வெள்ளி, 15 செப்டம்பர், 2023

கடமையைச் செய் - மீரா

கவிஞர் மீரா

  • தமிழ்க் கவிஞர்களுள் பாரதியைப்போல் சமூகப் போராளியாகத் திகழ்ந்தவர் கவிஞர் மீரா.
  • இவரது இயற்பெயர் மீ. ராஜேந்திரன்.
  • சிவகங்கையில் எஸ். மீனாட்சிசுந்தரம் - இலட்சுமி அம்மாள் இணையருக்கு மகனாக அக்டோபர் 10, 1938-ல் பிறந்தார்.
  • சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
  • கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
  • திராவிட இயக்க ஆதரவாளரான இவர், திராவிட இயக்க இதழ்களில் கவிதைகள் எழுதினார்.
  • அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பெற்றவர்.
  • 1972-ல் வானம்பாடி இதழ் தொடங்கப்பட்டபோது அதில் ஆர்வம் கொண்டு புதுக்கவிதைகள் எழுதினார்.
  • கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள் என்னும் அவருடைய தொகுதி இளைஞர்கள் நடுவே பெரும்புகழ் பெற்றது.
  • அன்னம், அகரம் என்ற பெயர்களில் பதிப்பகங்களைத் தொடங்கி சிறந்த நூல்களையும் இளம் படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டார்.
  • மீரா செப்டம்பர் 1, 2002-ல் மறைந்தார்.
  • மீராவின் நூல்கள் 2008-ல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது.

கவிஞர் மீராவின் படைப்புக்கள்

திறனாய்வு நூல்கள்

மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு

கவிதை

மீ.இராசேந்திரன் கவிதைகள்

மூன்றும் ஆறும்

மன்னர் நினைவில்

கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்

ஊசிகள்

கோடையும் வசந்தமும்

குக்கூ 

கட்டுரை நூல்கள்

வா இந்தப் பக்கம்

எதிர்காலத் தமிழ்க்கவிதை

மீரா கட்டுரைகள் 

முன்னுரைகள்

முகவரிகள் 

கலந்துரையாடல்

             கவிதை ஒரு கலந்துரையாடல் - மீராவும் பாலாவும்

தொகுப்பு நூல்கள்

தேன்சுவை (மீரா, அப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களின் மரபுக் கவிதைகள்)

பாரதியம் (கவிதைகள்)

பாரதியம் (கட்டுரைகள்)

சுயம்வரம் (கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றின் கதம்பம்)

நடத்திய இதழ்கள்

அன்னம் விடு தூது

கவி

பெற்ற விருதுகள்

தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு

பாவேந்தர் விருது

சிற்பி இலக்கிய விருது

தமிழ்ச் சான்றோர் பேரவை விருது



கடமையைச் செய்    

-     மீரா

 

 

பத்து மணிக்குச்

சரியாய் நுழைந்தேன்

 

கூடஇருப்போரிடத்தில்               

கொஞ்சம்

குசல விசாரணை

 

தலை வலித்தது.

தேநீர் குடிக்க

நாயர் கடைக்கு நடந்தேன்

 

ஊரில் இருந்து

யாரோ வந்தார்

ஒருமணி நேரம்

உரையாடல்

 

இடையில்

உணவை மறக்கலாமா?

 

உண்டு தீர்த்த

களைப்புத் தீர

ஒரு கன்னித் தூக்கம்

 

முகத்தை அலம்பிச்

சிற்றுண்டி நிலையம்

சென்று திரும்பினேன்

 

வேகமாய்

விகடனும் குமுதமும்

படித்து முடித்தேன்

 

மெல்லக்

காகிதக் கட்டை எடுத்துத்

தூசியைத் தட்டித்துடைத்துக்

கடைமையைச் செய்யத்

தொடங்கும் போது...

கதவை அடைத்தான்

காவற் காரன்

 

மணி ஐந்தாயிற்றாம்!


 

கருத்துகள் இல்லை: