பாபஞ் செய்யாதிரு மனமே
கடுவெளி சித்தர்
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சாபங்கொடுத்திட லாமோ - விதி
தன்னைநம்
மாலே தடுத் திடலாமோ
கோபந் தொடுத்திட லாமோ - இச்சை
கொள்ளக்
கருத்தைக் கொடுத்திட லாமோ.
சொல்லருஞ் சூதுபொய் மோசம் -
செய்தாற்
சுற்றத்தை
முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத் திவிசு வாசம் - எந்த
நாளும்
மனிதர்க்கு நன்மையாம் நேசம்.
நீர்மேற் குமிழியிக் காயம் -
இது
நில்லாது
போய்விடும் நீயறி மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் -
சற்றும்
பற்றா
திருந்திடப் பண்ணு முபாயம்.
நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு
மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி -
மெத்தக்
கூத்தாடிக்
கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.
தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்
சொத்துக்க
ளிலொரு தூசும் நில் லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சைவைத்
தாலெம லோகம் பொல் லாதே.
நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும்
பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு -
அந்த
வள்ளலை
நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு.
நல்லவர் தம்மைத்தள் ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே
- கெட்ட
பொய்ம்மொழிக்
கோள்கள் பொருந்த விள்ளாதே.
வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும்
வழியினை வேண்டியே செல்லு
சாதக நிலைமையே சொல்லு -
பொல்லாச்
சண்டாளக்
கோபத்தைச் சாதித்துக் கொல்லு.
பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே -
எழில்
பெண்ணாசை
கொண்டு பெருக்கமா ளாதே
இச்சைய துன்னை யாளாதே - சிவன்
இச்சைகொண்
டவ்வழி யேறிமீ ளாதே.
மெய்ஞ்ஞானப் பாதையி லேறு -
சுத்த
வேதாந்த
வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு -
உன்னை
அண்டினோர்க்
கானந்த மாம்வழி கூறு.
மெய்க்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ்செய்கை மிகவடக் காதே
பொய்க்கலை யால்நட வாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில்நடத் தாதே.
கூட வருவதொன் றில்லை - புழுக்
கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை.
ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு -
இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு.
உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னும் காட்டை -
வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை.
காசிக்கோ டில்வினை போமோ -
அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ
பேசமுன் கன்மங்கள் சாமோ - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ.
பொய்யாகப் பாராட்டுங் கோலம் -
எல்லாம்
போகவே வாய்த்திடும் யாவர்க்கும்போங் காலம்
மெய்யாக வேசுத்த சாலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம்.
சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்துகொண் டாலுமே தாழ்வில்லா பொங்கம்
அந்தமில் லாதவோர் துங்கம் -
எங்கும்
ஆனந்த மாக நிரம்பிய புங்கம்.
பாரி லுயர்ந்தது பத்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி -
யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.
அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவின் அடியினை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி.
ஆற்றறும் வீடேற்றங் கண்டு -
அதற்
கான வழியை யறிந்து நீ கொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங்
கொண்டு.
ஆன்மாவா லாடிடு மாட்டந் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் -
நாளும்
வையி லுனக்கு வருமே கொண் டாட்டம்.
எட்டு மிரண்டையும் ஓர்ந்து -
மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து -
ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.
இந்த வுலகமு முள்ளுஞ் - சற்றும்
இச்சைவை யாமலே எந்நாளுந் தள்ளு
செந்தேன்வெள் ளமதை மொள்ளு -
உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு.
பொய்வேதந் தன்னைப் பாராதே -
அந்தப்
போதகர் சொற்புத்தி போதவோ ராதே
மைவிழி யாரைச்சா ராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே.
வைதோரைக் கூடவை யாதே - இந்த
வைய முழுதும் பொய்த் தாலும்பொய் யாதே
வெய்ய வினைகள்செய் யாதே - கல்லை
வீணில் பறவைகள் மீதிலெய் யாதே.
சிவமன்றி வேறே வேண்டாதே -
யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே -
நல்ல
சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே.
பாம்பினைப் பற்றியாட் டாதே -
உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே -
உன்றன்
வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே.
போற்றுஞ் சடங்கைநண் ணாதே -
உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே
சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே -
பிறர்
தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே.
கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கியே கட்குடி யாதே
அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி
அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.
பத்தி யெனுமேனி நாட்டித் -
தொந்த
பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி
சத்திய மென்றதை யீட்டி - நாளுந்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி.
செப்பரும் பலவித மோகம் -
எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் -
நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம்.
எவ்வகை யாகநன் னீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்துநீபோதி
ஒவ்வாவென்ற பல சாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி.
கள்ளவே டம்புனை யாதே - பல
கங்கையி லேயுன் கடம்நனை யாதே
கொள்ளைகொள் ளநினை யாதே - நட்புக்
கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாதே.
எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.
முற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக