ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

மணிமேகலை - பாத்திரம் பெற்ற காதை

மணிமேகலை

பாத்திரம் பெற்ற காதை


மணிமே கலாதெய்வம் நீங்கிய பின்னர்

மணிபல் லவத்திடை மணிமே கலைதான்

வெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும்

தண்மலர்ப் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக்

காவதம் திரியக் கடவுள் கோலத்துத்                                            5

 

தீவ திலகை செவ்வனந் தோன்றிக்

கலம்கவிழ் மகளிரின் வந்துஈங்கு எய்திய

இலங்குதொடி நல்லாய் யார்நீ என்றலும்,

எப்பிறப் பகத்துள் யார்நீ என்றது

பொன்கொடி அன்னாய் பொருந்திக் கேளாய்                           10

 

போய பிறவியில் பூமியங் கிழவன்

இராகுலன் மனையான் இலக்குமி என்பேர்

ஆய பிறவியில் ஆடலங் கணிகை

மாதவி ஈன்ற மணிமே கலையான்

என்பெயர்த் தெய்வம் ஈங்குஎனைக் கொணரஇம்                   15

 

மன்பெரும் பீடிகை என்பிறப்பு உணர்ந்தேன்

ஈங்குஎன் வரவுஇதுஈங்கு எய்திய பயன்இது

பூங்கொடி அன்னாய் யார்நீ என்றலும்,

ஆயிழை தன்பிறப்பு அறிந்தமை அறிந்த

தீவ திலகை செவ்வனம் உரைக்கும்                                             20

 

ஈங்குஇதன் அயலகத்து இரத்தின தீவத்து

ஓங்குஉயர் சமந்தத்து உச்சி மீமிசை

அறவியங் கிழவோன் அடிஇணை ஆகிய

பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்

அறவி நாவாய் ஆங்குஉளது ஆதலின்                                          25

               

தொழுதுவலம் கொண்டு வந்தேன் ஈங்குப்

பழுதுஇல் காட்சிஇந் நன்மணிப் பீடிகை

தேவர்கோன் ஏவலின் காவல் பூண்டேன்

தீவ திலகை என்பெயர் இதுகேள்:

தரும தலைவன் தலைமையின் உரைத்த                                    30

 

பெருமைசால் நல்அறம் பிறழா நோன்பினர்

கண்டுகை தொழுவோர் கண்டதன் பின்னர்ப்

பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி

அரியர் உலகத்து ஆகுஅவர்க்கு அறமொழி

உரியது உலகத்து ஒருதலை யாக                                                   35

 

ஆங்ஙனம் ஆகிய அணியிழை இதுகேள்

ஈங்குஇப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது

மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய

கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி

இருதுஇள வேனிலில் எரிகதிர் இடபத்து                                  40

 

ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்

மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்

போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்

ஆபுத் திரன்கை அமுத சுரபிஎனும்

மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்                                45

 

அந்நாள் இந்நாள் அப்பொழுது இப்பொழுது

நின்ஆங்கு வருவது போலும் நேர்இழை

ஆங்குஅதின் பெய்த ஆர்உயிர் மருந்து

வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது

தான்தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்                        50

 

நறுமலர்க் கோதை நின்ஊர் ஆங்கண்

அறவணன் தன்பால் கேட்குவை இதன்திறம்

என்றுஅவள் உரைத்தலும், -இளங்கொடி விரும்பி

மன்பெரும் பீடிகை தொழுதனள் வணங்கித்

தீவ திலகை தன்னொடும் கூடிக்                                                   55

 

கோமுகி வலம்செய்து கொள்கையின் நிற்றலும்

எழுந்துவலம் புரிந்த இளங்கொடி செங்கையில்

தொழுந்தகை மரபின் பாத்திரம் புகுதலும்.

பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள்

மாத்திரை இன்றி மனமகிழ் எய்தி                                                60

 

மாரனை வெல்லும் வீர நின்அடி

தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்அடி

பிறர்க்குஅறம் முயலும் பெரியோய் நின்அடி

துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்அடி

எண்பிறக்கு ஒழிய இறந்தோய் நின்அடி                                     65

 

கண்பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்அடி

தீமொழிக்கு அடைத்த செவியோய் நின்அடி

வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி

நரகர் துயர்கெட நடப்போய் நின்அடி

உரகர் துயரம் ஒழிப்போய் நின்அடி                                             70

               

வணங்குதல் அல்லது வாழ்த்தல்என் நாவிற்கு

அடங்காது என்ற ஆயிழை முன்னர்,

போதி நீழல் பொருந்தித் தோன்றும்

நாதன் பாதம் நவைகெட ஏத்தித்

தீவ திலகை சேயிழைக்கும் உரைக்கும்:                                     75

 

குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவிஅது தீர்த்தோர்                                   80

 

இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது

புல்மரம் புகையப் புகைஅழல் பொங்கி

மன்உயிர் மடிய மழைவளம் கரத்தலின்

அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன்

இருநில மருங்கின் யாங்கணும் திரிவோன்                                85

 

அரும்பசி களைய ஆற்றுவது காணான்

திருந்தா நாய்ஊன் தின்னுதல் உறுவோன்

இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்

வந்து தோன்றிய வானவர் பெருந்தகை

மழைவளம் தருதலின் மன்உயிர் ஓங்கிப்                                   90

 

பிழையா விளையுளும் பெருகியது அன்றோ

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்                           95

 

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்

கயக்குஅறு நல்அறம் கண்டனை என்றலும்,

விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன்

திட்டி விடம்உணச் செல்உயிர் போவுழி                                     100

 

உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து

வெயில்விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய

சாது சக்கரன் தனையான் ஊட்டிய

காலம் போல்வதுஓர் கனாமயக்கு உற்றேன்

ஆங்குஅதன் பயனே ஆர்உயிர் மருந்தாய்                                   110

 

ஈங்குஇப் பாத்திரம் என்கைப் புகுந்தது

நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து

வித்தி நல்அறம் விளைந்த அதன்பயன்

துய்ப்போர் தம்மனைத் துணிச்சிதர் உடுத்து

வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி                            115

 

வெயில்என முனியாது புயல்என மடியாது

புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்

அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்

ஈன்ற குழவி முகங்கண்டு இரங்கித்

தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே                                 120

 

நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து

அகன்சுரைப் பெய்த ஆர்உயிர் மருந்துஅவர்

முகம்கண்டு சுரத்தல் காண்டல்வேட் கையேன்என,

மறந்தேன் அதன்திறம் நீஎடுத்து உரைத்தனை

அறம்கரி யாக அருள்சுரந்து ஊட்டும்                                           125

 

 சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது

ஆங்ஙனம் ஆயினை அதன்பயன் அறிந்தனை

ஈங்குநின்று எழுவாய் என்றுஅவள் உரைப்ப,

தீவ திலகை தன்அடி வணங்கி

மாபெரும் பாத்திரம் மலர்க்கையில் ஏந்திக்                               130

 

 கோமகன் பீடிகை தொழுது வலம்கொண்டு

வான்ஊடு எழுந்து மணிமே கலைதான்

வழுஅறு தெய்வம் வாய்மையின் உரைத்த

எழுநாள் வந்தது என்மகள் வாராள்

வழுவாய் உண்டுஎன மயங்குவோள் முன்னர்                          135

 

 வந்து தோன்றி,

அந்தில் அவர்க்குஓர் அற்புதம் கூறும்

இரவி வன்மன் ஒருபெரு மகளே

துரகத் தானைத் துச்சயன் தேவி

அமுத பதிவயிற்று அரிதில் தோன்றித்                                         140

 

தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்

அவ்வையர் ஆயினீர் நும்மடி தொழுதேன்

வாய்வ தாக மானிட யாக்கையில்

தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்குஈங்கு

அறவண வடிகள் தம்பால் பெறுமின்                                          145

 

செறிதொடி நல்லீர் உம்பிறப்பு ஈங்குஇஃது

ஆபுத் திரன்கை அமுத சுரபிஎனும்

மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழும்எனத்

தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும்

பழுதுஅறு மாதவன் பாதம் படர்கேம்                                        150

எழுகென எழுந்தனள் இளங்கொடி தான்என்.

 

 

முற்றும்

கருத்துகள் இல்லை: