திங்கள், 4 செப்டம்பர், 2023

பாபஞ் செய்யாதிரு மனமே - கடுவெளி சித்தர்

பாபஞ் செய்யாதிரு மனமே

கடுவெளி சித்தர்

 

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்

    கோபஞ்செய் தேயமன்

கொண்டோடிப் போவான்

    பாபஞ்செய் யாதிரு மனமே.

 

சாபங்கொடுத்திட லாமோ - விதி

      தன்னைநம் மாலே தடுத் திடலாமோ

கோபந் தொடுத்திட லாமோ - இச்சை

     கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ.

 

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற்

      சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்

நல்லபத் திவிசு வாசம் - எந்த

      நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்.

 

நீர்மேற் குமிழியிக் காயம் - இது

       நில்லாது போய்விடும் நீயறி மாயம்

பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்

       பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்.        

 

நந்த வனத்திலோ ராண்டி - அவன்

        நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்

        கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.     

 

தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்

        சொத்துக்க ளிலொரு தூசும் நில் லாதே

ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத்

        திச்சைவைத் தாலெம லோகம் பொல் லாதே.   

             

நல்ல வழிதனை நாடு - எந்த

        நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த

        வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு.          

             

நல்லவர் தம்மைத்தள் ளாதே - அறம்

        நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே

பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட

        பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.      

 

வேத விதிப்படி நில்லு - நல்லோர்

        மேவும் வழியினை வேண்டியே செல்லு

சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச்

        சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு.      

 

பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில்

        பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே

இச்சைய துன்னை யாளாதே - சிவன்

        இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே.    

 

மெய்ஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த

        வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை

        அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு.    

 

மெய்க்குரு சொற்கட வாதே - நன்மை

     மென்மேலுஞ்செய்கை மிகவடக் காதே

பொய்க்கலை யால்நட வாதே - நல்ல

     புத்தியைப் பொய்வழி தனில்நடத் தாதே.      

 

கூட வருவதொன் றில்லை - புழுக்

     கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை

தேடரு மோட்சம தெல்லை - அதைத்

     தேடும் வழியைத் தெளிவோரு மில்லை.       

 

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த

     ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு

முந்தி வருந்திநீ தேடு - அந்த

     மூலம் அறிந்திட வாமுத்தி வீடு.

 

உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை

     ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை

கள்ளப் புலனென்னும் காட்டை - வெட்டிக்

     கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை.          

 

காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்

     கங்கையா டில்கதி தானுமுண் டாமோ

பேசமுன் கன்மங்கள் சாமோ - பல

     பேதம் பிறப்பது போற்றினும் போமோ.        

 

பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்

     போகவே வாய்த்திடும் யாவர்க்கும்போங் காலம்

மெய்யாக வேசுத்த சாலம் - பாரில்

     மேவப் புரிந்திடில் என்னனு கூலம்.      

 

சந்தேக மில்லாத தங்கம் - அதைச்

     சார்ந்துகொண் டாலுமே தாழ்வில்லா பொங்கம்

அந்தமில் லாதவோர் துங்கம் - எங்கும்

     ஆனந்த மாக நிரம்பிய புங்கம்.    

 

பாரி லுயர்ந்தது பத்தி - அதைப்

     பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி

சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்

     சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.           

 

அன்பெனும் நன்மலர் தூவிப் - பர

     மானந்தத் தேவின் அடியினை மேவி

இன்பொடும் உன்னுட லாவி - நாளும்

     ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி.   

 

ஆற்றறும் வீடேற்றங் கண்டு - அதற்

     கான வழியை யறிந்து நீ கொண்டு

சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி

     சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கொண்டு.         

 

ஆன்மாவா லாடிடு மாட்டந் - தேகத்

     தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்

வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்

     வையி லுனக்கு வருமே கொண் டாட்டம்.     

 

எட்டு மிரண்டையும் ஓர்ந்து - மறை

     எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து

வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த

     வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.

 

இந்த வுலகமு முள்ளுஞ் - சற்றும்

     இச்சைவை யாமலே எந்நாளுந் தள்ளு

செந்தேன்வெள் ளமதை மொள்ளு - உன்றன்

     சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு.    

 

பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்

     போதகர் சொற்புத்தி போதவோ ராதே

மைவிழி யாரைச்சா ராதே - துன்

     மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே.  

 

வைதோரைக் கூடவை யாதே - இந்த

     வைய முழுதும் பொய்த் தாலும்பொய் யாதே

வெய்ய வினைகள்செய் யாதே - கல்லை

     வீணில் பறவைகள் மீதிலெய் யாதே.   

 

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்

     தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே

தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல

     சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே.     

 

பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்

     பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே

வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்

     வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே. 

 

போற்றுஞ் சடங்கைநண் ணாதே - உன்னைப்

     புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே

சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே - பிறர்

     தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே.       

 

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி

     காட்டி மயங்கியே கட்குடி யாதே

அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி

     அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.   

 

பத்தி யெனுமேனி நாட்டித் - தொந்த

     பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி

சத்திய மென்றதை யீட்டி - நாளுந்

     தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி.      

 

செப்பரும் பலவித மோகம் - எல்லாம்

     சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்

ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்

     ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம்.          

 

எவ்வகை யாகநன் னீதி - அவை

     எல்லா மறிந்தே யெடுத்துநீபோதி

ஒவ்வாவென்ற பல சாதி - யாவும்

     ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 

 

கள்ளவே டம்புனை யாதே - பல

     கங்கையி லேயுன் கடம்நனை யாதே

கொள்ளைகொள் ளநினை யாதே - நட்புக்

     கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாதே.         

 

எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர்

     இன்ப இருதயத் திருந்திடும் வாசன்

துங்க அடியவர் தாசன் - தன்னைத்

     துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.


                               முற்றும்

கருத்துகள் இல்லை: