறன் பொறையனார்.

திணைமொழி ஐம்பது

ஒவ்வொரு திணைக்கும் பத்துப்பாடல்கள் என ஐந்து திணைகளைப் பற்றிய ஐம்பது பாக்களைக் கொண்டு விளங்குவதால் இந்நூல் திணைமொழி ஐம்பது என்ற பெயர் பெற்றது. இதன் ஆசிரியர் கண்ணஞ்சேந்தனார்.

காயாச் செடி கண்மை போலப் பூக்க, குருக்கத்திச் செடி பெண்களின் பற்களைப் போன்று விளங்க, வெண் காந்தள் துடுப்பைப் போன்று மலர, நம் தலைவர் மணம் பேச வந்தார்; எனவே உன் தோள்கள் முன் போல் பூரிக்க” - என்பது இந்நூலின் மிக அழகிய பாட்டுகளுள் ஒன்றாகும்.

 

அஞ்சனம் காயா மலரக் குருகிலை

ஒண்தொடி நல்லார் முறுவல் கவின்கொளத்

தண்கமழ் கோடல் துடு்ப்பு ஈனக் காதலர்

வந்தார் திகழ்க நின்தோள் (21)

ஐந்திணை எழுபது

அன்பின் ஐந்திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பவற்றுள் ஒவ்வொன்றுக்கும் 14 செய்யுட்கள் வீதம் எழுபது செய்யுட்களைக் கொண்டிருப்பதனால் இப்பெயர் பெற்றது. இன்னிசை வெண்பாக்களாலும் நேரிசை வெண்பாக்களாலும் ஆன இந்நூலை இயற்றியவர் மூவாதியார்.

திணைமாலை நூற்றைம்பது

பதினெண்கீழ்க்கணக்கிலுள்ள அகநூல்களுள் பெரியது இதுவே. குறிஞ்சி முதலான அகத்திணை ஒழுகலாறுகளை வரிசைப்படுத்தி மாலைபோலத் தொகுத்து அமைத்தமையால் திணைமாலை ஆயிற்று. பாடல் எண்ணிக்கையால் திணைமாலை நூற்றைம்பதாயிற்று. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் எனத் திணை வரிசை அமைந்துள்ளது. ஒவ்வொரு திணைக்கும் முப்பது செய்யுட்கள் அமைந்திருத்தல் முறை. எனினும் குறிஞ்சி, நெய்தல், முல்லை என்னும் திணைகள் தலைக்கு 31 செய்யுட்களைப் பெற்றுள்ளன. மூன்று செய்யுட்கள் மிகைப்பாடல்களாகக் கருதத்தக்கனவாகும். இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார். இவர் சமணர்.

கைந்நிலை

கை’ என்பது ஒழுக்கம். இங்கு அகவொழுக்கத்தை இது குறிக்கும். ஐந்திணை ஒழுக்கம் பற்றிய நூல் என்பது ‘கைந்நிலை’ என்பதன் பொருள். திணைக்குப் பன்னிரண்டு வெண்பாக்கள் கொண்டது. இதன் ஆசிரியர் புல்லங்காடனார்.

களவழி நாற்பது

போர்க்கள நிகழ்ச்சிகளை நாற்பது வெண்பாக்களில் வருணித்துப் பாடும் நூல் களவழி நாற்பது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புறத்திணை சார்ந்த நூல் இஃது ஒன்றேயாகும். களவழி நாற்பதில் உள்ள நாற்பது வெண்பாக்களும் ‘களத்து’ என்று முடிகின்றன. இதன் ஆசிரியர் பொய்கையார் 

சோழன் செங்கணானுக்கும், சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் நடந்த போர் பற்றியது இந்நூல். இப்போரில் சேரன் தோற்று சிறையில் வாடியபோது பொய்கையார், இந்நூலைப் பாடிச் சோழனை மகிழ்வித்தார். அதற்குப் பரிசாகச் சேரன் விடுதலையை வேண்டிப் பெற்றார் என்பது இந்நூல் குறித்த வரலாறு. இதில் யானைப் போர் பற்றியே மிகுதியாகப் பாடப்பட்டுள்ளது.

 

எண்

நூல்

பொருள்

பாடல்

ஆசிரியர்

1

நாலடியார்

அறம்

400

சமண முனிவர்கள்

2

நான்மணிக்கடிகை

அறம்

106

விளம்பிநாகனார்

3

இன்னாநாற்பது

அறம்

40

கபிலர்

4

இனியவைநாற்பது

அறம்

40

பூதஞ்சேந்தனார்

5

திருக்குறள்

அறம்

1330

திருவள்ளுவர்

6

திரிகடுகம்

அறம்

100

நல்லாதனார்

7

ஆசாரக்கோவை

அறம்

100

பெருவாயில் முள்ளியார்

8

பழமொழி நானூறு

அறம்

400

முன்றுறை அரையனார்

9

சிறுபஞ்சமூலம்

அறம்

102

காரியாசான்

10

முதுமொழிக் காஞ்சி

அறம்

100

கூடலூர் கிழார்

11

ஏலாதி

அறம்

80

கணிமேதாவியார்

12

கார் நாற்பது

அகம்

40

கண்ணன் கூத்தனார்

13

ஐந்திணை ஐம்பது

அகம்

50

மாறன் பொறையனார்

14

ஐந்திணை எழுபது

அகம்

70

மூவாதியார்

15

திணைமொழி ஐம்பது

அகம்

50

கண்ணன் சேந்தனார்

16

திணைமாலை நூற்றைம்பது

அகம்

150

கணிமேதாவியார்

17

களவழி நாற்பது

புறம்

40

பொய்கையார்

18

கைந்நிலை

அகம்

60

புல்லாங்காடனார்

 

இன்னிலை

புறம்

45

பொய்கையார்

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் தமிழில்தோன்றிய முதல் காப்பியம். சமணக் காப்பியமான இந்நூலை இயற்றியவர் இளங்கோவடிகள். காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்த கோவலன் கண்ணகியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைப்பதாக இந்நூல் விளங்குகிறது. இந்நூல் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.

இந்தக் காப்பியத்தின் கதை சிலம்பினைக் காரணமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயரிடப்பட்டது. இந்நூலின் காலம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு. இளங்கோ அடிகள் இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் சிறப்பித்துப் பாடியதால் இந்நூல் முத்தமிழ்க் காப்பியம் எனப் போற்றப்படுகிறது. இதில் உரைநடையும் கலந்திருத்தலின், இந்நூல் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் குறிப்பிடப்படுகிறது. உலக மக்கள் அனைவரும் அறிந்து பயன்கொள்ளும் வகையில் இக்காப்பியம்

1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்,

3. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் 

என்ற  மூன்று உண்மைகளைக் கருப்பொருளாகக் கொண்டு அமைந்துள்ளது. தமிழர்தம் பண்பாடு, சமய நெறிகள், பழக்க வழக்கங்கள், கலைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள இக்காப்பியம் பெரிதும் உதவுகிறது. இக்கதையை, இதன் ஆசிரியரான இளங்கோவடிகள் சொல்ல, மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் கேட்டார் என்கிறது சிலப்பதிகாரம். இக்காப்பியத்தை  பாரதியார் “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாராட்டியுள்ளார்.

மணிமேகலை

தமிழில் வழங்கும் ஐம்பெருங்காப்பியங்களுள் இது இரண்டாவது. சிலப்பதிகாரத் தலைவன் கோவலனுக்கு மாதவியிடத்துப் பிறந்தவளான மணிமேகலையைக் காவியத் தலைவியாகக் கொண்டமையால், அவள் பெயராலேயே இந்நூலும் அறியப்படுகிறது. மணிமேகலை துறவு என்பது ஆசிரியர் இட்ட பெயர் என்று கூறுவர். இது சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் பாத்திரங்கள் பல இதிலும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தின் கதையென்பதால், சிலப்பதிகார சாரத்தையும் இதனையும் இணைத்து இரட்டைக் காப்பியங்கள் என வழங்குவர்.

இதனை இயற்றியவர் வளம்கெழு கூலவாணிகன் சாத்தன். இவர் இளங்கோவடிகளின் நண்பர் என்றும், அவர் படைத்த சிலம்பை முதலில் கேட்டவர் இவரே என்றும் கூறுவர். அவ்வாறே, இவருடைய இக்காவியத்தை இளங்கோவடிகள் கேட்டார் என்பர்.

மணிமேகலை ‘விழாவறை காதை’ முதல் ‘பவத்திறம் அறுக எனப் பாவைநோற்ற காதை’ முடிய முப்பது காதைகள் கொண்டது. இது சிலப்பதிகாரம் போல் பல செய்யுள் வகைகளைக் கொண்டதன்று. இது முழுவதும் அகவற்பாவாலான காவியமாகும்.

முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம் சேர சோழ பாண்டியர்களின் புகழை வெண்பா யாப்பில் பாடுவது. இம்மூவேந்தர்களும் இப்பாடல்களில் மூன்று குடியினருக்கும் உரிய கோதை, கிள்ளி, மாறன் முதலான பொதுவான பெயர்களால் சுட்டப்பட்டு சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளனர். இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயரும் அறியப்படவில்லை. புறத்திரட்டு என்னும் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்ட 108 செய்யுட்களே முத்தொள்ளாயிரம் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நூல் மூன்று வேந்தர்களைப் பற்றி பாடப்பட்ட 900(300X3=900) பாடல்களைக் கொண்ட நூல் என்றும், மூவேந்தருள் ஒவ்வொருவரையும் தனித்தனியே தொள்ளாயிரம் பாடல்களில் (900X3 =2700)   புகழ்ந்து பாடப்பட்ட நூல் என்றும் இருவேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.  இதன் அடிப்படையிலேயே இந்நூல் முத்தொள்ளாயிரம் என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிஞர்கள் இந்நூலின் காலத்தை கி.பி. 5ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பிடுகின்றனர். இந்நூலின் பெரும் பகுதி பெண்பாற் கைக்கிளையாகவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறையனார் அகப்பொருள்

இறையனார் அகப்பொருள் என்பது அகப்பொருள் இலக்கணத்தை எடுத்துக்கூறும் நூல். இந்த நூலை மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று அதன் நக்கீரர் உரை கூறுகிறது. இறையனார் என்னும் பெயர் கொண்ட ஒருவர் இயற்றியிருக்கவேண்டும், அல்லது இந்த நூலை இயற்றியவர் யார் என்று தெரியாத நிலையில் இறையனார் இயற்றினார் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இந்த நூல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியிருக்கலாம். இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரர் (இந்த நக்கீரனார் சங்கப்பாடல்களைப் பாடிய நக்கீரர் அல்லர்) தமது உரைக்கு மேற்கோளாகப் பாண்டிக்கோவை என்னும் நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார்.

அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்னும் நான்கு இயல்களில் தொல்காப்பியம் கூறும் அகப்பொருள் இலக்கணத்தை இந்த நூல் 60 நூற்பாக்களில் சுருக்கமாகக் கூறுகிறது.

கருத்துகள் இல்லை: