ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம் - வழக்குரைகாதை

சிலப்பதிகாரம் 

மதுரைக் காண்டம் 

10. வழக்குரை காதை

கண்ணகி, ஒற்றைச் சிலம்பை ஏந்தி நகரினுள் வந்து, நகர மாந்தரை நோக்கி முறையிட்டு, அழுதல்

ஆங்கு,

குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும்

கடை மணியின் குரல் காண்பென்-காண், எல்லா!

திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்; அன்றி,

கதிரை இருள் விழுங்கக் காண்பென்-காண், எல்லா!               5

விடும் கொடி வில் இர; வெம் பகல் வீழும்

கடுங் கதிர் மீன்: இவை காண்பென்-காண், எல்லா!’   

கருப்பம்

செங்கோலும், வெண்குடையும்,

செறி நிலத்து மறிந்து வீழ்தரும்;                                                   10

நம் கோன்-தன் கொற்ற வாயில்

மணி நடுங்க, நடுங்கும் உள்ளம்;

இரவு வில் இடும்; பகல் மீன் விழும்;

இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;

வருவது ஓர் துன்பம் உண்டு;                                                        

மன்னவற்கு யாம் உரைத்தும்’ என-       

கோப்பெருந்தேவி தான் கண்ட கனவை மன்னனுக்கு உரைத்தல்

ஆடி ஏந்தினர், கலன் ஏந்தினர்,

அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்;

கோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்,

கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர்,                                       

வண்ணம் ஏந்தினர், சுண்ணம் ஏந்தினர்,                                      15

மான்மதத்தின் சாந்து ஏந்தினர்,

கண்ணி ஏந்தினர், பிணையல் ஏந்தினர்,

கவரி ஏந்தினர், தூபம் ஏந்தினர்:

கூனும், குறளும், ஊமும், கூடிய                                                  

குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர;

நரை விரைஇய நறுங் கூந்தலர்,

உரை விரைஇய பலர் வாழ்த்திட

ஈண்டு நீர் வையம் காக்கும்

பாண்டியன் பெருந்தேவி! வாழ்க’ என,

ஆயமும் காவலும் சென்று

அடியீடு பரசி ஏத்த;

கோப்பெருந்தேவி சென்று தன்                                                    20

தீக் கனாத் திறம் உரைப்ப-

அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்,

திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே- இப்பால்,

கண்ணகி வாயிலோனுக்கு அறிவித்தல்

வாயிலோயே! வாயிலோயே!

அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து,                          25

இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!

இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்,

கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று

அறிவிப்பாயே! அறிவிப்பாயே!’ என-      

கண்ணகி வந்ததை வாயில் காப்போன் மன்னனுக்குத் தெரிவித்தல்

வாயிலோன், ‘வாழி! எம் கொற்கை வேந்தே, வாழி!               30

தென்னம் பொருப்பின் தலைவ, வாழி!

செழிய, வாழி! தென்னவ, வாழி!

பழியொடு படராப் பஞ்சவ, வாழி!

அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்

பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,                                    35

வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;

அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை

ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்

கானகம் உகந்த காளி, தாருகன்

பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;                                   40

செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;

பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;

கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே;

கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே’ என-

கண்ணகி அவையை அணுகுதல்

வருக, மற்று அவள் தருக, ஈங்கு’ என-                                       45

வாயில் வந்து, கோயில் காட்ட,

கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-               

பாண்டியன் வினவல் 

நீர் வார் கண்ணை, எம் முன் வந்தோய்!

யாரையோ, நீ? மடக்கொடியோய்!’ என-

கண்ணகியின் மறுமொழி

தேரா மன்னா! செப்புவது உடையேன்;                                     50

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,

புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,

வாயில் கடை மணி நடு நா நடுங்க,

ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்

அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்                     55

பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,

ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி

மாசாத்து வாணிகன் மகனை ஆகி,

வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,

சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு                           60

என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;

கண்ணகி என்பது என் பெயரே’ என- ‘பெண் அணங்கே!

மன்னவன் உரைத்த விடை

கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;

வெள் வேல் கொற்றம்-காண்’ என- ஒள்-இழை,                       65

கண்ணகி தன் சிலம்பின் தன்மை இது என அறிவித்தல்

நல் திறம் படராக் கொற்கை வேந்தே!

என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என-   

பாண்டிய மன்னன் தனது தேவியின் சிலம்பில் உள்ள பரல்கள் (அரி)முத்து எனக் கூறிகாவலர் கொண்டுவந்த சிலம்பைக் கண்ணகியின் முன் வைத்தல்.

தேமொழி! உரைத்தது செவ்வை நல் மொழி;

யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே;

தருக’ எனத் தந்து, தான் முன் வைப்ப-                                        70

கண்ணகி சிலம்பை உடைத்தலும் பாண்டியன் முகத்தில் மணி தெறித்தலும்.

 கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப,

மன்னவன் வாய்முதல் தெறித்தது, மணியே- மணி கண்டு,    

பாண்டியன் உண்மை உணர்ந்து உயிர் துறத்தல்

தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,

பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட

யனோ அரசன்? யானே கள்வன்;                                                  75

மன்பதை காக்கும் தென் புலம் காவல்

என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என

மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்

கோப்பெருந்தேவியும் உடன் உயிர் துறத்தல்

கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று              80

இணை அடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி.             

வெண்பா

அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம்’ என்னும்,

பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே-பொல்லா

வடுவினையே செய்த வய வேந்தன் தேவி!

கடு வினையேன் செய்வதூஉம் காண்.


காவி உகு நீரும், கையில் தனிச் சிலம்பும்,

ஆவி குடிபோன அவ் வடிவும், பாவியேன்!

காடு எல்லாம் சூழ்ந்த கருங் குழலும்-கண்டு, அஞ்சி,

கூடலான் கூடு ஆயினான்.

 

மெய்யில் பொடியும், விரித்த கருங் குழலும்,

கையில் தனிச் சிலம்பும், கண்ணீரும், வையைக் கோன்

கண்டளவே தோற்றான்; அக் காரிகை-தன் சொல் செவியில்

உண்டளவே தோற்றான், உயிர்.

 

முற்றும்.

கருத்துகள் இல்லை: